செவ்வாய், 23 ஜூன், 2020

கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?

எமக்கு அண்மையில் நண்பர்களிடம் இருந்து கூகுள் நிறுவனம் வோடாபோனில்  முதலீடு செய்யுமா? என்று அதிக கேள்விகள் வந்திருந்தது.

இதே போல் எமது Quora பக்கத்திலும் கேள்விகள் வந்திருந்தது.இதன் தொடர்ச்சியான எமது பார்வையை இந்த கட்டுரையில் வைக்கிறோம்.

கடந்த மூன்று மாதங்களாக ரிலையன்ஸ் பங்கு சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு முழு முதற்காரணம் JIO நிறுவனத்தில் பேஸ்புக் செய்த முதலீடு தான்.



JIO நிறுவனமானது டெலிகாம் நிறுவனம் என்பதையும் தாண்டி ஒரு டிஜிட்டல் நிறுவனமாக பார்க்கப்படுகிறது; அதனால் தான் இரண்டே மாதங்களில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடையும் திரட்டி உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே எழுதிய கட்டுரையையும் பார்க்க.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் போட்டியாளரான  கூகுள் நிறுவனமானது வோடாபோனிலும் முதலீடு செய்யலாம் என்று சில செய்திகள் வந்தன. இது ஊர்ஜிதமானது அல்ல, எதிர்பார்ப்பு தான்.


இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வோடாபோன் பங்கும் மூன்று ரூபாயில் இருந்து பத்து ரூபாய்க்கு உயர்ந்தது, தற்போதும் அதே எதிர்பார்ப்பில் தான் அதே பத்து ரூபாயில் நின்று கொண்டிருக்கிறது.

ஆனால் கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா? என்பதில் எமக்கு தனிப்பட்ட சில சந்தேங்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

முதலில் வோடாபோன் நிறுவனம் இவ்வளவு நாள் நிலைத்து நிற்பதே ஆச்சர்யம் தான். ஏனென்றால் அவ்வளவு கடன்.

இது போக, டெலிகாம் லைசென்ஸ் கட்டணமாக ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வரை கட்ட வேண்டி உள்ளது. இந்த கட்டணத்தை ஈட்ட வேண்டும் என்றால் தற்போது வரும் சராசரி பயனாளிகள் கட்டணம் என்று சொல்லப்படும் Average Revenue Per User (ARPU) என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவீதம் அளவு உயர்த்தப்பட வேண்டும். 

அவ்வாறு உயர்த்தப்பட்டால் இதே அளவு வாடிக்கையாளார்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால் ஜியோவும் ஏர்டெல்லும் அவர்களை கவர்வதற்காக ரெடியாக இருக்கிறார்கள். 

அப்படியொரு சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் இல்லாவிட்டால் கூகுள் நிறுவனத்திற்கு என்ன பயன்? பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்வதே அதனிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து தான்.

அடுத்து, JIO, Airtel அளவிற்கு வோடாபோனில் நிதி நிலைமை சரியில்லை. வோடாபோன் CEOவே ஒரு முறை டெலிகாம் லைசென்ஸ் கட்டணத்தை குறைக்காவிட்டால் நாங்கள் திவாலாக வேண்டி வரும் என்று சொல்லியிருந்தார். இந்த அளவிற்கு கோமாவில் இருக்கும் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்வது அவ்வளவு லாபமாக இருக்காது.

கூகுள் வோடாபோனை சரி செய்யும் நேரத்தில் பேஸ்புக்கும் ஜியோவும் இணைந்து வேறு நிலைக்கு சென்று இருப்பார்கள். 

அடுத்து, பேஸ்புக் முதலீடு செய்தது என்பது JIO நிறுவனமானது ஒரு டிஜிட்டல் நிறுவனமாக செய்த முன்னெடுப்பாடுகளை பார்த்து தான். பல டிஜிட்டல் நிறுவனங்களை அவர்கள் ஏற்கனவே வாங்கி இருந்தார்கள். Jio Mart, Jio Education என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 

இதே போல் பல நிறுவனங்களில் Bharti Airtel நிறுவனமும் முதலீடு செய்து உள்ளது. இசை முதல் கல்வி வரை பல டிஜிட்டல் நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்துள்ளார்கள்.

இவர்களை எல்லாம் தாண்டி வோடாபோனை பார்த்தால் அது தொடர்பான எந்த முயற்சியும் இல்லை. முயற்சி இல்லை என்று சொல்வதை விட அந்த முதலீட்டிற்கான பணம் இல்லை என்று சொல்லலாம். அந்த சூழ்நிலையில் பாரதி நிறுவனமே கூகுள் நிறுவனத்திற்கு முதலீடு செய்ய ஏற்றதாக இருக்கும்.

அவ்வாறு Bharti Airtel நிறுவனத்திடம் டீல் ஏற்படும் சூழ்நிலை இல்லை என்றால் வோடாபோனுக்கு வரலாம். ஆனால் கேட்கும் பங்கு விலை என்பது அடி மாட்டு விலையாக தான் இருக்கும். ஏனென்றால் வோடாபோன் நிறுவனத்தை சுமப்பதே பெரிய சுமை.

கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை பங்கு விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக போய் முதலீடு செய்யும் நிறுவனம் கிடையாது. பல தரவுகளை ஆராய்ந்து தரத்தையும் பார்த்து தான் முதலீடு செய்வார்கள். அந்த சூழ்நிலையில் வோடாபோன் தகுதியானதாக இருக்குமா? என்பது சந்தேகம் தான்.

எம்மை பொறுத்தவரை Exit on News என்பது வோடாபோன் பங்கில் சரியானதாக இருக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக