புதன், 24 அக்டோபர், 2018

சரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை

இந்திய சந்தையின் அண்மைய வீழ்ச்சிகளுக்கு அடிப்படை காரணமாக பார்க்கப்படுவது கச்சா எண்ணெய் விலை தான்.


ஆறு மாதங்களுக்கு முன்பு வரை 50 டாலரில் வர்த்தகமாகி கொண்டிருந்த கச்சா எண்ணெய் ஒரு கட்டத்தில் 85 டாலரையும் தொட்டது.



இனி 100 டாலரை தொட்டாலும் ஆச்சர்யமில்லை என்று நிதி நிறுவனங்கள் கூற, ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைய தொடங்கியது.

இந்த பதற்றம் முழுமையாக இந்திய சந்தையை பாதித்து 20% அளவிற்கு நாம் முன்பில் இருந்து வீழ்ச்சியில் இருக்கிறோம்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு வகையில் பாதிப்பு இருந்தது.


ஒன்று, இறக்குமதி பில் அதிகமாகி இந்தியா சமாளிக்க திணறும், அதனால் பங்குசந்தையும் வீழ்ந்து அவர்கள் ரிடர்னை பாதிக்கும் என்று நினைத்தார்கள்.

இன்னொன்று, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் என்ன தான் பங்குச்சந்தை ரிடர்னை கொடுத்தாலும் கடைசியில் டாலரில் தான் கணக்கிடுவார்கள். அந்த நிலையில் அவர்கள் அவர்கள் ரிடர்ன் எதிர்மறையில் கூட செல்ல வாய்ப்பு இருந்தது.

இதனால் கடந்த இரு மாதங்களில் 60,000 கோடி அளவிற்கு பணத்தை சந்தையில் இருந்து வெளியே கொண்டு சென்றார்கள்.

இது மேலும் ரூபாயை கீழே தான் இறக்கி சென்றது.

இந்த நிலையில் அடிப்படையாக ஒன்றை கவனித்தால் கச்சா எண்ணையின் தேவை அப்படியே தான் இருக்கிறது.

ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தி ஒரு செயற்கை டிமெண்டை உருவாக்கி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

இது போக, அமெரிக்காவும் இரானிடம் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வாங்க கூடாது என்று பெரியண்ணன் உத்தரவிட கச்சா எண்ணெய் சந்தையில் அதிக பதற்றம் தொற்றிக் கொண்டது.

இந்த செயற்கையான தேவை மற்றும் பதற்றமான யூக வணிகம் என்ற இரண்டும் தான் தான் எண்ணெய் விலையை 85 டாலருக்கு சென்று விட்டது.

இந்த நிலையில் இரானால் ஏற்படும் பற்றாகுறையை சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா தங்களது உற்பத்தி மூலம் ஈடு செய்வதாக உறுதி அளித்து இருந்தன.

அதன் வெளிப்பாடு கடந்த ஒரு வாரத்தில் தெரிய வந்தது.

அடுத்து IMF போன்ற உலக நிதி நிறுவனங்கள் கூட உலக அளவில் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று மதிப்பிட்டு சொல்லி இருந்தன. இதனால் கச்சா எண்ணெய்  தேவையும் குறைந்து விடுமோ என்ற பயமும் வந்து விட்டது.

இதனால் கச்சா எண்ணெய் விலையில் Futures வர்த்தகத்தில் Long Positions எடுத்தவர்கள் தற்போது Short எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் தான் நேற்று மட்டும் கச்சா எண்ணெய் விலை 4% இறங்கி 76 டாலருக்கும் அருகில் வந்து விட்டது.

கடந்த வார உச்ச விலையில் இருந்து பார்த்தால் கிட்டத்தட்ட 11%க்கும் மேல் வீழ்ச்சி.

இது மற்றவர்களுக்கு எப்படியோ இல்லை என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவிற்கு மிகவும் இனிப்பான செய்தி.

இன்றைய சந்தையின் உயர்வுகளுக்கு கூட இது தான் முக்கிய காரணம்.

இதே நிலை இரான் தடை தேதியான நவம்பர் 4க்கும் பிறகு நீடித்தால் அடுத்து நாம் தேர்தல்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்..

தற்போதைய நிலையில் Short Positions எடுப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது...


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக