வெள்ளி, 29 ஜூலை, 2016

சாத்தியமாகும் GST வரி விதிப்பு, சந்தையில் என்ன செய்யலாம்?

இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களையும் ஒரே சந்தையாக்கும் ஒரு திட்டம் தான் GST வரி.


இது வரை பார்த்தால். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கு ஏற்ப வித்தியாசமாக வரிகளை கறந்து வந்தன.



இதனால் தான் டெல்லியில் கிடைக்கும் ஒரு பொருளின் விலை தமிழ்நாட்டிற்கு வந்தால் வேறு விதமாக இருக்கும்.

அதே போல், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது சுங்க வரி உட்பட பல வரிகளை கட்ட வேண்டி உள்ளது.

இதனால் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விலைகளை நிர்ணயித்து அதனை மேலாண்மை செய்வதே கஷ்டமாக இருந்தது.

இந்த நிர்வாக செலவுகளுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

தற்போது கொண்டு வரப்போகும் GST வரி இந்தக் களைபாடுகளை நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த GST வரி விதிப்பு நடைமுறையில் வரும் போது பல நிறுவனங்களின் மொத்த செலவுகள் மட்டும் ஐந்து முதல் பத்து சதவீத அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செலவு குறையும் போது லாபமும் கூடலாம்.

இந்த GST வரி என்பது மோடியின் திட்டமல்ல. காங்கிரஸ் அரசின் திட்டம் தான். ஆனால் அதே காங்கிரஸ் சில காரணங்களை சொல்லி கிடப்பில் போட்டு இருந்தது.

அதற்காக அவர்கள் சொல்லிய ஒரு காரணம். மாநிலங்களுக்கிடையே மாறும் போது திட்டமிட்டுள்ள ஒரு சதவீத வரியை நீக்க வேண்டும் என்பது.

இதே போல், GST வரி விதிப்பின் படி நுகர்வோர்கள் தான் பொருட்களை வாங்கும் போது வரி கட்ட வேண்டும். நிறுவனங்களுக்கு உற்பத்தி வரி போன்றவை கிடையாது.

இதனால் தமிழ்நாடு போன்ற தொழில் துறை உற்பத்தி மாநிலங்கள் அதிக இழப்பை சந்திக்கும். அதிமுக போன்ற கட்சிகள் இதனால் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது மோடி அரசு எதிர்கட்சிகளின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் அநேகமாக அடுத்த வார ராஜ்யசபா கூட்டத் தொடரின் போது வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே சந்தை கடந்த இரு நாட்களில் உயர்ந்துள்ளது. அடுத்த வாரத்தில் மேலும் உயர்வுகளை காண GST வரி கைக்கொடுக்கும் என்று நம்பலாம்.

இது யார், யாருக்கு பயனைக் கொடுக்கும் என்று பார்த்தால்,

பொருட்களை இடமாற்றும் சேவை செய்யும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், சில்லறை முறையில் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக அதிக அளவில் பலனைத் தரும்.

இதனால் பிஸ்கட், ஹேர் ஆயில், சிகெரட் போன்றவற்றை விற்கும் நுகர்வோர் நிறுவனங்களின் லாபம் உயரலாம்.

GST வரி வரும் போது நுகர்வோருக்கு விற்பனை செய்யுமிடத்தில் தான் வரி கட்ட வேண்டும்.

இதனால் செருப்பு போன்ற பொருட்களை தயாரிக்கும் பேரும், பிராண்டும் இல்லாத நிறுவனங்கள் வரி விதிப்பிற்குள் வரலாம். இதனால் இந்த பொருட்களின் விலைகள் கூடும்.

அந்த சூழ்நிலையில் பிராண்ட் நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களின் பொருட்களின் விலைகளுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் குறையும். அது பிராண்ட் நிறுவனங்களின் விற்பனையைக் கூட்டும்.

அதே போல் கார் போன்ற முழுமையானவர்றைக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வரி விதிப்பிற்குள் வராது. இவையும் அதிக பலனை பெறலாம்.

இவ்வாறான நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்தால் நீண்ட கால நோக்கில் அதிக பலனைப் பெற வாய்ப்பு உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக