வெள்ளி, 10 மார்ச், 2017

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1

இதற்கு முன் பங்குச்சந்தையில் வெற்றியை தொட்டவர்கள் என்ற வரிசையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன்  பபெட் போன்றவர்கள் பற்றி எழுதி இருக்கிறோம்.


ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை பார்த்தால் 5000 ரூபாயில் ஆரம்பித்து இன்று 13,000 கோடியைத் தொட்டுள்ளார்.


Prof M என்று சொல்லப்படும் மற்றதொரு பேராசிரியர் பங்குசந்தையில் மட்டும் ஆயிரம் கோடியை  தாண்டியுள்ளார்.

பார்க்க:

இதையெல்லாம் பேராசையை தூண்டும் விதத்தில் இருந்தாலும் ஒரு நம்பிக்கையை தரும் விதத்தில் எடுத்துக் கொண்டால் நமக்கும் பங்குச்சந்தை வெற்றி என்பது தூரமல்ல.

ஏனென்றால் இவர்கள் அனைவருமே பரம்பரை பணக்காரர்கள் அல்ல. சிறிய முதலீட்டில் ஆரம்பித்து அதிக பொறுமையுடன் இருந்ததால் வெற்றியை சுவைத்தவர்கள்.


அடுத்து ஒரு வெற்றியாளரை பார்ப்போம். அவர் பெயர் ராதா கிருஷ்ணன் தமணி. தற்போது IPOவில் வெளிவரும் D-Mart நிறுவனத்தின் சொந்தக்காரர் தான் அவர்.

கடந்த ஒரு பதிவில் தான் D-Mart IPOவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Avenue Supermarts IPOவை வாங்கலாமா? 

எதிர்பார்த்ததை விட அதிகமாக 108 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றால் அதில் ஆர்,கே,தமணி என்ற தனி மனிதரும் முக்கியத்துவம் பெறுகிறார்.

IPOவில் குறிப்பிடப்பட்ட 300 ரூபாய் என்ற பங்கு விலையில் பார்த்தால் கூட அவரிடம் இருக்கும் 68% பங்குகள் 12,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு பெறும்.

இதற்கு மூலதனத்தை எப்படி சம்பாதித்ததார் என்ற கேள்வி நமக்கு வரலாம்.

தந்தை இறந்த போது நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த போல்ட் தயாரிக்கும் பாக்டரியை மூடி விட்டு கஷ்டத்தில் தான் பங்குச்சந்தை தரகராக தான் ஆர்,கே,தமணி உள்ளே நுழைந்தார்.

அதனால் பரம்பரை சொத்து கூட இல்லை. முழுவதுமே பங்குச்சந்தை வர்த்தகத்தில் தான் வந்தது.

எண்பதுகளில் வெறும் ஸ்பெகுலேடர் போன்று வர்த்தகம் மூலம் தான் சந்தைக்குள் நுழைந்தார். அந்த குறுகிய கால வர்த்தகத்தில் ஆரம்ப மூலதனத்தை சம்பாதித்தார்.

அதே நேரத்தில் நீண்ட கால மதிப்பீடல் முறையில் முதலீடு செய்து புகழ் பெற்றிருந்த சந்திரகாந்த் சம்பத்தையும் பின்பற்றினார்.

தற்போது Gillette என்று அழைக்கப்படும் Indian Shaving Products என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். அது லாபம் சம்பாதித்துக் கொடுக்க சில காலம் ஆனது.

அதே போல் முதலீடு செய்த மற்ற சில நிறுவனங்கள் நஷ்டத்தையும் கொடுத்தன.

ஆனாலும் மனிதர் நம்பிக்கையை தளர விடவில்லை. பொறுமையுடன் தமக்கென்ற முதலீடு முறைகளை உருவாக்கி கொண்டார்.

அவர் ஒரு நிறுவனம் மீது நம்பிக்கை கொண்டால் ஒரே தவணையில் முதலீடு செய்வார். அதே சமயம் அந்த நிறுவனம் நன்றாக செல்லவில்லை என்றால் ஒரே தவணையில் விற்று விட்டு வெளியேறி விடுவார்.

"பங்குகளின் மீது காதல் கொள்ளாதீர்" என்ற வாரன் பப்பெட் பொன்மொழி தான் இங்கு நினைவுக்கு வருகிறது.

ஆனால் பொது வெளியின் வெளிச்சத்தில் ஹர்ஷத் மேத்தா மூலம் தான் வந்தார்.

1991ல் மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தத்தை வைத்துக் கொண்டு புதிய பார்முலாக்களை படைத்து கொண்டு இருந்தார் ஹர்ஷத் மேத்தா.

அனைவரும் அவரை பின்பற்ற, ஒரு தனி மனிதனாக இந்திய பங்குச்சந்தையை நூறு சதவீதத்திற்கு மேல் ஒரே வருடத்தில் எடுத்து சென்ற பெருமைக்கு உரியவர்.

பார்க்க:
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா 

ஆனால் ஆர்.கே.தமணி மட்டும் அந்த சூழ்நிலையில் சந்தை மதிப்பீடலுக்கும் மேல் செல்கிறது என்று கருதி Short Position எடுக்க ஆரம்பித்தார்.

Short Position என்றால் பங்குகளை விற்று விடுவது என்று குறுகிய கால வர்த்தகத்தில் அர்த்தமாக கொள்ளப்படும்.

ஹர்ஷத் மேத்தா  வங்கியில் உள்ள பணத்தை திருடி தான் பங்குச்சந்தையை உயர்த்தி வருகிறார் என்று தெரிய வரும் போது பங்குசந்தை சரிகிறது. மற்றவர்கள் பணத்தை இழக்கிறார்கள், ஆனால் தமணி மட்டும் சரியான லாபத்தை சம்பாதித்தார்.

இதனை அடுத்து, இன்னொரு நிகழ்வில் ஆர்.கே.தமணி மீடியா வெளிச்சத்திற்கு வருகிறார்.

இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே ஒரு தனி நபர் வெறும் பங்குச்சந்தையில் புழலும் பங்குகளை மட்டும் வாங்கி ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயன்றார் என்றால் ஆர்.கே.தமணியாகத் தான் இருக்கும்.

கட்டுரையின் அடுத்த பகுதியில் தொடர்கிறோம்.
ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 2

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக