திங்கள், 27 பிப்ரவரி, 2017

மத்திய அரசின் தங்க முதலீட்டு திட்டத்தில் ஒரு வாய்ப்பு

(இந்த கட்டுரை 10-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கு கணிசமாக செலவழிக்க வேண்டி வரும். இதற்கு மட்டும் 15 முதல் 20% வரை தேவையில்லாமல் போக வாய்ப்பு உண்டு.

தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு இந்த செய்கூலி, சேதாரம் என்பது தேவையில்லாத செலவுகள் தான்.



அதனை தவிர்ப்பதற்கு மத்திய அரசே தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு Sovereign Gold Bonds என்று பெயர்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது அன்றைய சந்தை விலையைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவாக தங்கத்தை பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம்.  தங்க விலை ஏற, ஏற இந்த முதலீட்டு பத்திரங்களின் மதிப்பும் கூடி விடும்.


இதற்கு வருடந்தோறும் 2.5% வட்டி வழங்குவார்கள் என்பது கூடுதல் சிறப்பு. வங்கியில் லாக்கரில் நகைகளை வைத்தால் நாம் காசு கொடுக்க வேண்டி வரும். ஆனால் இங்கு அரசு நமக்கு வட்டி தரும் என்பது சிறந்த பலன்.

ஒவ்வொரு வருடமும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசு இந்த பத்திரங்களை வெளியிடும்.

குறைந்த பட்சமாக ஒரு கிராம் முதல் அதிக பட்சமாக 500 கிராம் வரை மதிப்புடைய பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். வாங்கும் விலை அன்றைய தங்க மதிப்பை பொறுத்து இருக்கும். சந்தை மதிப்பில் 50 ரூபாய் குறைவாக நமக்கு சலுகை தரப்படும்.

வங்கிகள் மற்றும் டீமேட் கணக்குகள் மூலமும் இதனை வாங்கி கொள்ளலாம்.  டீமேட் கணக்கு மூலம் வாங்கினால் பங்குசந்தையிலும் இந்த பத்திரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விற்றுக் கொள்ளலாம். அதற்கு முன் தேவைப்படுமாயின் பங்குகள் போல் Secondary Market வழியாக விற்று கொள்ளலாம்.

இந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு கிடைக்கும் லாபத்திற்கு Capital Gain Tax கிடையாது என்பது குறிப்பிட்டத்தக்கது. அதாவது கிடைக்கும் லாபத்திற்கு வரி கட்ட வேண்டிய தேவை இல்லை.

அதே நேரத்தில் அவசர தேவைக்கு கடன் பெறுவதற்கும் ஈடாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக ஒரே கூடையில் அணைத்து முட்டைகளும் போடக் கூடாது என்பது முதலீட்டில் சொல்லப்படும் போது அடிப்படை நாதம். அந்த வகையில் ஒரு பகுதியை தங்கத்தில் இது போன்ற பத்திரங்கள் வழியாக முதலீடு செய்வது நல்லது.

தங்கத்தின் விலையானது பங்குசந்தையுடன் ஒப்பிடுகையில் எதிர் திசையில் செல்லும். அதாவது பொருளாதார பதற்றங்கள் இருக்கும் போது முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வர். அதே போல் பங்குச்சந்தை நன்றாக இருக்கும் நேரத்தில் தங்கம் விலையில் குறைவான மாற்றங்களை காணலாம்.

தற்போது பல தங்க சுரங்கங்கள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில் தேவை என்பதற்கு அதிகமாக வரும் போது தங்கத்தின் விலை கூட வாய்ப்பு உள்ளது.

அணைத்து முதலீடுகளையும் பங்குசந்தையில் போட்டால் இழப்பு வரும் போது மொத்தமாக தாங்க முடியாது. அதே போல், பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் முதலீடு வளரவே செய்யாது.

அந்த வகையில் தங்கம், பிக்ஸ்ட் டெபாசிட், பங்குசந்தை போன்றவற்றை கலந்து வைத்து இருப்பது அதிக பலனளிக்கும். அந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் பகுதியை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். கடையில் வாங்குவதை விட 25% வரை அதிக லாபம் காணலாம்.

அரசின் பத்திரங்கள் என்பதால் நம்பிக்கையும் கலந்து இருக்கிறது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: