புதன், 26 பிப்ரவரி, 2014

CERC பரிந்துரை, 15% சரிந்த NTPC, பயன்பெறும் TATA

CERC அமைப்பின் பரிந்துரை பங்குச்சந்தையில் மின் துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு நேர்மறை, எதிர்மறை என்று இரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைப பற்றிய விரிவான பதிவே இந்த கட்டுரை.


பங்குசந்தையில் ஒரு முக்கியமான டிப்ஸ் உள்ளது. "Don't fall in love with your stocks".

எமது பங்குச்சந்தை முதலீட்டின் ஆரம்பக்கட்டத்தில் இந்த தவறை செய்து கொண்டே இருந்தேன். ஏனென்றால் அப்பொழுது  அரசு பொது துறை நிறுவனங்கள் மீது அவ்வளவு ஒரு காதல் என்று சொல்லலாம்.


எமது போர்ட்போலியோவில் NTPC, ONGC, Coal India, Dena Bank, NLC என்று முழுமையாக அரசு நிறுவனங்களால் நிரப்பபட்டிருந்தது. லாபம் பெருமளவு இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் சென்று கொண்டுஇருந்தது.

பொதுத்துறை நிறுவனங்களும் நன்றாகவே சென்று கொண்டு இருந்தன. அதிலும் NTPC ஒரு வருடத்தில் 30% அளவு லாபம் கொடுத்தது நியாபகம் உள்ளது.

ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்.

முறையற்ற நிர்வாகம், அரசின் தவறான கொள்கைகள், தொலைநோக்கு பார்வை இல்லாதது என்று பல காரணங்களால் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் படு மோசமாக இயங்கிக் கொண்டுஇருக்கின்றன.

கழிந்த வருடம் என்று எடுத்துக் கொண்டால் லாபம் கொடுத்த அரசு நிறுவன பங்குகளை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை.

தற்போதைய புதிய செய்திகளின் படி நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த BHEL, NTPC போன்ற நிறுவனங்களும் எதிர்மறையை நோக்கி பயணிக்கின்றன.

அதில் NTPCயைப் பற்றிய தற்போதைய நிகழ்வுகளை விரிவாக பார்ப்போம்.

கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டில் மூலப்பொருளான நிலக்கரி கிடைக்கப் பெறாமை, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் அதிகப்படியான விலை போன்ற காரணிகளால் NTPC பாதிக்கப்பட்டு இருந்தது.

அது போக உலக வெப்பமயமாக்கல் பிரச்சனை காரணமாக சர்வதேச நாடுகளின் கொடுத்த அழுத்தத்திற்கு ஏற்ப மத்திய அரசும் NTPC நிறுவனத்தின் வியாபாரத்தை விரிவாக்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.

அதனால் 200 ரூபாயில் இருந்த பங்கு விலை சரிந்து கடந்த ஒரு வருடமாக 160 என்ற நிலையிலே ஊசலாடிக் கொண்டு இருந்தது.

தற்பொழுது கடந்த வாரத்தில் வந்த புதிய செய்திகளால் இரண்டு நாட்களில் மட்டும் மேலும் 15% வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இந்த செய்தியின் சுருங்கிய சாரம்சத்தை கிடைத்த யூகங்களின் அடிப்படையில் ஏற்கனவே எழுதி இருந்தோம்.

அதனை இங்கு பார்க்கலாம்.
வரிவிலக்கு போனதால் சரிவை சந்தித்த NTPC

புதிய செய்தி இது தான்..

CERC என்ற மத்திய மின்சார பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகளின் படி NTPC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வரி சலுகைகளும், மானியங்களும் குறைக்கப்படுகின்றன. இதனால் NTPC நிறுவனத்தின் EPS மதிப்பு வரும் காலங்களில் 18% அளவு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக NTPC பங்குகள் 15% அளவு சரிந்துள்ளன.

Valuation அடிப்படையில் பார்த்தால் இந்த வீழ்ச்சி கொஞ்சம் அதிகமாகவே சரிந்தது போல் தோன்றுகிறது.

ஏற்கனவே NTPC பங்கு 200ல் இருந்து 160க்கு சரிந்து இருந்தது. டிசம்பரில் CERC தொடர்பான யூகங்கள் காரணமாக மட்டும்  11% சரிந்து இருந்தது. தற்பொழுது செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் 15% சரிந்து உள்ளது. அதனால் 12~15% அதிகமாகவே பங்கு சரிந்து உள்ளது எனக் கருதலாம்.

ஏற்கனவே இந்த பங்கில் முதலீடு செய்து அதிக நஷ்டம் அடைந்து உள்ளவர்கள் தற்பொழுது வாங்கி சமநிலைப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். 10% அளவுக்கு தற்போதைய விலையில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால் புதிதாக இந்த பங்கில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனென்றால் Aggressive Growth என்று எதனையும் இந்த பங்கில் காண முடிய வில்லை.

அதே நேரத்தில் CERC அறிக்கையின் காரணமாக பிற தனியார் மின் துறை நிறுவனங்களான Tata Power அதிக அளவிலும், Adani Power ஓரளவும் பயன் பெற உள்ளது.

அதாவது, கடந்த மூன்று வருடங்களாக நிலக்கரி மூலப் பொருளின் அதிகபடியான விலை காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை இந்த நிறுவனங்களின் முக்கிய நுகர்வோரான குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தற்பொழுது CERC அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இந்த நிறுவனங்களுக்கு  "Bailout" வழங்க பரிந்துரை செய்து உள்ளது.

இதன் மூலம் Tata Power நிறுவனத்திற்கு 1200  கோடியும் Adani Power நிறுவனத்திற்கு 800 கோடியும் கிடைக்கும்.

அதே நேரத்தில் திருத்தியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணங்களும் இந்த நிறுவனகளுக்கு சாதகமாக உள்ளது. இது வரும் நிதி ஆண்டுகளில் எதிரொலிக்கலாம்.

அதனால் Power துறையில் இந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். இதில் Tata Power முதல் தேர்வாக உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக