வியாழன், 28 டிசம்பர், 2017

இன்சுரன்ஸ் நிறுவனங்களின் தந்திர ஏமாற்று வேலைகள்

வேலைக்காரன், அருவி படங்களை பார்த்த தாக்கமோ என்னவோ தெரியவில்லை. சிந்தனைகள் நடப்பு வாழ்வியலை நோக்கித் தான் அதிகமாக செல்கிறது.


வேலைக்காரன் படத்தில் சிவ கார்த்திகேயனின் அம்மா புதிதாக Water Purifier மாத தவணையில் வாங்கி இருப்பார்கள். அங்கிருந்து தான் கதை மாற ஆரம்பிக்கும்.



நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு டார்கெட் இலக்கு வைத்துக் கொள்ள, மார்கெட்டிங் வேலை பார்ப்பவர்கள் எப்படியாவது ஏமாற்றி பொருளை வாங்க வைப்பார்கள் என்பதை உணர வைக்கும் காட்சி அது.

அது பொருட்களுக்கு மட்டுமல்லாமல், நிதி தொடர்பான முதலீடு திட்டங்களிலும் அதிகமாகவே தொடர்கிறது.


இந்த செய்தியும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.

ICICI Officials Accused of Tricking Hundreds Into Buying Insurance Instead of FD Schemes

ICICI வங்கி எப்படி எல்லாம் ஆங்கில அறிவு இல்லாத பாமர விவசாய மக்களை ஏமாற்றியுள்ளது என்பதனை அறியலாம்.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் வங்கிக்கு தான் அனுப்பப்படும். அந்த பணத்தை பெண்கள் Fixed Deposit என்ற வைப்பு நிதியில் வைத்து சேர்க்க விரும்புவார்கள்.

அவ்வாறு செல்லும் போது ஆங்கிலத்தில் இருக்கும் மற்ற தாள்களிலும் கையெழுத்து வாங்கி அதனை ULIP Insurance திட்டத்திற்கு மாற்றி விடுவார்கள்.

முன்பே சொல்லி இருக்கிறோம். ULIP என்பது எவ்வளவு ஏமாற்று திட்டம் என்பது..

பார்க்க:  ULIPல் முதலீடு செய்யலாமா?

உதாரணத்திற்கு லட்ச  ரூபாய் வைப்பு நிதியில் முதலீடு செய்ய சென்றால்,. அதனை  ULIP திட்டத்திற்கு மாற்றி அதன் பிறகு அடுத்த ஐந்து, ஆறு வருடங்களுக்கு வருடந்தோறும் லட்ச ரூபாயை கட்டி தான் தீர வேண்டும் என்று செய்து விடுவார்கள்.

இந்த 'வருடந்தோறும்' என்ற வார்த்தை தான் பல இடங்களில் வேண்டும் என்றே மறைக்கப்படுகிறது. அப்படி கட்டாவிட்டால் அந்த பணம் அடுத்த ஏழு வருடங்களுக்கு எடுக்க முடியாமல் லாக் ஆகி விடும்.

இது செய்திகளில் மட்டுமல்லாமல் எம்மிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் உறவுகள், நண்பர்களுக்கு கூட நடந்துள்ளது.

அவர்களும் நன்கு படித்தவர்கள் தான். ஆனால் இந்த திட்டம் தொடர்பான ஆவணங்கள் புரியாத ஆங்கில மொழியில் பொடி எழுத்துக்களில் எழுதி இருப்பது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எமது வங்கி கணக்கும் ICICI வங்கியில் தான் உள்ளது. ஒரு முறை மத்திய அரசின் PPF கணக்கு வங்கி கணக்கு மூலமாக திறக்கலாம் என்று எண்ணி ICICI வங்கிக்கு சென்றோம்.

அங்குள்ள ஊழியர்கள் PPF கணக்கை திறப்பதற்கு பதிலாக அவர்களது ULIP Insurance திட்டங்களில் சேர்வதற்கு தூண்டிக் கொண்டு இருந்தார்கள். கடைசியில் PPF கணக்கை அங்கு திறக்க முடியாதபடி செய்து விட்டார்கள்.

இப்படி ஒரே நோக்கத்தோடு செல்லும் போது மாற்ற முனைபவர்கள் எதிலாவது ஒன்றில் சேமிக்க வேண்டும் என்று சென்றால் எளிதாக மாற்றி விடலாம்.

முன்பு ஒரு முறை, SBIயில் ULIP insurance திட்டம் எடுத்து இருந்தோம். ஐந்து வருடங்களுக்கு பிறகு பார்த்தால் Fixed Deposit வட்டி கூட கிடைக்கவில்லை.

சரி . இனி இது வேண்டாம் என்று சென்றால், மூடிய கணக்கில் கிடைக்கும் பணத்தை வேறு ஒரு ULIP திட்டத்திற்கு போட சொல்லி அந்த ஊழியர் செய்த மார்கெட்டிங் சொல்லி மாளாது.

இப்பொழுது ஒரு சோப்பு வாங்க சென்றாலே யார், யாரெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்றே தெரியவில்லை. டிவியில் விளம்பரம் போடுவதில் இருந்து சூப்பர் மார்கெட்டில் தள்ளுபடி கொடுக்கும் வரை தொடர்கிறது.

நம்பிக்கையின்மையை அதிக அளவில் காட்டும் ஒரு ஏமாற்று உலக வாழ்விற்கு நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் ஒரு அறுதியான உண்மை.

ஒன்றை புரிந்து கொள்ளலாம். எந்த பொருள் எல்லாம் டார்ச்சர், பேராசை தரும் அளவிற்கு மார்கெட்டிங் செய்கிறார்களோ அதனை வாங்கும் போது ஏமாறுகிறோம் என்று.

வாரன் பப்பெட் சொல்லும் விலை மதிப்பு என்பது பங்குகளுக்கு மட்டுமல்ல. பொருட்களுக்கும் பொருந்தும். எந்த பொருளுக்கு எவ்வளவு விலையோ அதனை மட்டும் கொடுங்கள்.

ஒன்று, இரண்டு சதவீதங்கள் அதிகமாக கிடைக்கும் என்பதால் தனியார் நிறுவனங்களின் ULIP திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

நிலையான வருமானத்திற்கு நமக்கு போஸ்ட் ஆபிஸ், மத்திய அரசு பென்சன், PPF என்று பல வைப்பு நிதி திட்டங்கள் இருக்கவே செய்கின்றது.அங்கு யாரும் மார்கெட்டிங் செய்ய மாட்டார்கள்.

அதையும் தாண்டி அதிக வட்டி வேண்டும் என்றால், இன்ச்ரன்ஸ் தவிர்த்த ம்யூச்சல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதிக அளவு இணையத்திலே ஆய்வு செய்து நல்ல திட்டங்களை கண்டுபிடிக்க முடியும். பங்குசந்தையை பொறுத்து மாறும் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

முழுமையான இன்சுரன்ஸ் வேண்டும் என்றால் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் LICயை நாடுங்கள்! பெரிய அளவில் தொல்லை இல்லை.

இனி வரும் காலங்களில் கார்பரேட் நிறுவனங்களுக்கு இருக்கும் முக்கிய சவாலே நம்பிக்கை என்ற Trustablity தான்.

அதனை மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏமாற்று சித்து வேலைகளை காட்டி கொண்டு இருந்தால் நீண்ட காலம் நிலைத்து இருக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: