ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மென்பொருள் நிறுவனங்களின் HEDGING பற்றி அறிவோம்.

இந்த பதிவில் மென்பொருள் நிறுவனங்கள் 'HEDGING' என்று சொல்லப்படும் நாணய மாற்று பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.


இந்திய மென்பொருள் நிறுவனங்களின் பெரும்பாலான வணிகம் ஏற்றுமதி மூலம் நடப்பதால், ரூபாய் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் நிறுவனத்தின் லாப விகிதங்களில் கடுமையாக பாதிக்கிறது.

இன்போசிஸ் நிறுவனம் 98 சதவீதமும், TCS நிறுவனம் 90 சதவீதமும், விப்ரோ 88 சதவீதமும் ஏற்றுமதியை சார்ந்து இருக்கிறது.

அதனால் மற்ற துறைகளை விட மென்பொருள் துறையில் ரூபாய் மதிப்பு மாற்றங்கள் அதிக அளவு பாதிக்கிறது.

அதற்கடுத்து மருந்து, எண்ணெய் துறைகள் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

ஒருவரது நஷ்டம் மற்றொருவருக்கு லாபம் 

பெரும்பாலும் ஒருவர் தமது போர்ட்போலியோவில் குறைந்தது இந்த துறைகளில் இரண்டு பங்குகளையாவது வைத்து இருப்பர். இதனால் நிறுவனங்கள் இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கின்றன என்பதனைப் பற்றி அறிவதும் அவசியமாகிறது..

HEDGING என்பது லாப சம்பாதிப்பிற்கான வழிமுறை அல்ல. வியாபாரத் தன்மை சாராத, புறநிலை பிரச்சினைகளில் இருந்து ஏற்படும் நஷ்டத்தை கட்டுப்படுத்த உதவும் வழி முறைகளைக் குறிக்கும் ஒரு பதம் ஆகும்.

இதில் ஒன்று தான் நாணய மாற்றுப் பிரச்சினை.

உதாரனத்துக்கு ஒரு ரூபாய் அளவு ஏற்படும் மாற்றம் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபத்தில் 0.5% அளவு பாதிக்கும்.

அதாவது ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு 58லிருந்து 59 ஆகக் கூடினால், இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 0.5% கூடி விடும். அதே நேரத்தில், 57 ஆகக் குறைந்தால் 0.5% குறைந்து விடும். இது எதிர்மறையாக எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களில் எதிரொலிக்கும்.

ஆனால் எதிர்கால ரூபாய் மதிப்பினை துல்லியமாகக் கணக்கிடுவது என்பது கடினமான காரியம் இதனால் நிறுவனங்கள் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி ரிஸ்க்கை சமநிலைப்படுத்தி விடுகின்றன.




இந்த வழிமுறைகளைப் பற்றிய விவரங்கள் கீழே உள்ளன.

Forwards

இந்த முறையின் மூலம் ஒரு குறிப்பிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தை அடைந்த பிறகு பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. ஆனால் காத்திருக்கும் கால அளவிற்கான வட்டியையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

Options

இந்த முறையில், ஒரு குறிப்பிட்ட நாணய விகிதம் ஆரம்பத்திலே தீர்மானிக்கப்படுகிறது. அந்த விகிதத்தில் பணப் பரிமாற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அதிக அளவில் ஏற்படும் நாணய விகித மாற்றம் நிறுவனத்தைபாதிக்கும்..

Swaps

இந்த முறையில், வாங்குபவரும், விற்பவரும் நாணய மாற்று விகிதத்தால் ஏற்படும் லாப, நஷ்டங்களை சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இது 'உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்' என்று ஓரளவிற்கு சமநிலைப்படுத்தபட்ட அணுகுமுறை.


மேலே கூறப்பட்ட முறைகளை ஒவ்வொரு நிறுவனமும் பல விதமாக கலந்து அணுகுவதன் மூலம் நாணய மாற்றால் ஏற்படும் நஷ்டங்களை ஈடு கட்டலாம்.

இதில் ஒருநிறுவனம் எந்த முறையை பயன்படுத்துகிறது  என்பதை அறிவதன் மூலம் ரூபாய் மதிப்பு கூடுதல், குறைவுகளால் ஏற்படும் விளைவுகளை நாமும் ஓரளவு சுயமாகவே மதிப்பிட முடியும்.

நண்பர்களுக்கு எமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக