சனி, 25 மார்ச், 2017

உள்வர்த்தக கூத்தில் மாட்டிக் கொண்ட ரிலையன்ஸ்

கடந்த ஒரு மாதமாக ஜியோ என்ற ஒற்றை பதத்தில் ரிலையன்ஸ் பங்கு கடுமையான ஏற்றத்தைக் கண்டு இருந்தது.


இவ்வளவிற்கும் ஜியோவில் கட்டண முறை அமல் படுத்தியதிற்கு மட்டுமே பங்குச்சந்தை கொஞ்சம் அதிகமாகவே துள்ளிக் குதித்தது என்று சொல்லலாம்.



ஆனால் மார்ச் மாத இறுதியில் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தியவர்களில் எத்தனை பேர் கட்டண சேவைக்கு மாறுகிறார்கள் என்பதை பொறுத்து தான் இந்த மகிழ்வைக் கொண்டாட முடியும்.

பொதுவாக ரிலையன்ஸ் பங்கினை நாம் எமது போர்ட்போலியோவில் பரிந்துரை செய்வதில்லை. அதற்கு வியாபர எத்திக்ஸ் என்பது அந்த நிறுவனத்தில் இல்லாதது என்பதும் ஒரு முக்கிய காரணம்.

ஊரை அடித்து உலை போடுவது என்று சொல்வார்கள். தாம் முன்னேற, மற்றவர்கள் என்ன ஆனாலும் கவலையில்லை என்பது அவர்களது ஆரம்ப காலந்தொட்ட நோக்கு என்பதில் பெரிய அளவில் மாற்றுக் கருத்து இருக்காது.

இப்பொழுது ஜியோ கூட தமிழ்நாடு அரசு அறிவித்த இலவச திட்டங்கள் போல கவரும் நடவடிக்கை தான். ஊரகப்புறங்களில் ஜியோவின் நெட்வொர்க் ஒரு புள்ளி கூட இல்லை என்ற சூழ்நிலையில் காசு கொடுத்து வாங்க யார் முன் வருவார்கள் என்ற பாமரக் கேள்வி வரத் தான் செய்கிறது.

எல்லாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் கொடுக்கும் கட்டண பயனாளிகள் அறிக்கையிலே தெரிந்து விடும்.

அடுத்து இன்றைக்கு வந்த செய்தி அடுத்த வாரத்தில் ரிலையன்ஸ் பங்கை குறுகிய காலத்திற்கு பதம் பார்க்க வாய்ப்பு உண்டு.

ரிலையன்ஸ் நிறுவனம் 2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் மற்ற சில துணை நிறுவனங்களை அமர்த்தி தங்கள் பங்கு விலையை செயற்கையாக ஏற்றம் இறக்கம் செய்து உள்ளார்கள் என்பது தான் அந்த குற்றச்சாட்டு.



இதன் மூலம் Futures & Options வர்த்தகத்தில் மட்டும் முறை கேடாக 500 கோடி அளவு சம்பாதித்து உள்ளார்கள் என்றும் செபி குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் அடுத்த ஓரு வருடத்திற்கு ரிலையன்ஸ் பங்கு Futures & Options வர்த்தகத்தில் இருக்க கூடாது என்று செபி உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்ஸ் இதனை கோர்ட்டில் அனுகவதாக சொல்லி இருந்தாலும் அவர்கள் மீதான நம்பிக்கையின்மை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது குறுகிய காலத்தில் ரிலையன்ஸ் பங்கில் ஐந்து சதவீத அளவு இறக்கங்களை தர வாய்ப்பு உள்ளது.

ஆனால் ஒன்றும் இல்லாத ஜியோ ஓரளவிற்கு வருமானம் கொடுத்து, பெட்ரோலிய பிரிவு நன்றாக செயல்பட்டு வருவது ரிலையன்ஸ் பங்கிற்கு நீண்ட கால நோக்கில் அதிக பலனைத் தரும் என்று பல பங்கு நிறுவனங்கள் கணித்துள்ளன.

ஆனாலும் லாபம் வரும் என்பதற்காக நேர்மை இல்லாத நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

தொடர்பான பதிவு:
ரிலையன்ஸ் பங்கை மகிழ்வித்த Jio 303 அறிவிப்பு, நீடிக்குமா? 


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: