ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்கும் சந்தை


நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!


பங்குச்சந்தையை பொறுத்தவரை 2016 என்பது ஒரு ஏமாற்றமான ஆண்டாகவே அமைந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் ஒரு வருட அளவில் வெறும் 2% அளவே கூடியுள்ளது. 26,500லிருந்த சென்செக்ஸ் வருட இறுதியில் 26,600 என்பதிலே நிலை கொண்டிருப்பது என்பது பெரிய அளவில் ஏமாற்றம் தான்.



இந்த முறை அமெரிக்க தேர்தலில் டொனால்ட் வெற்றி, ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு என்ற எதிர்பாராத நிகழ்வுகள் சந்தையை அப்படியே புரட்டி போட்டு விட்டன.

அமெரிக்க மருந்து ஒழுங்கு கமிட்டியின் சில நடவடிக்கைகள் மருந்து நிறுவனங்களையும் பதம் பார்த்து உள்ளது.

ஆனால் நீண்ட நாட்கள் வீழ்ச்சியிலே இருந்து வந்த உலோக, நிலக்கரி நிறுவனங்கள் மேலே வந்துள்ளது ஆச்சர்யமிக்க மகிழ்வான நிகழ்வு.

இந்த நிலையில் 2017ம் ஆண்டும் பிறந்துள்ளது.

ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு என்பது எவ்வளவு பயனைக் கொடுக்கும் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிய வரும். அதன் பின்னர் நேர்மறை நிலைக்கு மாறலாம் என்பது ஒரு பெரிய நம்பிக்கையாக உள்ளது.

ஆனால் 16 லட்சம் கோடி ரூபாய் அளவு நோட்டுக்களில் 14.5 லட்சம் நோட்டுகள் மீண்டும் வங்கிக்குள் நுழைந்துள்ளது. அப்படி என்றால் வெறும் 10% தான் கருப்ப பணமா? என்ற கேள்வியும் வருகிறது.

என்னவாக இருந்தாலும் பெருமளவில் வங்கிக்குள் வந்த பணம் இரு விதங்களில் இந்திய பொருளாதரத்திற்கு பலனைத் தரலாம்.

ஒன்று, கணக்கில் வராத வங்கி பணத்திற்கு அரசு விரட்டி விரட்டி எளிதாக வரி போட முடியும்.

கிட்டத்தட்ட 70 லட்சம் வங்கி கணக்குகளில் நவம்பர் 8க்கு பிறகு பணமாக இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதன் மதிப்பு ஏழு லட்சம் கோடி என்று சொல்லப்படுகிறது.

அதாவது செல்லாமல் ஆக்கப்பட்ட நோட்டுகளின் மதிப்பில் பாதி. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு வரி விழிம்பிற்குள் வந்தாலும் வரி வசூல் கணிசமாக கூடும்.

ஏற்கனவே இந்த ஆண்டு வரி வசூல் 14% அதிகரித்துள்ளது என்பதுடன் இந்த வருமானமும் சேர்ந்தால் அரசு செலவு செய்வதும் அதிகரித்து பொருளாதாரம் உயரும்.

இரண்டாவது, மிகப்பெரிய அளவில் வங்கிகளில் குவிந்துள்ள பணத்தால் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

அவ்வாறான நிலையில் வீட்டு, கார் கடன்களுக்கு வட்டி குறைந்து தனி நபர் செலவு செய்வதும் அதிகரிக்கலாம். அதே போல் அதிக கடன் வைத்துள்ள நிறுவனங்களுக்கு வட்டி செலவு குறைந்து நிகர லாபமும் அதிகரிக்க சாத்தியங்கள் உள்ளது.

இந்த இரண்டு நிலைகளும் வேறு எந்த வித பக்க விளைவுகள் இல்லாது நடந்தால் சந்தையில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

மருந்து நிறுவனங்களை பொறுத்தவரை அவர்களின் மதிப்பீடலை விட பங்கு விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. இது போக, பல நிறுவனங்கள் அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்பின் எச்சரிக்கையை செயல்படுத்த ஆரம்பித்து உள்ளதும் சாதகமான விடயம்.

மொத்தத்தில் இந்த வருடத்தில், 
கட்டுமான நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், ரயில்வே சார்ந்த நிறுவனங்கள், ஆட்டோ மொபைல், வங்கிகள் போன்றவற்றின் பங்குகளை வாங்கலாம்.

அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் பங்குகளை இந்த வருடமும் தவிர்ப்பது நல்லது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: