சனி, 22 பிப்ரவரி, 2014

வளர்ச்சியை எதிர்பார்க்கும் வங்கி பங்குகள்

இந்த பதிவானது வங்கித் துறைக்கு இந்த ஆண்டில் வந்துள்ள நேர்மறை செய்திகளின் தொகுப்பையும், அதனால் ஏற்படும் பலன்களையும் விவரிக்கிறது.


நமது தளத்தின் அடுத்த போர்ட்போலியோவை எதிர்பார்ப்பதாக ஒரு நண்பர் கேட்டிருந்தார்.

பல போர்ட்போலியோக்களை பரிந்துரை செய்வது அவ்வளவு எளிதல்ல. பரிந்துரை செய்யும் போது அதற்கான கடினத் தன்மையை பல கோணங்களில் ஆராய வேண்டி உள்ளது.

இந்த தளத்தினை நாம் பகுதி நேரமாகவே நடத்தி வருவதால் அதற்கான நேரமும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த தளத்தின் நோக்கம் பங்குகளை பரிந்துரை செய்வதை விட நமக்கு தெரிந்தவற்றைப் பகிருவதே. அதனால் தான் ஒரு போர்ட்போலியோவை தரமுடன் தொடர விரும்புகிறோம்.


இது வரை ஐந்து  மாதங்களில் 26% லாபம் கொடுத்துள்ள எமது போர்ட்போலியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
போர்ட்போலியோ

இன்னும் நாம் பரிந்துரைத்த பங்குகள் நல்ல விலைகளில் நல்ல நிதி முடிவுகளுடன் கிடைக்கவே செய்கின்றன. இது தவிர நம்மைக் கடந்து செல்லும் சில முக்கிய குறிப்புகளை பகிர்கிறோம். அவை பங்குகளை தேர்ந்தெடுக்க உதவும் என்று நம்புகிறோம்.

இந்த நோக்கத்தின் தொடர்ச்சியாக கீழே உள்ள குறிப்பினை இந்த வருடத்தில் வங்கி பங்குகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கடந்த ஒரு பதிவில் அதிக வேலை வாய்ப்புகளை வங்கித் துறை வழங்க இருக்கிறது என்று பார்த்தோம். அதனை இங்கு பார்க்க..
வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்

தற்பொழுது மேலும் சில சாதகமான செய்திகள் வங்கித்துறையை ஒட்டி வந்த வண்ணம் உள்ளன. இதனை கீழே தொகுத்து உள்ளோம்.

கடந்த வாரம் நிதி அமைச்சர் தமது இடைக்கால பட்ஜெட்டில் வங்கி துறைக்கு என்று 14000 கோடி நிதி ஒதுக்கீடு.செய்துள்ளார். இது கடந்த ஆண்டு வாராக் கடன்கள் கடுமையாக அதிகரித்து இருந்ததால் வங்கி துறைக்கு ஏற்பட்ட சரிவைத் தடுக்க உதவும். இந்த நிதி பொது துறை வங்கிகளுக்கு பகிர்ந்து அள்ளிக்கப்பட உள்ளது.

அடுத்து பண வீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் பண வீக்கம் மிகக் குறைவாக ஐந்து சதவீதம் அருகில் வந்துள்ளது. இந்த வருடம் இது மேலும் தொடரும் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த வருடம் வங்கிகளின் வட்டி விகிதங்கள் அதிக அளவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் வங்கிகள் அதிக அளவில் கடன்கள் கொடுக்க முடியும். இது நேரடியாக வங்கிகளின் வருமானத்தில் அதிக பலனைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

இறுதியாக கடந்த வருடம் அணைத்து வங்கிகளுக்கும் வாராக்கடன் அதிக அளவில் அதிகரித்து விட்டது. உதாரணத்துக்கு SBI வாராக் கடன் ஐந்து சதவீதக்கும் மேல் சென்றது. இதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சி குறைவு. ஆனால் அரசின் கடந்த ஆண்டு நடவடிக்கைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியிலே பலன் கொடுக்க ஆரம்பிக்கும் என்று நம்புகிறோம். அத்தகைய சூழ்நிலையில் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வாராக் கடன்கள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த இரண்டு வருடங்கள் வங்கிகள் மீண்டும் வளர்ச்சி நிலையில் வர வாய்ப்பு அதிகம்.

இதனால் வங்கி பங்குகளை உங்கள் போர்ட்போலியோவில் குறைந்த பட்சம் பத்து சதவீதம் மேல் வைத்துக் கொள்ளுங்கள். போர்ட்போலியோ மதிப்பை கணிசமாக அதிகரிக்க உதவும்.

அதே நேரத்தில் நாம் நேர்மறையாக பார்க்கும் சில வங்கி பங்குகளை பகிர்கிறோம். அதனை நன்றாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுத் துறை வங்கிகளில் SBI, தனியார் துறை வங்கிகளில் HDFC, YES Bank போன்ற பங்குகள் நாம் விரும்பும் பங்குகள்.

இந்த பங்குகளின் மூலம் நல்ல பலன் கிடைக்க குறைந்தபட்சம் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்திற்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. நன்றி திரு கோலப்பன் அவர்களே!

    உங்களால் மேலும் பல போர்ட்போலியோக்களை maintain பண்ண முடியும்..... கால இடைவெளியில் பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு போர்ட்போலியோக்களின் தேவைகள் அவசியமாகின்றன. குறிப்பாக பொதுத்தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடக்க இருக்கிறது; எனவே, கொள்கை வாரியாக majority government அமைய வாய்ப்பிருக்கும் கட்சிகளின் சித்தாந்தப்படி பங்குச் சந்தையிலும் மாற்றங்கள் நிகழலாம்.

    SBI நேற்றே வட்டி குறைப்பு அறிமுகப்படுத்தி விட்டது. எனவே, மற்ற பொது வங்கிகளும் தனியார் வங்கிகளும் அதைப் பின் தொடர வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! என்னுடைய நேரமும் ஓர் முக்கிய காரணி...கடந்த போர்ட்போலியோ பகிரும் போது நிறைய நேரம் அதற்கு மட்டும் செலவழிக்க வேண்டி இருந்தது. இருந்தாலும் தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து போர்ட்போலியோ போல் அல்லாமல் அவ்வப்போது சில பங்கு பரிந்துரைகளை பகிர்கிறேன். நன்றி!

      நீக்கு