புதன், 21 மார்ச், 2018

வர்த்தக போர், தேர்தல், வங்கி முறைகேடு, என்ன செய்வது?

இது வரை வரலாற்று தரவுகளை பார்த்தால் மார்ச் மாதம் ஒன்றும் இந்த அளவு மோசமாக இருந்ததில்லை.


ஆனால் இந்த முறை பல விடயங்கள் கூடிக் கும்மி அடித்துக் கொண்டிருப்பதால் மார்ச் கடுமையான அடியை வாங்கி கொண்டிருக்கிறது.



வட கிழக்கு மாநிலங்களின் வெற்றியை காட்டி தப்பி விடலாம் என்று பார்த்தால், உபி இடைத்தேர்தல்கள் எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.

பெங்களூரில் இருப்பதால் தெரிகிறது. கர்நாடகாவில் தேறுவது கூட கஷ்டம் தான்.

அண்மையில் மறைந்த ஸ்டீபன் ஹாவ்கின்னின் ஒரு கருத்து.

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூட உலகம் அழிவிற்கு காரணமாக இருப்பார் என்று அவரது இயற்கைக்கு முரணான கொள்கைகளை குறிப்பிட்டு இருந்தார்.

அப்படித் தான், தற்போது உலக வர்த்தக போரை ஆரம்பித்து உள்ளார்.

முதலில் ஸ்டீலுக்கு அதிக இறக்குமதி வரி விதித்து சீனாவை இலக்கு வைத்தார். இந்தியா அமெரிக்காவிற்கு 2% அளவே ஸ்டீல் ஏற்றுமதி செய்ததால் மயிரிழையில் தப்பித்தது.

ஆனால் அதன் பிறகு இந்தியா ஏற்றுமதி செய்யும் டெக்ஸ்டைல், விவசாய பொருட்களுக்கு கூட குறி வைத்து விட்டார்.

ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா கொடுக்கும் மானியத்தை நிறுத்த வேண்டும். அதனால் எங்களை விட குறைவான விலைக்கு பொருட்களை விற்கிறார்கள் என்று உலக வர்த்தக சபைக்கு புகார் அனுப்பி விட்டார்.

இப்படி இவர் ஒரு பக்கம் பதம் பார்க்க, மற்றொரு பக்கம் நீரவ் மோடியின் புண்ணியத்தால் இனி ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் திண்டாட வேண்டும் போல..

ரிசர்வ் வங்கி LoU கடிதங்களே இனி செல்லாது என்று அறிவித்து விட்டது.

அதனால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு குறுகிய கால கடன்கள் வாங்குவது தடைப்பட்டுள்ளது.

இது நமது ட்ரேடிங் நிறுவனங்களை அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த பங்குகளை தவிர்ப்பதும் சுபம்!

இதே நீரவ் மோடியால் வங்கிகள் மீதான நம்பிக்கைத் தன்மை அடிதொழிந்து போக, வங்கிகளின் பங்கு குறியீட்டு எண் தரை மட்டத்தில் உள்ளது.

வங்கிகளில் இவ்வளவு பெரிய ஓட்டை இருந்ததை புரிய வைத்ததற்காக வேண்டும் என்றால் நீரவுக்கு நன்றி கூறலாம்.

எல்லோரையும் டிஜிட்டல் வங்கிக்கு மாறுங்கள் என்று மாற சொல்லும் மோடிக்கு இது ஒரு மிகப்பெரிய எதிர்வினையைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

வங்கியில் வட்டி குறைவாக கிடைக்கிறது, நம்பிக்கையும் குறைவாக உள்ளது என்று சொல்பவர்களுக்கு,

மாற்று வழி என்று பார்த்தால்.

பங்கு, ம்யூச்சல் பண்ட், நிலம், தங்கம் போன்றவை தான்.

இதில் உலக சந்தை நன்றாக இருப்பதால் தங்கம் தற்போது வேண்டாம்.

ரியல் எஸ்டேட் தரவுகளை பார்க்கும் போது, நில விலைகள் மீண்டும் மெதுவாக கூட ஆரம்பித்துள்ளது. அதனால் பெரிய அளவில் பணத்தை வைத்துள்ளவர்கள் நிலத்தில் முதலீடு செய்வது அடுத்த ஐந்து ஆண்டுகளில் நல்ல பலன் தரும்.

அடுத்து இருப்பது, பங்குகள் மற்றும் ம்யூச்சல் பண்ட்கள் தான்.

இரண்டுமே பங்குசந்தையை சார்ந்து இயங்குபவை.

நாம் மேற் சொன்ன எல்லா எதிர்மறை காரணிகளுமே வந்து விட்டு போகுபவை தான்.

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்தவை , வங்கிகள், கச்சா எண்ணையை மூலப்பொருளாக கொண்ட நிறுவனங்கள் போன்றவற்றை தவிர்த்து பார்த்தால் சந்தை இன்னும் நன்றாகவே உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாகவே சந்தையின் சரிவு தற்போது பங்கு மூலதன வரியால் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்ச் 31க்கு முன்னர் விற்கும் பங்குகளுக்கு வரி கட்ட வேண்டாம் என்று சொன்னதால் நீண்ட கால முதலீட்டாளர்கள் விற்க தொடங்கி விட்டார்கள்.

பொதுவாக சந்தையின் ஏற்ற, தாழ்வுகளை ட்ரேடிங் பண்ணும் ஆபரேடர்கள் தான் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்த முறை அவர்களை கை காட்ட முடியாது.

சென்செக்ஸ் 300 புள்ளிகள் கூடும் போது விற்று விடுவதும், குறையும் போது விற்றவர்கள் வாங்குவதும் தான் நடந்து வருக்றது.

இன்னும் வாங்குபவர்கள் எண்ணிக்கை ஓங்காத காரணத்தால் சந்தையிலும் பெரிய அளவில் எழுச்சி இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் சந்தை மீண்டும் 11,000 நிப்டி புள்ளிகளை தொடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

பங்கு கட்டண சேவையை பெறுவதற்கு அருகில் இருக்கும் படிவத்தை நிரப்பி அனுப்பலாம். அல்லது muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக