ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பரம்பிக்குளம் - ஒரு சுற்றுலா அனுபவம்

கடந்த ஒரு வார காலமாக திருமண மற்றும் சுற்றுலா நிகழ்வுகளில் இருந்ததால் கட்டுரைகளை எழுத முடியவில்லை.


மீண்டும் தொடருகிறோம்!



இந்த நேரத்தில் பங்குச்சந்தை மற்றும் முதலீடு எண்ண ஓட்டத்திற்கு மாறாக ஒரு சுற்றுலா அனுபவத்தை பகிர்கிறோம். உபயோகமாக இருக்கலாம்!

பொள்ளாச்சியில் நெருங்கிய நண்பர் ஒருவரது திருமண நிகழ்வு. பொள்ளாச்சிக்கு சென்று விட்டு, அருகில் ஏதேனும் சுற்றுலா தலத்திற்கு போகலாம் என்பது தான் திட்டம்.

எந்தவிடத்திற்கு செல்லலாம் என்று யோசித்ததில் முன்னாறு முதலில் வந்தது.

ஆனால் கேரளாவில் அண்மையில் பெய்த மழை அந்த திட்டத்தை மாற்ற செய்தது.

அதன் பிறகு, எங்கு என்று தேடியதில் அவ்வளவு பிரபலமாகாத ஒரு இடம் கிடைத்தது. அது தான் பரம்பிக்குளம்.

பரம்பிக்குளம் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டு மலை பகுதி. ஆனால் பொள்ளாச்சியில் இருந்து மட்டும் தான் செல்ல முடியும். பொள்ளாச்சியில் இருந்து இரண்டு மணி நேர பயணம்.

முன்பு தமிழ்நாட்டில் தான் இருந்துள்ளது. மொழி வாரி பிரிவினையின் போது கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைத்த போது கேரளாவிற்கு பரம்பிகுளத்தை காமராஜர் கொடுத்து விட்டார். ஆனால் பரம்பிக்குளம் அணையின் கட்டுப்பாடு இன்னும் தமிழ்நாட்டிடம் தான் உள்ளது.

பொள்ளாச்சியில் ஆனைமலை அல்லது TopSlip என்று சொன்னால் தெரிகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்த வனப்பகுதியில் இருந்த இயற்கை மரங்களை அழித்து விட்டு தேக்கு மரங்களை நட்டு விட்டார்கள்.

அந்த மரங்கள் வளர்ந்த நிலையின் பின் வெட்டி அங்கு இருந்த ஆற்றில் போடுவார்கள்.

ஆற்றின் வழியாக மரக்கட்டைகள் கேரள பகுதிக்கு செல்லும். அங்கிருந்து கொச்சி துறைமுகம் வழியாக பிரிட்டனுக்கு சென்று விடும்.

அவ்வாறு வெட்டி போடும் பகுதியைத் தான் TopSlip என்று அழைக்கிறார்கள். இந்த TopSlip பகுதி தமிழ்நாட்டில் இருக்கிறது.

அதன் பிறகு இரண்டு கிலோ மீட்டர் மேலே செல்ல பரம்பிக்குளம் வருகிறது.

பரம்பிக்குளம் காட்டுபகுதி ஒரு புலிகள் காப்பு வனகம் ஆகும். (Tiger Reserve Forest)

மொத்தமாக 36 புலிகள் உள்ளதாக கணக்கிட்டு உள்ளார்கள்.

ரிசர்வ் காட்டு பகுதி என்பதால் எளிதில் அனுமதி கிடையாது. தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைகள் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

அதில் கேரள வனப்பகுதியில் சுற்றுலாவிற்கும் வசதி செய்து உள்ளார்கள்.

parambikulam.org என்ற கேரள வனத்துறை இணையதளம் வழியாக காட்டிற்கு நடுவே தாங்கும் விடுதிகளை புக் செய்து கொள்ளலாம்.

நாங்கள் தங்கிய TreeTop Huts என்ற விடுதிக்கு ஒரு இரவு வாடகை 4800 ரூபாய்.



இந்த விடுதி துனத்துகடவு என்ற அணை கரையில் மரத்திற்கு மேல் கட்டப்பட்ட ஒரு விடுதி. பால்கனியில் இருந்து பார்த்தால் முழுக்க தண்ணீரும், அதன் நடுவில் இருக்கும் தீவுகளும் மிக அருமையான இயற்கை காட்சிகள்.

நகரத்தின் இயந்திர வாழ்க்கையில் இருந்து அழகான விடுபடலாக கருதலாம்.

மேற் சொன்ன 4800 ரூபாய் என்பது பல சேவைகளை உள்ளடக்கிய ஒரு பாக்கேஜ் ஆகும்.

அங்கு வசிக்கும் பழங்குடி மக்களால் சமையல் செய்யப்பட்டு மூன்று வேளை சாப்பாடும் இதில் அடங்கும்.

12 மணிக்கு check-in செய்ய வேண்டும். அதன் பிறகு மதிய சாப்பாடு கொடுத்த பிறகு காட்டிற்குள் சபாரி வேனில் அழைத்து செல்கிறார்கள்.

அதிக அளவில் மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், யானைகள் போன்றவற்றை இயற்கை சூழ்நிலையிலே காணலாம்.

ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பின் மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட படகு சவாரிக்கு அழைத்து செல்கிறார்கள்.

தேநீரை முடித்த பிறகு பழங்குடி மக்களின் நடனக்காட்சி அரை மணி நேரத்திற்கு காண்பிக்கப்படுகிறது.

அதன் பிறகு Night Safariக்கு அழைத்து செல்கிறார்கள்.

நைட் சபாரியில் நமக்கு யோகம் இருந்தால் புலிகளை காண முடியும்.

எங்கள் நேரத்திற்கு ஒரு புலி காட்டு எருமையை வேட்டையாட தயாராக இருந்ததை காண முடிந்தது.

இரவு எட்டரை மணிக்கு டின்னர் முடித்து அறையில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.

காட்டின் நடுவே, பக்கத்தில் யாரும் தங்காமல், எலிகள் மற்றும் பறவைகளின் ஓசையில் ஒரு திரில்லான இரவு தங்கல் அனுபவம் தான்.

மீண்டும் காலை எழுந்து, ஒரு ட்ரெக்கிங் அழைத்து செல்கிறார்கள். சாப்பாடு முடிந்து 10.30 மணிக்கு Check-out செய்ய வேண்டும்.

ஆனால் இந்த இயற்கையான அனுபவத்தை விட்டு எளிதில் வர மனதில்லை.

அதனால் அணை கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் ஜிலேபி மீனை வாங்கி பழங்குடி மக்களிடம் மதிய சாப்பாட்டிற்கு சமைக்க சொன்னோம்.

வாடகை காரில் சென்று இருந்ததால் Check-out செய்த பிறகு உடைமைகளை வண்டியில் வைத்துக் கொண்டு மீண்டும் கொஞ்ச நேரம் காட்டிற்குள் உலவிய பிறகு கீழே இறங்கினோம்.

கீழே வரும் போது தமிழ்நாட்டின் TopSlip பகுதியில் யானை சபாரி, மூலிகை வனம் போன்றவற்றை பார்த்த பிறகு மீண்டும் பொள்ளாச்சி வந்து பெங்களூர் பயணத்தை தொடர்ந்தோம்.

கேரள அரசு மிக அருமையாக இந்த சுற்றுலா திட்டத்தை நடத்தி வருகிறது. பழங்குடி மக்களில் ஒருவரே Ranger என்று நம்முடன் இணைந்து கொள்வார். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அவர்கள் இடத்திலே வழங்கும் வகையில் அமைந்துள்ள இந்த திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பொள்ளாச்சியில் இருந்து தினமும் மூன்று முறை பேருந்துகள் உண்டு. ஒரு இரவு, இரண்டு நாட்கள் என்று திட்டமிடலாம். பத்தாயிரம் ரூபாய் செலவு ஆகலாம்.

நகர மயமாக்கல் டென்சன் நிலையில் இருப்போர், வேறு கவலைகளில் இருப்போர், ஹனிமூன் திட்டம் போன்றவற்றிற்கு பரம்பிக்குளம் ஒரு அருமையான அனுபவம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக