வெள்ளி, 8 ஜூன், 2018

மிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன?

தற்போது சந்தையில் நிப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளை அடிப்படையாக வைத்து ஒருவரது பங்கு போர்ட்போலியோ திறனை மதிப்பிட முடியவில்லை.


அதற்கு முக்கிய காரணம் வீழ்ச்சியில்  மிட் கேப், ஸ்மால் கேப் நிறுவனங்களுக்கும் நிப்டியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கும் இடையே உள்ள அதிக அளவு வித்தியாசமே.



கடந்த ஜனவரியில் இருந்து பார்த்தால்,

நிப்டி 5 சதவீதம் வீழ்ந்துள்ளது.

அதே நேரத்தில் மிட் கேப் குறியீடு 15% அளவும், ஸ்மால் கேப் குறியீடு 25% அளவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த மிகப்பெரிய வித்தியாசமே பலருக்கும் பங்குச்சந்தை மீது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று சொல்லலாம்.

பொதுவாக போர்ட்போலியோவில் 30~40% அளவே நடுத்தர, சிறு நிறுவனங்களை வைத்து இருப்போம். அந்த அளவிற்கு வைத்து இருந்தவர்கள் ஓரளவிற்கு தாக்கு பிடித்து இருப்பார்கள்.

ஏன் இந்த சிறிய பங்குகள் இவ்வளவு பதம் பார்க்கப்படுகிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

அதற்கு முதல் காரணமாக பார்க்கப்படுவது ம்யூச்சல் பண்ட்களும் தான்.

முன்பு  ம்யூச்சல் பண்ட்களில் இவ்வளவு தான் மிட், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி முறைகள் இருந்ததில்லை.

அதனால் பெரிய அளவிலான பண்ட்களில் கொஞ்சம் தமக்கே ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அண்மையில் செபி பெயர் மற்றும் பிரிவுகளுக்கே ஏற்றவாறு தான் முதலீடு என்று பல விதி முறைகளை கொண்டு வந்துள்ளது.

இது  ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களுக்கு நல்லது. வெளிப்படைத் தன்மை அதிகமாக இருக்கும்.

அதே ம்யூச்சல் பண்ட்களை நடத்தும் நிறுவனங்களுக்கு இந்த புதிய விதி முறைகளுக்கு ஏற்றவாறு பங்குகளை மாற்ற வேண்டியுள்ளது.

அதில் சிறு நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் விற்க முனைந்தால் வாங்குவதற்கு ஆள் கிடைப்பதில்லை.

ஏனென்றால் வாங்க முற்படும் மற்ற ம்யூச்சல் பண்ட்களிலிலும் இதே பிரச்சினை தான்.

அதனால் அவசர கோலத்தில் கிடைத்தது போதும் என்று விற்க முனைகிறார்கள்.

அடுத்து, இப்படி அவசர கோலத்தில் விற்க பங்கு விலைகள் ஒரே நாளில் பத்து, இருபது சதவீதம் என்று வீழ்ச்சி அடைய செபி ASM ஒரு பிரிவை உருவாக்கி அதில் பல பங்குகளை அடக்கி உள்ளது.

இந்த பங்குகள் அதிக பட்சம் 5% தான் மேலேயோ, கீழேயோ போக முடியும் என்று பல விதி முறைகள் உள்ளன.

இதனால் ஒரு பதற்றத்தில் சில்லறை முதலீட்டாளர்களும் விற்க வீழ்ச்சி இன்னும் கீழே போனது.

அடுத்து,

எமது முந்தைய கட்டுரையில் கூறி இருந்தோம். பல மிட் கேப் பங்கு நிறுவனங்களின் ஆடிட்டர்கள் அண்மையில் அதிக அளவில் விலக இந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கையும் குறைந்து விட்டது.

பார்க்க:  திடீர் ஆடிட்டர் விலகல்களும், சரியும் பங்குகளும்

இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொத்தமாக இந்த பங்குகளை விற்க முனைந்துள்ளார்கள்.

இறுதியாக,

நிபிட்டி நிறுவனங்களின் P/E மதிப்பு 20 அருகில் இருந்தால், MIDCAP நிறுவனங்களின் P/E மதிப்பு 35 என்றும் , SMALLCAP நிறுவனங்களின்  P/E மதிப்பு 70க்கு அருகிலும் சென்று விட்டது.

இந்த அதிகபட்ச மதிப்பீடல் நிறுவனம் இன்னும் அதிக அளவு வேகத்தில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்யப்பட்டது.

ஆனால் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலதன பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாகி உள்ளது. இதனால் லாப மார்ஜின் குறையவும் வாய்ப்பு உள்ளது.

ஆக, எதிர்கால வளர்ச்சி மதிப்பீடல் என்பது பொய்க்கவும் வாய்ப்புள்ளது.

அதனால் இந்த பங்குகள் இன்னும் 15% அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என்றே கருதப்படுகிறது.

மொத்தத்தில் மிட், ஸ்மால் கேப் பங்குகளை போர்ட்போலியோவில் குறைவாக வைத்து இருக்க வேண்டிய தருணமிது.

அதே நேரத்தில் இந்த வீழ்ச்சியில் சில நல்ல மிட் கேப் பங்குகளும் அடி வீழ்ந்து இருக்கின்றன.

அவற்றை SIP முறையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எதை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக