வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ரிசர்வ் வங்கி அறிக்கை தரும் சில உண்மைகள்

நேற்று ரிசர்வ் வங்கி தமது கால் வருட நிதி கொள்கைகளை அறிவித்தது.


சந்தையிலும் பெரிதளவு வட்டி விகிதங்களை குறைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனாலும் வளர்ச்சி தொடர்பாக ரிசர்வ் வங்கி தரும் சில தரவுகளை சந்தை நம்பி இருந்தது.



அது போல, CRR, ரெபோ ரேட் போன்ற விகிதங்களில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் ரிவர்ஸ் ரெபோ ரேட்டில் சில மாற்றங்களை செய்தது.

அதாவது ஏற்கனவே இருக்கும் 5.75% என்பதில் இருந்து 6% என்று வட்டி விகிதங்களைக் கூட்டியது.

பார்க்க: CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

ரெபோ ரேட் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வாங்கிய பணத்திற்கு கொடுக்கும் வட்டி. அதே சமயத்தில் ரிவர்ஸ் ரெபோ என்றால் ரிசர்வ் வங்கி வங்கிகளின் பணத்திற்கு வைத்து இருப்பதற்கு கொடுக்கும் வட்டி.

இங்கு ரிவர்ஸ் ரெபோ கூட்டப்பட்டிருப்பதன் மூலம் ரிசர்வ் வங்கியானது வங்கிகளின் பணத்திற்கு அதிக வட்டி கொடுக்கும். இவ்வாறு வட்டி கூட்டப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கே பணவீக்கத்தை 4% என்ற அளவில் கொண்டு வருவது தான்.

ஆனால் நாம் முன்னர் சொன்னவாறே, நாட்டில் தற்போது நிலவும் வறட்சி பணவீக்கத்தை அதிக அளவில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பார்க்க: இந்திய பங்குச்சந்தை எதிர்நோக்கும் பாதகமான இரு காரணிகள்

இதனால் 2017ன் முதல் அரை ஆண்டில் 4.5% என்றும், இரண்டாவது பிற்பகுதியில் 5% என்ற அளவிலும் பணவீக்கம் உயர வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளார்கள்.

இதனைக் கட்டுப்படுத்த ஒரு முறையாக ரிவர்ஸ் ரெபோ ரேட்டை கூட்டி உள்ளார்கள். இதனால் வங்கிகள் மேலும் அதிக அளவில் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் வைப்பாக வைத்துக் கொள்ளும்.

இது பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தி பணவீக்கத்தையும் கட்டுக்கும் கொண்டு வரும் என்பது ஒரு எதிர்பார்ப்பாகும்.

இதனால் தான் சந்தையில் எல்லோரும் நிப்டி 9500யைத் தொடும் என்று சொல்லும் சூழ்நிலையில் நாம் சிறிது மாற்று திசையில் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த வறட்சி தடையை சந்தை எதிர்மறையாக கூட எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

ஆனால் ஜிடிபி வளர்ச்சி 7.4% என்று சொல்லி இருப்பதன் மூலம் நமது நெஞ்சில் ஓரளவு பாலை வார்த்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.

தற்போதைக்கு சந்தை ட்ரேடிங் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் முதலீடு செய்பவர்களுக்கு கீழ் நோக்கிய திருத்தம் என்பது கட்டாய தேவை.

இது தவிர, வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் சார்ந்த பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம் என்று கூறி இருப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக