திங்கள், 25 செப்டம்பர், 2017

பங்குச்சந்தையின் தொடர்ச்சியான சரிவின் பின் பல காரணிகள்

இன்றுடன் தொடர்ந்து ஐந்து நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வருகிறது.


இதற்கு ஆரம்ப புள்ளியாக வட கொரியாவின் மிரட்டல்கள் இருந்தன.



இதற்கு முன்னர் வருடந்தோறும் வட கொரியா மிரட்டல்கள் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தான்.

ஆனால் இந்த முறை ட்ரம்ப் தான், கிம் ஜாங்கிற்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்ற பாணியில் வார்த்தை விளையாடல்களை தொடர்ந்து வருகிறார்.

பொதுவாக கொரியன்கள் வார்த்தை விளையாட்டிற்கு எளிதில் டென்சன் ஆகக் கூடியவர்கள்.

அதனை கிம் ஜாங் சீரியஸாக எடுத்துக் கொண்டு ஹைட்ரஜன் குண்டு போட்டு விடுவேன் என்று அளவிற்கு சென்று விட்டார்.

நாம் முன்பு சொன்னது போல் சீனா, ரஷ்யா மேசைககு  வராத வரை தற்போதைய பதற்றங்களில் பெரிய அளவு மாற்றங்கள் வரப் போவதில்லை.

தற்போது வேண்டும் என்றால் சீனா, ரஷ்யா தாங்கள் பொருளாதார தடை விதித்து விட்டோம் என்று ஐநாவிற்கு கண் துடைப்புகளை காட்டலாம்.

ஆனால் போர் என்று வந்தால் கண்டிப்பாக சீனா, ரஷ்யா நாடுகள் அமெரிக்கா பக்கம் வராது. அது மூன்றாம் உலக போர் என்ற அளவிற்கு செல்லாமல் இருந்தால் நல்லது.

சரி..இது உலக நிகழ்வு.

ஆனால் தொடர்ந்து எட்டு மாதங்களாக உயர்வில் இருந்த சந்தை தற்போது கரடியின் பிடியில் வந்துள்ளது.

இதற்கு மேல் சொன்ன உலக நிகழ்வு மட்டும் காரணமில்லை.

இது வரை எதிர்பார்ப்பில் மட்டுமே சந்தை நிப்டியை உச்சத்திற்கு எடுத்து சென்றது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நிதர்சனமாகும் காலம் தள்ளப்படுகின்றது என்பதை சந்தை உணர ஆரம்பித்துள்ளது.

ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையின் 'கிடைக்கும் என்று சொல்லப்பட்ட' முக்கிய பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதிக அளவு நபர்கள் வருமான வரிக்குள் வந்தது போன்ற புற வழிப் பலன்கள் தான் அதிகமாக இருந்தன.

இது பணப் புழக்கத்தை பெரிதளவு பாதித்ததால் முதல் இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் தேக்க நிலைக்கு சென்றது.

அதன்  தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட GSTயில் நடைமுறையில் இருந்த குறைபாடுகள் அடுத்த இரண்டு காலண்டுகளையும் பாதிக்கும் போல் தெரிகிறது.

இவை இரண்டிற்கும் இடையே ஒரு கால இடைவெளி இருந்து இருந்தால் GDP இந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்காது.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரு வகையில் நல்லது தான். ஆனாலும் அவை கொண்டு வரப்பட்ட காலங்களும், அவசர கோலமாக முன் திட்டமிடுதல் இல்லாதல் போன்றவை GDPயை மன்மோகன் காலத்தில் இல்லாத அளவிற்கு கீழ் நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

இந்த நிலையில் தான் ஜெட்லி 50,000 கோடி அளவிற்கு திட்டங்களை அறிவித்து பொருளாதார தேக்கத்தை சரிப்படுத்த முனைந்துள்ளார்.

மீட்சிக்கு இது போதுமா? என்ற கேள்விகள் இருக்கும் சூழ்நிலையில் இந்த ஐம்பதாயிரம் கோடியை அரசு எங்கிருந்து எடுக்க போகிறது என்ற கேள்விகள் வருகிறது.

புதிதாக வந்த GSTக்கு வணிகர்கள் தயார் படுத்திக்க கொள்ளாததால் ஏற்கனவே வந்து கொண்டிருந்த வணிக வரியும் குறைந்துள்ளது.

இதனால் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் கணக்கு போட்டு வைத்து இருந்த வருமானமும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த ஐம்பதாயிரம் கோடியை இந்த வருமானத்தில் கை வைத்தால் பட்ஜெட்டில் துண்டு விழும்.

இது நிதி பற்றாக்குறையை 3.2% அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கை பிசக வைக்கும்.

அப்படி நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் சமயத்தில் சர்வதேச கிரெடிட் ஏஜென்சிகள் இந்திய ரேட்டிங்கை குறைத்து விட வாய்ப்பு உள்ளது.'

அவ்வாறு குறைத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வருவது கடினம்.

இப்படி, ஒரு திரிசங்கு நிலை ஏற்பட்டது தான் அருண் ஜெட்லி அவசர கூட்டம் போடுவதற்கும், மோடி ஒரு குழுவை அமைப்பதற்கும் முக்கிய காரணம்.

இறுதியாக பார்த்தால் இந்த பாதிப்பு ஒரு தற்காலிகம் தான். தற்காலிகம் என்றால் ஒரு வருடம் வரை சுணக்கம் தரலாம்.

ஆனால் அதன் பின் மீள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதனால் ஒவ்வொரு முறை குறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்கி போடலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக