வியாழன், 7 ஜனவரி, 2016

மீண்டும் பங்குச்சந்தையில் புயலைக் கிளப்பும் சீனா

நேற்றும் இன்றும் உலகக் காரணிகள் இந்திய சந்தையை கடுமையாக பதம் பார்த்து வருகின்றன.


ஒரு பக்கம் வட கொரியாவின் குழந்தை அரசர் குண்டு போட்டு விளையாட்டுக் காண்பித்து வருகிறார். அதுவும் சந்தை சரிவுகளுக்கு காரணமாக கருதப்படுகிறது.



ஆனால் பெரும்பாலும் வட கொரியா மிரட்டுதலுக்காகத் தான் இவ்வாறு செய்து வருகிறது. அதனால் பெரிய அளவில் போர் பதற்றம் வர வாய்ப்பில்லை என்றே கருதலாம்.

அடுத்து, சீனாவின் பொருளாதாரம் வீழும் விடயம்.

நாம் இதற்கு முன்னதாக சொன்னவாறே சீனாவின் வீழ்ச்சி என்பது உடனடியாக தீர்க்க முடியாத ஒன்று. நீண்ட காலமாக இருந்து வந்த குமிழ் தான் தற்போது உடைய ஆரம்பித்துள்ளது. அதனால் உடனடியாக தீர்ப்பதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதே உண்மையான நிலைமை.

முன்பு எழுதிய சீனாவின் வீழ்ச்சி பற்றிய தொடரை தற்போது படித்து பார்ப்பது நிறைய விடயங்களை புலப்பட செய்யும்.

பார்க்க: சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

தற்போது சீனாவின் தொழில் துறை வளர்ச்சியை குறிப்பிடும் PMI என்ற அளவு கோல் எதிர்பார்த்ததை விட கீழே வந்துள்ளது. அது தான் தற்போதைய சரிவிற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

இதனால் கச்சா எண்ணையை அதிகம் பயன்படுத்தும் நாடான சீனா வாங்குவதை குறைக்கும் வாய்ப்பு உள்ளதால் எண்ணெய் விலை 33 டாலருக்கு அருகில் வந்து நிற்கிறது.

இப்படி பல உலக அளவிலான காரணங்கள் கூடிக் கும்மி அடிப்பதால் சந்தை தொடர் வீழ்ச்சியில் உள்ளது. 25,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு கீழ் வந்துள்ளது கொஞ்சம் அதிகமாகத் தான் தெரிகிறது.

ஒன்றைக் கவனித்தால் கடந்த வருடம் சீனாவையும் ஒரு காரணமாக காட்டி சந்தை 30,000 சென்செக்ஸ் புள்ளிகளில் இருந்து 26,000 புள்ளிகளில் வந்து நின்றது.

தற்போது மேலும் அதே சீனாவை காரணம் காட்டிக் குறைவது பதற்றத்தின் ஒரு நிலையாகவே பார்க்க முடிகிறது. உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.

இன்னும் சீனா ஸ்டீல், ரப்பர், உலோகங்கள் போன்றவற்றை குறைந்த விலையில் இங்கு வந்து கொட்ட வாய்ப்பு இருப்பதால் இந்த துறை சார்ந்த பங்குகளை தவிர்ப்பது நல்லது. மற்ற துறைகள் தப்பி விட வாய்ப்பு உள்ளது.

நமது உள்நாட்டுக் காரணிகளின் நிலையை இந்த மாதம் முதல் வெளிவரும் காலாண்டு முடிவுகள் ஓரளவு காட்டும். அது தான் சந்தையின் அடுத்த உண்மையான போக்கை தீர்மானிக்க உதவும். அது வரை 25 முதல் 26 ஆயிரம் நிலை தான் எல்லையாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக