வெள்ளி, 17 நவம்பர், 2017

மூடியின் ரேட்டிங் உயர்வு எப்படி பலன் தரும்?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் எளிதில் வியாபாரம் செய்யும் தரத்தை உலக வங்கி உயர்த்தியது.


அது தொடர்பாக நாம் எழுதிய போது அடுத்து மூடி ரேட்டிங்கை கூட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எழுதி இருந்தோம்.

பார்க்க: பங்குச்சந்தை உச்சத்தில் கட்டாயம் பங்குகளை விற்க வேண்டுமா?

அது இன்று நடந்து விட்டது.



மூடி Baa3 என்பதில் இருந்து Baa2 என்று உயர்த்தி விட்டது. இதன் Positive என்பதில் இருந்து Stable என்ற நிலையான நிலைக்கு வந்து விட்டது என்பது தான்.

பொதுவாக ஒவ்வொரு நாடுகளுக்கும், அங்கு உள்ள நிறுவனங்களுக்கும் தர வரிசை நிறுவனங்கள் கொடுக்கும் தரம் முக்கிய பங்கு வகிக்கும்.

உலக அளவில் Moody, S&P, Fitch போன்ற நிறுவனங்கள் இதில் மிக முக்கிய நிறுவனங்கள்.

ஆனால் மேற்கத்திய நிறுவனங்களாக இருப்பதால் ஆசியா, ஆப்ரிக்கா  நாடுகளை பெரிதளவில் கண்டு கொள்ளவில்லை. அல்லது தர வரிசையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பது பரவலான கிழக்கு நாடுகளின் குற்றச்சாட்டு.

அருண் ஜெட்லி ஒரு முறை மூடியின் அளவீடு முறை தவறானது என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.

மோடி பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தின் போது நாம் புதிதாக BRICS Rating என்ற நிறுவனத்தை உருவாக்கி மீள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மூடி சீனாவின் தர வரிசையை கடந்த வருடம் குறைத்ததால் சீனாவும் இதற்கு ஆதரவளித்தது.

இந்த நிலையில் தான் இன்று மூடி இந்தியாவின் நிதி நிலையை உயர்த்தியது முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்கூறிய அரசியல் என்பதையும் தாண்டி பார்த்தால்,

கடந்த சில வாரங்களில் உலக வங்கி இந்தியாவின் எளிதில் வியாபாரம் செய்யும் நிலையை உயர்த்தியது.

அதை தொடர்ந்து அருண் ஜெட்லி வங்கிகளுக்கு புதிய நிதி திட்டங்களை அறிவித்தார்.

அதிக அளவு அந்நிய செலாவணி கையிருப்பு என்பதுடன் GST வரி முறையால் ஏற்பட்ட மாற்றங்களும் சேர்ந்து இருக்கலாம் என்று நம்புகிறோம்.

இது தவிர, இந்த காலாண்டில் பங்குசந்தையில் இன்டெக்ஸ் நிறுவனங்கள் நல்ல நிதி நிலையைக் கொடுக்க ஆரம்பித்து உள்ளன.

இவை எல்லாம் மூடியை தர வரிசையை மாற்ற வைத்துள்ளது என்று சொல்லலாம்.

அடுத்து, எப்படி நமக்கு பலன் தரும் என்று பார்த்தால்,

ஒவ்வொரு தனி நபருக்கும் வங்கிகள் Credit Rating என்று வைத்துள்ளன. இந்த ரேட்டிங் அடிப்படையில் நமக்கு தரும் கடன்களின் வட்டி விகிதங்களும் மாறும்.

அது போல் தான், ஒவ்வொரு நாட்டிற்கும்  ரேட்டிங் நிறுவனங்கள் கொடுக்கும் தர வரிசை அடிப்படையில் நமது நாட்டிற்கு கிடைக்கும் வட்டி விகிதங்களும் மாறும்.

இனி இந்த தர வரிசை உயர்வால் நமக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இதர நிறுனங்களின் கடன் பத்திரங்கள் போன்றவற்றிற்கு கூட குறைந்த வட்டி கொடுத்தால் போதும்.

குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால் லாப மார்ஜினும் கூடும்.

அடுத்து, தர வரிசை உயர்வு என்பது நாட்டின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் காலங்களில் FIIகள் அதிக அளவில் பங்குச்சந்தைக்கு வரும் வாய்ப்பையும் மறுக்க இயலாது. அந்த நிலையில் பங்குச்சந்தை கூட புதிய உயர்வைக் காணலாம்.

அதிக அளவில் வெளிநாட்டு பணம் உள்ளே வரும் போது ரூபாயின் தேவை அதிகரித்து மதிப்பு கூடுகிறது.

இப்படி பல விதங்களில் இந்த தர வரிசை உயர்வு நமக்கு பலன் அளிக்க உதவுகிறது.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொல்லியது போல், 10,000 நிப்டி புள்ளிகள் என்பது புதிய வளர்ச்சியின் தொடக்கமாக கூட இருக்கலாம்.

14 வருடங்களுக்கு முன்பு 2004ல் இந்தியாவின் தர நிலை Positive என்பதற்கு உயர்த்தப்பட்டது. அதன் பின் ஐந்து ஆண்டுகளில் சந்தை மூன்று மடங்கிற்கும் மேல் உயர்வை பார்த்தது.

அதே நிலை இப்பொழுது கூட தொடரலாம். அதனால் வாய்ப்புகளை தவற விடாதீர்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக