வெள்ளி, 26 ஜூன், 2020

கொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்

கொரோனா வரவால் பல தொழில் துறைகளில் மந்த நிலை நீடிக்கிறது. ஆனாலும் சில துறைகளில் சில வியாபாரத் தன்மையே மாற்ற செய்து இருக்கிறது. .

அதில் ஒன்று தான் சினிமா துறை. 



கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது என்று இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் இந்த வருடம் முழுவதும் தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இதன் தொடர்ச்சியாக தான் பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற திரைப்படங்கள் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கிறது. எம்மை பொறுத்தவரை கதை களம் வலுவில்லாததால் படங்கள் ஓகே போன்று தான்.


ஆனால் அதையும் தாண்டி பின்னால் வரும் தமிழ் படங்களுக்கு இவை வியாபர ரீதியில் முன்னோடி என்று சொல்லலாம்.

விஸ்வரூபம் படம் வெளிவரும் போதே நடிகர் கமல்ஹாசன் எடுத்த முயற்சி தான் இது. ஆனால் ஏகப்பட்ட அரசியல் தலையீடுகள் கொண்ட விநியோஸ்தர்கள், தியேட்டர்கள்  சங்கங்கள் அவரை வெளியிட அனுமதிக்கவில்லை.

அந்த வகையில் கமல்ஹாசன் எதிர்காலத்தை கணித்த ஒரு ஞானி தான்.

டெக்னாலஜியுடன் நெருங்கிய தொடர்புடைய சினி துறை வியாபாரத்திற்கு மட்டும் தொழில் நுட்பத்தை ஒதுக்கி வைப்பதும் நியாயமல்ல. 

தற்போதைய  கொரோனா சூழ்நிலையில் ஏற்கனவே வட்டிக்கு கடன் வாங்கி திரைப்படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள் நிலைமை பரிதாபம் தான். வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும், திரைப்படங்கள் வெளிவராவிட்டாலும் அவர்கள் வட்டி கட்டி தான் தீர வேண்டும். 

அந்த வகையில் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற சூழ்நிலையில் Amazon, Netflix தளங்களை நாட தொடங்கியுள்ளார்கள்.

மோசமான நிலை தியேட்டர்கள் , கொள்ளையடி பார்க்கிங் கட்டணம், நெறிமுறையில்லாத நொறுக்கு தீனி கட்டணங்கள் என்று ஒரு குடும்பம் ஆயிரம் ரூபாய் வரை ஒரு திரைப்படத்திற்கு செலவழிக்க வேண்டி இருந்தது. 

அது இனி ஒரு படத்திற்கு நூறு ரூபாய்க்கும் குறைவாக செலவழித்தால் போதும். அதிலும் Amazon Primeல் மாதத்திற்கு 129 ரூபாய் கொடுத்தால் பல படங்கள் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் ஒரு வருடத்திற்கு என்றால் 999 ரூபாய் கட்டணம் . கிட்டத்தட்ட நாம் ஒரு படத்திற்கு செலவழிக்கும் தொகை.

எப்பொழுதும் சேவை சரியாக இல்லாத எந்த ஒரு துறையும் வேறு பெரிய திமிங்கலத்தால் முழுங்கப்பட்டு விடும். மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டி இருந்தால் ஓலா, உபேர் கூட இவ்வளவு பிரபலமாகி இருக்காது. அதே போல் தியேட்டர்கள் தமிழ் சினிமாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதும் பெரிதளவு குறையும்.

ஒரு பக்கம் வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு பலன் இருக்கும் போது இன்னொரு பக்கம் Content என்று சொல்லப்படும் திரைப்படங்களின் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று நம்புகிறோம். 

அதிலும் தமிழ், தெலுங்கு படங்களை பார்த்தால் ஹீரோயிசம் என்பது மிக அதிகம். நன்றாக நடித்துக் கொண்டிருந்த விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களை கூட ஏற்றி விட்டு கதைக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை நடிக்க வைத்து விடுகிறார்கள்.

இப்படி அவதாரங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை கதை நன்றாக இருக்கும் படங்களுக்கு தியட்டர்கள் கிடைக்காது. அதற்கு இனி விடிவுகாலம் வரலாம்.

வெப் சீரியஸ்  போன்றவை கூட Amazon Prime வழியாக மிகப் பெரிய அளவில் பிரபலமாகி வரும் சூழ்நிலையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும். இனி திறமையுள்ளவர்கள் அதிகம் வெளியே தெரிவார்கள். 

வெற்று விளம்பரங்களை வைத்தே வெற்றி பெறுவது, சினிமாவிலும் அரசியல் செய்து திறமையுள்ளவர்களை காலி பண்ணுவது போன்றவற்றுக்காவது கொரோனா குறைந்த பட்ச முட்டுக்கட்டை காட்டி இருக்கிறது.பிரியாணி கொடுத்து திரைப்படங்களுக்கு வரச் செய்து ஸ்டார் ஆவதும் குறையும்.

ஹாலிவுட்டை பொறுத்தவரை ஒரு படம் தியட்டர்களில் வெளிவந்து 21 நாட்கள் கழித்து தான் OTT வழியாக ரிலீஸ் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு ஏற்பாடும் இங்கு வர வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா வரா விட்டால் இப்படியொன்றிற்கும் தியட்டர்கள் ஓனர்கள் விட்டிருக்க மாட்டார்கள். 

தியட்டர்கள் இல்லாவிட்டாலும் படத்தை ஓட்ட முடியும் என்ற நிலை வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு வேறு வழியில்லை.

அதே நேரத்தில் PVR, Inox போன்ற பங்குகளிலும் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக