செவ்வாய், 23 ஜனவரி, 2018

உச்ச சந்தையில் பொறுமை காக்கும் நேரமிது

கடந்த ஒரு பதிவில் 2018ம் புது வருட சந்தை கடந்த வரும் போல் உயர்வை தரும் என்று நம்ப முடியாது என்று கூறி இருந்தோம்.


ஏற்கனவே உயர்ந்த சந்தையால் மதிப்பீடல்கள் உச்சத்தில் சென்றுள்ளன.




அதே நேரத்தில்  இந்த வருடம் அரசின் கவனம் வளர்ச்சி நோக்கி இல்லாமல் தேர்தலை நோக்கியும் இருக்கலாம் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த காரணங்களால் தற்போதைய சென்செக்ஸ் நிலையில் 15 முதல் 20 சதவீத வருமானம் கிடைத்தாலே போதும் என்றே நினைக்க வேண்டும்.

ஆனால் கடந்த டிசம்பர் காலண்டுகள் நிதி முடிவுகள் வர,வர சந்தையில் இன்னும் நம்பிக்கை மேலே சென்று விட்டது என்று சொல்லலாம்.

ரிலையன்ஸ் நிறுவன முடிவுகள் எதிர்பார்ப்புகளை விட மிக நன்றாக இருந்தது. அதிலும் கடந்த காலாண்டில் நஷ்டத்தை கொடுத்த ஜயோ தற்போது ஐநூறு கோடி அளவு லாபத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளது.

அடுத்து, நுகர்வோர் Hindustan Unilever நிறுவனமும் வருமானம், விற்பனை எண்ணிக்கை, லாபம் என்று எல்லாவற்றிலும் நன்றாக முடிவுகளை கொடுத்து இருந்தது.

இறுதியாக அண்மையில் வெளிவந்த Axis Bank நிதி முடிவுகள் நன்றாக இருந்ததோடு, வாராக் கடன்கள் என்பது கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் SBI போன்ற பொது துறை வங்கிகளின் முடிவுகள் கூட நன்றாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

சந்தையின் அடிப்படையே நிறுவனங்களின் லாபம் ஈட்டல் தான். கடந்த பல வருடங்களாக துவண்டு கிடந்த நிலை தற்போது மாறத் தொடங்கி இருப்பது என்பது தான் ஒரு மிகப்பெரிய நேர்மறை காரணி.

இத்தகைய காரணங்களால் கடந்த இரு வாரங்களாக சந்தை முழுவதுமாக காளையின் பிடியில் தான் உள்ளது.

நிப்டி தனது 11,000 நிலையைக் கடந்து விட்டது. இந்த நிலையில் நிப்டி நிறுவனங்களின் P/E மதிப்பு 26க்கு அருகில் உள்ளது.

இது வரலாற்று சராசரியான 19 என்ற நிலையை விட மிக அதிகம் என்பதையும் கவனிக்க.

இந்த  P/E மதிப்பை நாம் நியாயப்படுத்த வேண்டும் என்றால் இன்னும் வெளிவரவிருக்கும் நிறுவனங்களும் மிக நல்ல முடிவுகளை கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் இந்திய மக்கள் ம்யூச்சல் பாண்ட் வழியாக பங்குசந்தையில் அதிக அளவு முதலீடு செய்ய ஆரம்பித்து உள்ளார்கள்.

ம்யூச்சல் பாண்ட் தங்களிடம் இருக்கும் பணத்தை சும்மா வைத்துக் கொண்டு இருக்க முடியாது. பிக்ஸ்ட் டெபாசிட்டை விட அதிக வட்டி கொடுக்க வேண்டும் என்றால் எங்காவது முதலீடு செய்ய வேண்டும்.

இதுவும் இந்த உயர்விற்கு முக்கிய காரணம்.

இறுதியாக பொன்னாக இருந்தாலும் மதிப்பு என்ற ஒன்று உள்ளது. இது நிப்டிக்கும் பொருந்தும்.

தற்போது மதிப்பு மிக உச்சத்தில் இருக்கும் சூழ்நிலையில் பொறுமையாக இருந்து முதலீடு செய்வது நல்லது.

அடுத்து, பிப்ரவரி முதல் வாரத்தில் பட்ஜெட் வரவிருக்கிறது. அதில் விவசாயம், சுகாதாரம், வீடு கட்டிக் கொடுத்தல் போன்ற ஒட்டு சார்ந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இருந்தால் சந்தை அதனை சாதகமாக எடுத்துக் கொள்ளாமல் சில சரிவுகளைக் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் முதலீடுகளுக்குள் வருவது நன்றாக இருக்கும்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக