சனி, 23 மே, 2020

EMI தவிர்ப்பது யாருக்கு லாபம்?

கொரோனா வந்த பிறகு ரிசர்வ் வங்கி கடன்களில் EMI கட்டுபவர்களுக்கு ஒரு கரிசனம் காட்டியது. அதாவது மூன்று மாதங்கள் EMI கட்டுவதை தவிர்க்கலாம்.

தற்போதும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டி உள்ளது.



நேற்றைய RBI கூட்டத்தில் கவர்னர் அறிவித்துள்ளார்.

முன்பை விட நிறைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்று இனி எதிர்பார்க்கப்படுகிறது.

அரசானது கொரோனா காலத்தில் நிறுவனங்கள் கட்டாயம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற்று விட்டது. அதனால் வரும் மாதங்களில் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமலே ஆட்குறைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் நண்பர்கள் இந்த  EMI தவிர்ப்பு லாபமா? என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.


முதலில் EMI தவிர்க்கப்படுகிறது என்றால் கால தாமதமாக்கப்படுகிறது  என்று அர்த்தம் கொள்ளவும். இதில் தள்ளுபடி என்ற எதுவும் கிடையாது. அதாவது ஆறு மாதங்கள் EMI கட்டாமல் இருந்தால் அதனை பிறகு ஆறு மாதங்கள் கழித்து கட்ட வேண்டும். அல்லது EMI தொகையை மாதந்தோறும் அதிகமாக கட்டி இதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இதில் மேலதிகமாக வட்டி தொகையும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் கடன் தொகையில் எவ்வளவு தொகை நிலுவையில் இருக்கிறதோ அதற்குடைய வட்டியும் உங்கள் அசல் தொகையில் சேர்த்து கொள்ளப்பட்டு வரும்.

அதனால் ஆறு மாதங்கள் தவிர்த்தால் மேலும் ஆறு மாதங்களுக்கு தான் அதிகமாக கட்ட வேண்டும் என்றில்லை. அது 9 அல்லது 12 மாதங்களாக கூட இருக்கலாம். அது உங்கள் நிலுவையில் இருக்கும் கடன் தொகையை பொறுத்தே உள்ளது.

சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.

உதாரணத்திற்கு 30 லட்ச தொகை ரூபாய் 8% வட்டிக்கு ஒருவர் வங்கியில் கடன் எடுத்து இருக்கிறார். அவர் இது வரை மாதந்தோறும் 25,093 ரூபாய் வங்கியில் EMI கட்டி வருகிறார்.

அவர் ஆறு மாதம் EMI கட்டாமல் இருக்கிறார் என்றால் இந்த கட்டாமல் இருக்கும் ஆறு மாதங்களுடன் வட்டிக்காக இன்னும் நான்கு மாதங்கள் அதிகமாக EMI கட்ட வேண்டும். அதாவது மொத்தமாக 10 EMIகள் அதிகமாக கட்ட வேண்டும்.

அல்லது ஆயிரம் ரூபாய் அதிகமாக இனி வருங்காலங்களில் EMI கட்டி அதே வருட முடிவில் முடித்து விடலாம்.

கீழே உள்ள கணக்கீடுகள் மேலும் சில விவரங்களை அதிகமாக தரலாம்.




அதனால் மிகவும் நிவர்த்தி இல்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே இந்த EMI தவிர்ப்புகளை பயன்படுத்துகள்!

எப்பொழுதுமே நிர்மலாஜி ஒரு சலுகையை தருகிறார் என்றால் அதில் ஒரு உட்கூத்து இருக்கும். வருமான வரியை குறைக்கிறேன் என்று சொல்லி வரி விலக்குகளை தவிர்த்தார். அது  போல் தான் இது. கொடுப்பது போல் கொடுத்து வாங்கும் ஸ்டைல் இது.

ஆனால் நமக்கு அதில் இருக்கும் ஒரு ஆதங்கம் என்னவென்றால் ரிசர்வ் வங்கி மட மடவென்று வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. நேற்று கூட 0.40% வட்டியை குறைத்துள்ளார்கள். அப்படி என்றால் கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆறு சதவீத அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால்  நிதர்சனத்தில் 9% அளவு கூட உள்ளது.

குறைந்த பட்சம் இந்த கொரோனா காலத்திலாவது நியாயமான வட்டியை வசூலித்தால் நடுத்தர மக்களுக்கு மிகவும் பலனாக இருந்து இருக்கும்.

ஒழுங்காக கடனை கட்டுபவர்களுக்கு அதற்கான வெகுமதி இந்திய வங்கி சிஸ்டமில் என்றுமே இருந்ததில்லை.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: