வெள்ளி, 31 மார்ச், 2017

இந்திய பங்குச்சந்தை எதிர்நோக்கும் பாதகமான இரு காரணிகள்

தற்போதைய சந்தை காளையின் பிடியில் இருந்து அவ்வளவு எளிதில் கீழே வராது போல் தான் தெரிகிறது.


பணவீக்கம், உற்பத்தி தரவுகள், அந்நிய செலாவணி போன்றவை தற்போது சந்தையை தாங்கி பிடிக்கும் அளவு சாதகமாக உள்ளன.



ஆனாலும் தொலை நோக்கில் பார்க்கும் போது சில விடயங்கள் இந்த சாதகத்தை மாற்றி அமைக்குமோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது.

இது உள்ளுணர்வு தான். ஆனால் எச்சரிக்கையாக அணுகுவது நல்லது என்றே தோன்றுகிறது.

முதல் ஒன்று, வறட்சி

தென்மேற்கு பருவக்காற்று கடுமையான அளவில் சராசரிக்கும் கீழ் சென்று பொய்த்து வருவது ஒரு கவலைக்குரிய விடயமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

தண்ணீர் பஞ்சம் என்பது தலை வைத்து கூட பார்க்காத கேரளா கூட இந்த வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு எச்சரிக்கையாகவே கருதலாம்.

கடந்த இரு நாட்களாக சுற்றுலா என்று தஞ்சாவூர், கும்பகோணம் என்று செல்ல முடிந்தது. அங்குள்ள விவசாயிகளிடம் மட்டுமில்லாமல் மக்களிடையே கூட மோடி அரசின் மீது கோபம் தெரிவதை பார்க்கலாம்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் டெக்னாலஜி, சீர்திருத்தம் என்று மேல்நோக்கி பார்த்துக் கொண்டு அடித்தளத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். அதன் பிறகு அவர் ஆட்சி நிலைக்க முடியவில்லை.

அந்த நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் மோடி விவசாயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஒரு அடிப்படை துறையில் அளவுக்கு மிஞ்சிய அதிருப்தி இருப்பது நல்லதல்ல.

இந்த வறட்சி நீடிக்குமாயின் மக்கள் செலவு செய்வது குறைந்து வளர்ச்சி சதவீதம் பாதிக்கப்பட கூட வாய்ப்பு உள்ளது.

நீடிக்கும் இந்த வறட்சியால் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் சொட்டு நீர் பாசன துறையில் இருக்கும் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்தால் பலன் கிடைக்கலாம்.

அடுத்து இரண்டாவது வேலையிழப்பு

நமக்கு ஏற்கனவே தெரிந்தது போல அமெரிக்க கலவர நிலவரங்கள், ஆட்டோமேசன் போன்றவை ஐடி துறையில் கடுமையான வேலை இழப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள்.

2021க்கு முன் நான்கு ஒரு பொறியாளர் வேலையிழக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள்.

இது போக, டெலிகாம், வங்கி துறையில் செலவினை குறைப்பதற்காக நிறுவனங்கள் இணைக்கப்படுவது அதிகமாகி வருகிறது.

இணைக்கப்பட்ட பிறகு ஒரே வேலையை செய்து கொண்டிருக்கும் நபர்கள் இரு நிறுவனங்களில் இருந்தால் ஒருவர் தூக்கப்படுவார் என்பது தான் யதார்த்தம்.

இப்படி ஐடி, டெலிகாம், வங்கி என்று இந்த மூன்று துறைகளும் சேர்ந்து கிட்டத்தட்ட பத்து லட்சம் வேலையிழப்புகளை கொடுக்கும் என்று கணித்து உள்ளார்கள்.

பத்து லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் மட்டும் என்று கருதினால் மறைமுக வேலை வாய்ப்புகளுடன் சேர்ர்கும் போது முப்பது லட்சம் என்ற அளவுக்கு கூட செல்லலாம்.

இரண்டு கோடி மக்கள் மட்டுமே வரி கட்டும் நமது நாட்டில் இந்த எண்ணிக்கை மிகப்பெரியது என்பதை நாம் மறுக்க இயலாது.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாதமும் ஜாப் டேட்டா என்ற ஒன்று மாதந்தோறும் வெளியிடப்படும். அந்த தரவுகள் பங்குச்சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் இந்தியாவில் அப்படியொரு தரவுகள்  வெளியிடப்படுவதாகவே தெரியவில்லை. அதனை சந்தையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

ஆனால் நாம் உச்சத்தில் இருக்கும் சந்தையில் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டிய தருணம்.

அதே நேரத்தில் பங்குசந்தை என்பது எந்த நேரத்திலும் முதலீடு வாய்ப்புகளை தரவல்லது. அதனால் பதற்றத்தில் தவிர்க்காமல் தேர்ந்தெடுத்து பங்குகளை அணுகலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக