புதன், 15 மே, 2019

கம்பெனி மீதான காதலும், தடுமாற்ற முடிவுகளும் ...

பெங்களூரில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்கிய ஒருவரிடம் அண்மையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.


IIMல் முடித்த அவர் 12 நிறுவனங்களை  உருவாக்கி, அதில் ஏழு நிறுவனங்களை நஷ்டத்தில் விட்டு ஐந்து நிறுவனங்களில் வெற்றி பெற்றவர்.





அவர் சொன்ன முக்கிய வரிகள்...Don't love your company.

இது நிறுவனத்தை நடத்துபவராக இருக்கட்டும் அல்லது முதலீடு செய்தவராக இருந்தாலும் நிதர்சனம் என்பதை அதிகம் யோசிக்க வேண்டும்.

தேவையான நேரத்தில் விட்டு விட்டு அல்லது விற்று விட்டு வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும்.

அது Jet Airways நிறுவனத்தின் தற்போதைய நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.


ஒரு காலத்தில் நான்கில் ஒரு பங்கு விமான பயண சந்தையை வைத்து இருந்த நிறுவனத்தின் இன்றைய நிலையை பார்த்தால் பரிதாகமாக இருக்கிறது.

எப்படி நிறுவனத்தின் வளர்சிக்கு திரு நரேஷ் கோயல் காரணமோ, அதே போல் அகல பாதாள வீழ்ச்சிக்கும் அவரை காட்டலாம்.

விமான துறை அனுபவம் இல்லாதவர்களை போர்டில் கொண்டு வந்தார். அகல காலை வைத்து கடன் சுமையை ஏற்றிக் கொண்டது.

பணியாளர்களுக்கு மித மிஞ்சிய சம்பளம் என்று அதிக காரணங்களை வீழ்ச்சிக்கு காரணாமாக சொல்லலாம்.

இந்த தவறுகள் எல்லோரும் செய்வது தான்.

ஆனால் நிலைமை கை மீறி சென்ற போதே சில முடிவுகளை எடுத்து இருந்தால் இப்படி காயிலாங்கடையில் இரும்பு சாமானங்களை விற்பது போல் விற்க வேண்டிய நிலை வந்து இருக்காது.

நண்பர் ஒருவர் உடுமலையில் டெக்ஸ்டைல் கடை ஒரு வருடத்திற்கு முன்பு தான் திறந்து இருந்தார்.

12 லட்சம் முதலீடு. ஆனால் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் கூட கைக்கு வந்து சேரவில்லை.

ஒரு கட்டத்தில் கையில் இருந்து காசு போட வேண்டிய நிலை வந்தது. விற்க முனைந்தார்.

அப்பொழுது சொன்னது, அதில் இருக்கும் பொருட்களை தனித்தனியாக விற்றால் ஒன்றும் கூட கிடைக்காது. ஆனால் கடையோடு சேர்த்து வியாபாரமாக விற்றால் பரவாக இல்லை என்றார்.

அது போல் தான்..

Jet Airways நிறுவனம்.

கடன் சுமை 8000 கோடி...கையில் வேறு எதுவும் காசு கிடையாது.

அப்பொழுதே கூடவிருந்த Ethiyaad நிறுவனம் ஒரு பங்கினை 160 ரூபாய்க்கு கேட்டது.

அனால் அப்பொழுது ஒரு பங்கு 250 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டு இருந்தது. ஆனால் கோயல் அதனை மறுத்து விட்டார்.

பங்கு விலை என்பதை காட்டிலும் தன்னுடைய பங்கு சதவீதம் குறைந்து விடாது என்பதில் தான் முனைப்பாக இருந்தார்.

ஆனால் தற்போது கடன் கொடுத்த வங்கிகளே கோயல் இருக்கிற பங்குகளில் அதிக அளவு விற்று வெளியேற வேண்டும் என்று வெளியேற்றி விட்டன.

தற்போது விமானங்கள் ஓடவில்லை, இருக்கிற நேர ஸ்லாட்கள் Spicejet, Indigo நிறுவனங்களுக்கு கை மாறி விட்டன.

நேரடி, மறைமுகமாக 60000 பணியாளர்களுக்கு வேலையில்லை.

மீதி என்ன வென்று பார்த்தால் இருக்கிற சொற்ப அசையும், அசையா சொத்துக்கள் தான்.

வாங்குவதற்கு ஆட்கள் இல்லை என்ற பரிதாப நிலையில் உள்ளது.

இனி பிரித்துப் போட்டு தான் விற்க வேண்டும்.

சொந்த தொழில், நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு மிகப்பெரிய பாலப் பாடம் Jet Airways.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக