செவ்வாய், 8 நவம்பர், 2016

மோடியின் செல்லாத ரூபாய் அறிவிப்பு நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?

இன்று பாரத பிரதமர் மோடி அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அதனை மாற்றிக் கொண்டு வங்கிகளில் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்து உள்ளார்.


உண்மையில் எவரும் இந்த அளவு துணிச்சலான முடிவு எடுக்க தயங்குவார்கள்.

அந்த வகையில் மோடியை எதிர்ப்பவர்களும் இதனை வரவேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்பதே உண்மை.



இந்த அறிவிப்பால் வரும் மூன்று நாட்கள் நமது தினசரி வாழ்க்கை கூட அதிகம் பாதிக்கப்படலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை பெரிதும் துணை புரியும்.

சிம்பிளான லாஜிக் என்று பார்த்தால்,
ரிசர்வ் வங்கிக்கு இது வரை தாம் அடித்து வைத்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை நன்றாகவே தெரியும்.

இந்த நடவடிக்கை மூலம் திருப்பி வந்துள்ளது எவ்வளவு குறைந்துள்ளது என்று பார்க்கும் போதே ஓரளவு கருப்பு பணத்தினை கணக்கிட முடியும்.

இன்னொரு வழியில் பார்த்தால்,
இன்னும் கோடிக்கணக்கில் பணத்தினை பதுக்கி வைத்துள்ளவர்கள் வங்கிகளில் திருப்பி கொடுத்து மாற்ற வேண்டும்.

அப்படி மாற்ற வேண்டும் என்றால் வரிக் கணக்கில் மாட்டுவார்கள். அதனால் வரி கட்ட முற்படும் போது அரசுக்கு வரி வருமானம் கூடும்.

ஐந்து சதவீதம் பேர் மட்டும் வருமான வரி கட்டும் இந்தியாவில் ஐம்பது சதவீதம் பேரும் வரி கட்டுவதாக வந்தால் தற்போது அளவுக்கு அதிகமான வரி விதிக்க வேண்டிய தேவையே இருக்காது.

அதே நேரத்தில் பெருமளவு பணம் வங்கிக்கு திரும்பும் போது அதிக அளவு பணத்தை வங்கிகள் கடனாக கொடுக்க முற்படுவார்கள். அவ்வாறு கொடுக்கும் போது வட்டி விகிதங்கள் தானாகவே குறையும். அதனால் தொழில் துறையும் வளரும்.

இறுதியாக,
கருப்பு பணத்திலே வணிகம் நடத்தப்பெறும் ரியல் எஸ்டேட், தங்க நகைக் கடைகளின் வியாபாரம் இந்த நடவடிக்கையால் பெருமளவு தடை பெறும்.

குறைந்த அளவு பணம் இந்த துறைகளில் புழங்கப் பெறும் போது இவற்றின் விலைகளும் தானாக குறையும். இதனால் இந்த துறை சார்ந்த பங்குகளும் நாளை சரியான அடி வாங்க வாய்ப்பு உள்ளது.

இது பண வீக்கத்தினை குறைக்கவும் பெரிதும் உதவும்.

இப்படி பல மாங்காய்களை இந்த ஒரே அடியில் மோடி அடித்துள்ளார். வாழ்த்துக்கள் மோடி!

ஆனால் இவ்வாறு குறைக்கப்படும் விலைகள் என்பது ஒரே நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிகமான ஒன்று. அடுத்த சில வருடங்களில் தொழில் வளர்ச்சிக்கேற்ப மீண்டும் விலைகள் கூடி விடும்.

அதனால் தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்ய அடுத்த ஒரு வருடம் என்பது ஒரு நல்ல வாய்ப்பு.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக