புதன், 13 ஜனவரி, 2016

வரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்

எம்மிடம் ஒரு நண்பர் நீண்ட நாள் நோக்கில் சில தனியார் நிறுவனங்களின் திட்டங்களைக் குறிப்பிட்டு இணையலாமா? என்று கேட்டு இருந்தார்.


இன்சுரன்ஸ் திட்டங்களைப் பொறுத்த வரை எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகம். இன்னும் அதன் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் போட்டி போடும் அளவு உள்ளது.



தற்போதைய சூழ்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் வெகு வேகமாக இணைக்கப்படுகின்றன.

இது தவிர இருபது, முப்பது வருடங்கள் என்று திட்டங்களில் முதலீடு செய்யும் போது அப்பொழுது அந்த நிறுவனங்கள் இருக்கிறதா? அல்லது எந்த பெயரில் இயங்குகின்றன என்பன போன்ற நடைமுறை சிக்கல்கள் அதிகமாகவே உள்ளன.


இந்த காரணங்களால் எல்.ஐ.சியில் உள்ள இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைவது சிறந்ததாக இருக்கும்.

தற்போது வருமான வரி சேமிப்பதற்கு முதலீடுகளை செய்யும் காலம் என்பதால் நேரத்திற்கு ஏற்றவாறு எல்.ஐ.சி இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

அந்த இரண்டையும் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..

முதல் திட்டத்தின் பெயர். Jeevan Labh Plan 836.

இது ஏற்கனவே இருக்கும் வழக்கமான இன்சுரன்ஸ் திட்டம் போன்றது.

என்ன வித்தியாசம் என்றால், வழக்கமான திட்டங்களில் 20 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 20 வருடங்களுக்கு தான் காப்பீடு பொருந்தும்.

ஆனால் இந்த திட்டத்தில் பரீமியம் செலுத்திய வருடங்களுக்கு பின்னரும் காப்பீடு சில வருடங்கள் தொடரும்.

அதாவது 16 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 25 வருடங்களுக்கு காப்பீடு பயனைப் பெறலாம். இதே போல் 10 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 16 வருடங்களுக்கும், 15 வருடங்களுக்கு கட்டினால் 21 வருடங்களுக்கும் காப்பீடு தொடரும்.

காப்பீடு காலம் முடிந்த பிறகு காப்பீடு தொகை, ஒவ்வொரு வருடம் வழங்கப்பட்ட போனஸ், இறுதி போனஸ் போன்றவற்றை சேர்த்து பெறலாம்.

அதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறந்து விட்டால் அவரது உறவுகள் காப்பீடு தொகை, அதுவரை கொடுக்கப்பட்ட போனஸ் தொகை போன்றவற்றை பெறலாம்.

இந்த திட்டத்தில் குறைந்த பட்ச காப்பீடு தொகை இரண்டு லட்ச ரூபாய்.

உதாரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் காப்பீடிற்கு வருடத்திற்கு 23,000 என்று 16 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 25 வருடங்களுக்கு பிறகு 13 லட்ச ரூபாய் மொத்தமாக கிடைக்கும்.

மேலும் சில உதாரணங்கள் கீழே உள்ள அட்டவணையில் உள்ளது.




அடுத்த இரண்டாவது திட்டத்தின் பெயர். Shikhar Plan 837.

இது மேலை நாடுகளில் உள்ளது போல் முழுமையான இன்சுரன்ஸ் திட்டம். இதில் நாம் செலுத்தும் பணம் திருப்பிக் கிடைக்காது. அதனால் முதலீடு திட்டம் போல் கருத முடியாது.

அதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் செலுத்திய தொகையில் இருந்து பத்து மடங்கு அதிக பணம் குடும்பத்திற்கு கிடைக்கும்.

இந்த திட்டத்தில் பரீமியம் என்பது ஒரு முறை மட்டும் தான் கட்ட வேண்டும்.

இந்த திட்டத்தில் குறைந்த பட்ச பரீமியம் தொகை ஒரு லட்ச ரூபாய். அதிக பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.

உதாரனத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் பரீமியம் செலுத்தினால் நமது காப்பீடு காலத்தில் நிகழும் துயர நிகழ்வுகளின் பின் உறவுகள் இருபது லட்ச ரூபாய் காப்பீடு தொகையாக பெறுவார்கள்.

இந்த இரண்டு திட்டங்களுமே வருமான வரி விலக்கு பலனைப் பெறுகின்றன. பரீமியம் தொகையும் மற்ற நிறுவனங்களை விட பரவாயில்லை. அதனால் இன்சுரன்ஸ் திட்டம் வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக