ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மகிழ்தலும் பகிர்தலும்..

நீண்ட நாட்களுக்கு பிறகு முதலீடு அல்லாத எமது தனிப்பட்ட வாழ்வியல் நிகழ்வுகளை பகிர்கிறோம்.


கடந்த இரு மாதங்களாக நமது தளத்தில் தினம் ஒன்று என்ற விகிதத்தில் கட்டுரைகள் வரவில்லை. அதற்கு பதிலாக முக்கியமான தகவல்களை மட்டும் பகிர்ந்து வந்தோம்.

அதற்கு தனிப்பட்ட சில நிகழ்வுகளும் காரணமாக அமைந்தது.



கடந்த டிசம்பரில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருந்தோம். ஆனால் அங்கு வேலையை துறந்து விட்டே வந்து இருந்தோம்.

அதனால் வேலை இல்லா பட்டதாரி என்ற விஐபி என்ற அந்தஸ்தில் தான் இருந்தோம்.

இது கிட்டத்தட்ட ஒரு வருட முன்னேற்பாடான திட்டமிடுதல் என்பதால் பொருளாதாரம், சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஓரளவு தயார்படுத்தி வைக்க ஏதுவாக இருந்தது.

அதில் பங்குச்சந்தையில் இருந்த எமது முதலீடு அதிக மன தைரியத்தை கொடுத்தது என்றும் கூட சொல்லலாம்.

முதல் ஒரு மாதம் முழுமையான பிரேக். வேலை, பங்குச்சந்தை நிகழ்வுகளில் பெரிதளவு தலை வைத்துப் பார்க்காமலே இருந்தோம்.

ஒன்றரை மாதம் பிரேக் எடுக்கலாம் என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் ஊரில் இதற்கு மேல் இருக்க விடவில்லை.

வேலைக்கு போகலையா? போகலையா? என்று கேள்விகள் எழ ஆரம்பித்தன. அதிலும் ஒரு தெரிந்த ஆசிரியர் குடும்பத்தில் அவரது மகனுக்கு வேலையில்லாத எம்மைக் கூப்பிட்டு வேலைக்கு போக சொல்லி அறிவுரை சொல்ல கூப்பிட்டு இருந்தார்கள்.

இதெல்லாம் பார்க்கையில் சாத்தான் வேதம் ஓதுவது போல் இருந்ததால் முன்னரே ஊரில் இருந்து பெங்களுர் நகரத்திற்கு பயணம் ஆரம்பமானது.

ஆனாலும் அடுத்த நான்கு ஆண்டுகள் பிறகு கார்பரேட் வாழ்க்கை வேண்டாம் என்ற எண்ணம் இருந்ததால் சுயதொழில் சிந்தனைகளும் கொஞ்சம் மனதில் குடி கொண்டிருந்தது.

அதற்கு இதை விட்டால் நேரம் கிடைக்காது என்பதால் அது தொடர்பான வாய்ப்புகளையும், தொழில் பார்ட்னர்களையும் முதலில் தேடிக் கொண்டிருந்தோம். அதில் ஓரளவு முன்னேற்றம் கிடைத்ததது. பிறகு இது தொடர்பாக விளக்கமாக எழுதுகிறோம்.

அதன் பிறகு தான் இன்டர்வ்யூவிற்கு தயார் படுத்திக் கொள்ள முனைந்தோம். ஜனவரி 21 அன்று தான் முதலில் வேலை தேடுவதற்கான ஜாதகத்தை Naukri தளத்தில் ஏற்றி இருந்தோம்.

முதல் ஒரு வாரம் யாருமே கூப்பிடவில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை முன்னேறுகிறது என்பதெல்லாம் டூப் தானா என்று தான் நினைக்க தோன்றியது.

ஆனால் அதன் பிறகு நிலைமையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. இரண்டாவது நேரத்தில் நிறைய நேர்முக அழைப்புகள் வர ஆரம்பித்தன.

உண்மையில் பார்த்தால் வெளிநாடுகளை விட இந்தியாவில் நேர்முகத் தேர்வு என்பது தேவையில்லாத கேள்விகள், ஏகப்பட்ட ரவுண்டுகள் என்று கடினமாகவே இருந்தது.

அதிலும் நேர்முகத் தேர்வு எடுப்பவர்கள் நம்மிடம் இருப்பவற்றை அறிந்து கொள்ள முயலாமல் அவர்களுக்கு தெரிந்தவற்றை வெளிக்காட்டத் தான் முனைகிறார்கள்.

இங்கு வாய்ப்புகளுக்கு மிச்சமாக ஆட்கள் இருப்பதால் த்ரிஷா இல்லாட்டி நயன்தாரா என்ற ரீதியில் எளிதில் ரிஜெக்ட் செய்து விட முடிகிறது.

ஒரு வழியாக மூன்றாவது வாரத்தில் முதல் வேலை கிடைத்தது, கொடுக்கப்பட்ட ரோல் முக்கியத்துவமாக இருந்ததால் உடனே ஒத்துக் கொண்டோம்.

எமது தனிப்பட்ட அனுபவத்தில் Naukri, Times Jobs, LinkesIn போன்ற தளங்கள் வேலை தேடுவற்கு அதிகம் உதவின.

சில நண்பர்கள் Naukri இணையதளத்தில் கட்டண சேவையும் பயன்படுத்த அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அதில் பெரிதளவு வித்தியாசம் காண முடியவில்லை என்பதே உண்மை.

கடந்த முறை வேலை தேடும் போது முதல் வேலை கிடைக்க மூன்று மாதங்கள் வரையானது. முறைப்படி தயார் செய்யாமல் ஆரம்பத்தில் நிறைய வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தற்பொழுது முதலில் தயார் செய்தல், அதன் பிறகு வேலை தேடுதல் என்ற முறைக்கு மாறியதால் சீக்கிரம் இலக்கை அடைய முடிந்தது.

இப்படி வேலை தேடும் படலம் ஒரு வழியாக முடிந்தது. 

அடுத்த ஒரு நிகழ்வு வேலையை விட மகிழ்வானதாக அமைந்தது.

நான்கு நாட்கள் முன்பு பிப்ரவரி 17 அன்று மகன் பிறந்துள்ளான் என்ற மகிழ்வான செய்தியையும் பகிர்கிறோம். சிசேரியன் தான் என்றாலும் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

முடிந்த வரை வட மொழிக் கலப்பு ஏதும் இல்லாது தமிழ் பெயரை தேடி கொண்டிருக்கிறோம். கோ என்று தொடங்கும் தமிழ் பெயர்கள்  ஏதேனும் இருப்பின் பகிரவும். உதவியாக இருக்கும்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஏதேனும் வெளிப்புற வேலைகளில் இருந்து வந்ததால் தளத்தில் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி இந்த நிலை மாறி விடும்.

மீண்டும் பழைய நிலையில் அடிக்கடி கட்டுரைகள் வெளிவரும் என்று உறுதி கூறுகிறோம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

15 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் தற்போதைய பங்கு சந்தை நிலவரம் தொடர்பாக ஒரு கட்டுரை வந்ததால் மிகவும் உதவியாக இருக்கும்☺

    பதிலளிநீக்கு
  2. தங்கள் மனம் போல வாழ்க்கை இனிதாக வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தங்கள் மனம் போல வாழ்க்கை இனிதாக வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு