வெள்ளி, 31 ஜூலை, 2020

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வதை பார்த்தால் பாமர மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டா கனி தான்.

ஏன் இப்படி உயர்கிறது என்று தெரிந்து கொள்வது என்பதும் இந்த சூழ்நிலையில் அவசியமாகிறது.



தங்கத்தை பொறுத்தவரை, அட்சய  திருதி அன்று கூடும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூடும். முஹூர்த்த தினங்கள் இல்லாத ஆடி போன்ற மாதங்களில் குறையும் என்பது தான் பாமர சூழ்நிலையில் உள்ள பேச்சு வழக்குகள்.

அப்படி பார்த்தால் இந்த வருட ஆடி மாதம் தங்கம் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பல சதவீதங்கள் கணிசமாக கூடியுள்ளது.

உலக அளவில் தங்கம் 2 லட்சம் டன் அளவு தங்கம் தரைக்கு மேல் புழங்கி கொண்டிருக்கிறது. அதில் 20,000 டன் அளவு தங்கம் தான் இந்தியாவில் நகைகளாக இருக்கிறது. அதனால் நமது பங்களிப்பு என்பது உலக அளவில் இன்னும் குறைவு தான்.

இது போக, நகைக்கடை வாடிக்கையாளர்களால் மாற்றம் இருப்பினும், இந்த அளவு மூன்று மாதங்களில் இரட்டிப்பு நிலையின் அருகிலும் சென்றிருக்க வாய்ப்பில்லை. கடந்த மூன்று மாதங்களில் நகை கடைகள் திறக்கவே இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

அதனால் நகை கடைகளில் போய் வாங்கும் வாடிக்கையாளர்களை பொறுத்து தங்க விலையில் சிறிது மாற்றம் இருக்கலாம். ஆனால்  பெரிதளவு பாதிப்பில்லை என்றும் அறிந்து கொள்ளலாம்.

தங்கத்தை பொறுத்தவரை முதலீட்டாளர்களால் Hedging முறையில் பயன்படுத்தப்படுகிறது. எப்பொழுதுமே பங்குச்சந்தைகள், ரியல் எஸ்டேட் போன்றவை தங்கத்துடன் எதிர்மறை தொடர்புடையவை.

அதாவது பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை உயரும் போது தங்கத்தின் மேல் ஆர்வம் இருக்காது. ஆனால் பங்குச்சந்தைகள் சரியும் போது தங்கம் நேர்மறையில் செல்லும். அதனால் பங்குசந்தையில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெரிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை நாடுவார்கள்.

எப்பொழுதுமே காலங்காலமாக தங்கத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு இருந்து வந்ததால் சமூகத்திலும், முதலீட்டிலும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகவே கருதி வருகிறார்கள்.

அதனால் பங்குச்சந்தைகள், பொருளாதாரத்தில் மீது நம்பிக்கை இல்லாத போது முதலீட்டு நிறுவனங்கள் தங்களது பணத்தை தங்கத்தின் மீது திருப்புவார்கள். அது தான் 2008 பொருளாதார தேக்கத்திலும் நடந்தது. அதற்கு முன்பும் நடந்துள்ளது. தற்போதைய தங்கம் விலை உயர்விலும் இது தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொரோனாவிற்கு முன்பு கூட உலக பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. கொரோனா  வந்த பிறகு வரலாற்றில் இல்லாத அளவு மட்டமாக சென்று கொண்டிருக்கிறது.

GDP வளர்ச்சியில் ஐந்து சதவீத வளர்ச்சியில் கூட நாம் இது வரை திருப்தி பட்டதில்லை. ஆனால் தற்போது 7% எதிர்மறை வளர்ச்சியில் செல்லும் என்று சில செய்திகள் வரும் போது இருக்கலாம் என்று தான் கடக்க வேண்டி உள்ளது. இந்த சூழ்நிலைகள் இன்னும் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை கொண்டு வரவே இல்லை.

ஆனாலும் ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இப்பொழுது பங்குச்சந்தைகள் மீண்டும் உயர்ந்து வருவது தான்.

வரலாற்றில் தங்கமும், பங்குசந்தைகளும் நேர் எதிர் சூழ்நிலையில் செல்லும் போது தற்போது இரண்டுமே ஒரே திசையில் சென்று கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் ஏதோ ஒன்றில் தவறு இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது.

வெளியே செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் வாங்க பணம் இல்லாதது, வேலை வாய்ப்பு இழப்பு என்று பல பிரச்சினைகள் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன. இது போக, அமெரிக்கா தேர்தல் முடிந்து சீனாவும் அமெரிக்காவும் வாய் தகராறை விட்டு வரப்பு தகராறுக்கு மாறினாலும் அச்சரயமில்லை.

இந்த நிலையில் நிகழ் பொருளாதாரத்தில் தொடர்புடைய பங்குசந்தையில் தான் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதால் பங்குசந்தையில் தான் தவறு இருக்கிறது என்று அனுமானிக்க முடிகிறது.

சில செய்திகளை தொகுக்கிறோம்.
  • இன்போசிஸ் சிபுலால் அவர்கள் 800 கோடி அளவு பங்குகளை விற்கிறார்.
  • HDFC தலைவர் பூரி 800 கோடி அளவு பங்குகளை விற்கிறார்.
  • ரிலையன்ஸ் நிறுவன தலைமை அதிகாரிகள் தங்களது 90% பங்குகளையும் Pledge செய்கிறார்கள்.
இந்த மூன்று பேர் தொடர்புடைய நிறுவன பங்குகளுமே இந்திய பங்குசந்தையில் நல்ல பங்குகள் தான். ஆனாலும் அவர்கள் தங்களது முதலீட்டை காசாக மாற்றுகிறார்கள் என்றால் ஏதேனும் ஒன்றிற்கு தயாராக மாறுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அது பங்குச்சந்தை சரிவாக கூட இருக்கலாம்.

பார்க்க: ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் தருணம் 

தற்போது தங்கம் விலை 10 கிராமிற்கு 52,000 ரூபாய்க்கு உயர்ந்து உள்ளது. இன்னும் 62,500 வரை உயரலாம் என்று சில கணிப்பு நிறுவனங்கள் சொல்கின்றன. உயர வாய்ப்புள்ளது என்றே கருதுகிறோம்.

ஏற்கனவே தங்கம் கணிசமாக உயர்ந்து விட்டதால் இனி கையில் இருக்கும் முழு பணத்தையும் தங்கத்தில் வைப்பது பெரிய அளவு ரிடர்னை கொடுக்காது. அதனால் பகுதி முதலீடுகளை மட்டும் தங்கத்தில் வைக்கலாம்.

இதில் "உங்களின் தங்கத்தை லாக்கர் என்னும் சிறையில் ஏன் பூட்டி வைக்கிறீரகள்? அதற்கு விடுதலை கொடுங்கள்" என்று கடந்த வருடமே விளம்பரம் செய்தவர்கள் அதிக பலன் பெற்று இருப்பார்கள்.

இப்படியான தங்க முதலீடுகளுக்கு தங்க நகைக்கடைகளில் தான் போய் வாங்க வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் Gold Sovereign Bond என்பதிலும் முதலீடு செய்யலாம். இதனை ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். விற்று கொள்ளலாம். செய்கூலி, சேதாரம் போன்றவை கணிசமாக மிச்சமாகும்.

இது தொடர்பாக எழுதிய எமது முந்தைய கட்டுரையை பார்க்க:
மத்திய அரசின் தங்க முதலீட்டு திட்டத்தில் ஒரு வாய்ப்பு

தற்போது  பல தங்க சுரங்கங்கள் கணிசமான உற்பத்தி செலவு இருப்பதால் மூடப்பட்டு உள்ளன. அதனால் Supply என்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை உயர்ந்து வரும் தங்க விலையால் லாபம் கிடைக்கும் என்று கருதி மீண்டும் சப்ளையை கூட்ட முயற்சிக்கலாம்.

அடுத்து கணிப்பிற்கு மாறாக பங்குசந்தை மற்றும் பொருளாதாரத்தில்  விரைவாக ஏற்படும் V-Shape Recovery போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் தங்க விலை உயர்வை தடுக்க உதவி செய்யும்.

எல்லாவற்றிற்கும் மேல் தற்போதைய சூழ்நிலையில் அதிக அளவு முதலீடுகளை பணமாக வைத்துக் கொள்வது நல்லது. எங்கேயும் அரெஸ்ட்  ஆகாதவாறு சூழ்நிலைக்கு தக்கவாறு முதலீடு செய்ய பெரிதும் உதவும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக