வியாழன், 20 ஏப்ரல், 2017

ஜெய் பிரகாஷ் நிறுவனத்தால் இறக்கத்தில் வங்கி பங்குகள்

சிமெண்ட் உற்பத்தியில் வட இந்தியாவில் புகழ் பெற்ற நிறுவனம் ஜெய் பிரகாஷ் அசொசியட்ஸ்.


சிமெண்ட் மட்டுமல்லாமல் மின்சார உற்பத்தி போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தது.



ஆனால் ஹைட்ரோ மின் உற்பத்தி தொடர்பான சில முடிவுகளில் ஜேபி நிறுவனம் எடுத்த சில முடிவுகள் அந்த நிறுவனத்திற்கு பாதகமாக அமைந்தன.

அதனால் மின் உற்பத்தி பிரிவு மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகள் கூட கடுமையான இழப்பில் இயங்கி வந்தன.

மொத்தமாக கிட்டத்தட்ட 36,000 அளவு கடன் சுமை ஏறியது.

இதனை நிறுவனத்தின் வழக்கமான வருமானம் மூலம் தீர்க்க முடியாததால் மின் நிலையங்கள் முதல் சிமெண்ட் ஆலைகள் வரை ஒவ்வொன்றாக விற்க தொடங்கியது.

ஆனாலும் வங்கிகளில் வாங்கிய கடனை தீர்க்க முடியுமா என்பது கேள்வியாகவே இருந்தது.

இதன் தொடர்ச்சியாகத் தான் ஆர்பிஐ ஜெய் பிரகாஷ் குழுமத்திற்கு கொடுத்த கடனில் 25% பகுதியை வாராக் கடனாக அறிவித்தது.

வாராக் கடன் என்றால் இனி அவர்கள் ஈடாக கொடுத்த சொத்தை விற்று Restructuring என்பதன் மூலம் தான் இந்தக் கடனை மீட்க வேண்டும். அதிலும் முழுமையாக வருமா என்பது சந்தேகமே.

இந்த நிகழ்வு இன்று நிதி நிலை அறிவித்த Yes Bank, IndusInd Bank என்ற இரண்டு வங்கி பங்குகளிலும் எதிரொலித்தது.

இந்த இரண்டு வங்கிகளுமே புதிய வங்கிகள் என்பதால் அதிக வளர்ச்சி எதிர்பார்க்கலாம் என்ற நினைப்பில் முதலீட்டாளர்கள் செல்லமாக தான் வைத்து இருந்தனர்.

இந்த வங்கிகளின் வாராக் கடன் விகிதம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே இருந்தது. வளர்ச்சியும் 30% என்ற விகிதத்தில் கொடுத்து வந்தனர்.

ஆனால் Yes Bank 240 கோடியும் IndusInd Bank வங்கி 122 கோடியும் ஜெய் பிரகாஷ் குழுமத்திற்கு கொடுத்து இருந்தன.

இந்தக் கடன் வாராக் கடன் பிரிவில் சேர, தற்போதைய நிதி அறிக்கையில் யெஸ் வங்கி 160% அளவு உயர்வையும், IndusInd வங்கியும் 60% அளவில் வாராக் கடன் உயர்வை சந்தித்தன.

இதனால் கடன், டெபாசிட் போன்றவற்றில் நல்ல வளர்ச்சியைக் கொடுத்து இருந்தாலும் NPA என்பதில் இந்த வங்கி பங்குகள் கடுமையாக அடி வாங்கின. ஐந்து சதவீதத்திற்கும் மேல் சரிந்து விட்டது.

இதில் இண்டஸ்இன்ட் வங்கி கார்பரேட், சில்லறை கடன்கள் போன்றவற்றில் நல்ல விகிதத்தில் கலந்து கொடுத்து இருப்பதால் மீள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் இறக்கம் என்பது வாங்கும் வாய்ப்புகளே.

இன்னும் ஜெய் பிரகாஷ் குழுமத்திற்கு ஐசிஐசிஐ, Axis போன்ற வங்கிகளும் அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன. அவற்றிலும் இந்த மீளாக் கடன் நீடிக்குமாயின் நிதி அறிக்கையின் போது பங்குகள் கீழ் விழ வாய்ப்புகள் உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக