செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கலைஞர் - நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்

ஆறு சகாப்தங்களுக்கு மேல் ஓய்வின்றி இயங்கி கொண்டிருந்த கலைஞர் அவர்கள் இன்று காலமாகினார்.


அவரது இழப்பில் வாடும் அனைவருக்கும் எமது அஞ்சலியையும் மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!



கடந்த இருபது வருடங்களில் மேற்படிப்பு முடித்தவர்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் முறையில் கலைஞர் ஆட்சியில் பயன் பெற்று இருப்பார்கள்.

எமது சொந்த நினைவில் ஆரம்பிக்கிறோம்..

98ல் பத்தாம் வகுப்பு வரை கிராமப்புற அரசு உயர்நிலை பள்ளியில் முடித்து மீண்டும் இரு வருடம் இன்னொரு அரசு மேல்நிலை பள்ளியில் +2விற்காக சேர்கிறோம்.

கிராமப்புற சூழ்நிலையில் வந்த எமக்கு எந்த அளவு மதிப்பெண்கள் எடுப்போம் என்று ஓரளவு தெரிகிறது. ஆனால் அதற்கு எங்கு போய் சேர வேண்டும் என்று தான் தெரியவில்லை.

இருபது வருடங்களுக்கு முன்னால் பொறியியல் படிப்பு இன்று இருப்பது போல் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.

ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வாங்க வேண்டும். அங்கு அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணம் தான் கட்டணம்.

அதனால் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி, பொறியியல் என்று எல்லாவற்றிற்கும் விண்ணப்பித்து இருந்தோம். எது கிடைக்கிறதோ அதில் சேர்ந்து விடலாம் என்பது தான் எண்ணம்.

அந்த நேரத்தில் தான் 96ல் கலைஞர் வந்து இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் பொறியியல் படிப்பிற்கு இந்தியாவிலே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறோம். கவுன்சிலிங் என்ற ஒற்றை சாளர முறையைக் கொண்டு வந்தார்.

அதற்கும் கல்லூரிகள் வழக்கு போட்டு எமது வருடத்தில் இழுபறி செய்து விட்டன. அதனையும் கலைஞர் அரசு சாமார்த்தியமாக சமாளித்து கவுன்சிலிங்கை கொண்டு வந்து விட்டது.

அந்த கவுன்சிலிங்கால் அப்பொழுதுள்ள Free Seat என்ற முறையில் இடம் கிடைக்க வருடத்திற்கு 12,800 மட்டும் செலவு செய்து பொறியியல் படிப்பை முடித்து விட்டோம்.

அதே கவுன்சிலிங் மட்டும் இல்லையென்றால் எமது இன்றைய வாழ்வும், மேற்படிப்புகளும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கலைஞர் அரசிலே அந்த 96 ஆட்சியைத் தான் மிகவும் நன்றாக இருந்தது என்றும் சொல்லலாம்.

திருக்குவளை என்றொரு கிராமத்திலிருந்து வந்து பள்ளி படிப்பை முழுமையாக முடிக்காத ஒருவர், இவ்வளவு கால நிர்வாகத் திறமையை கொண்டு இருந்தது ஆச்சர்யம் தான்.

அதன் பிறகு இலவச திட்டங்கள், ஈழம்,மத்திய அரசு போன்ற விடயங்களில் அவர் சமரசம் செய்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும் தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி நிலை இந்திய சராசரியை விட அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு கலைஞரும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

திருநங்கைகள், கட்டிட வேலை பார்ப்போர், ரிக்ஸா ஓட்டுபவர்கள் போன்ற நலிந்த பிரிவினர் முன்னேற்றத்தில் அவர் பங்கும் முக்கியமானதே.

காலை நான்கரைக்கு எழுந்தால் அன்றையது இரண்டு நாள் போல் இருக்குமாம். கலைஞர் அனுபவத்தில் சொன்னது. அதனையாவது பின்பற்ற வேண்டும் என்று மனது சொல்கிறது.

ஜெயலலிதா அம்மையார் மறைவில் ஒரு வெற்றிடம். அடுத்த இரு ஆண்டுகளில் கலைஞர் அவர்களது மிகப்பெரிய வெற்றிடம்.

இந்த இரண்டையும் தாங்கும் அளவு வல்லமையை இன்னும் தமிழகம் பெறவில்லை என்றே சொல்ல முடியும்.

நாம் அடிக்கடி பரிந்துரைத்து வைத்து இருக்கும் ஒரு பங்கு Karur Vysya Bank. ஆனால் அந்த பங்கை ஒவ்வொரு காலாண்டிலும் ஆராயும் போது வந்து போவது..

தமிழ்நாட்டில் எப்பொழுது நிலைமை சரியாகும் என்பது தான். அந்த அளவிற்கு NPA தாக்கத்திற்கு கூட நிலையில்லாத தமிழக நிலைமையும் ஒரு காரணம்.

ஒரு பங்கிற்கே இந்த நிலைமை என்றால் மாநிலத்திற்கு யோசித்து பார்க்க வேண்டும்.

ஒன்றல்ல. இரு நல்ல தீர்க்கமான தலைமைகள் தேவைப்படுகிறது.

அது வரை பாண்டிச்சேரி யூனியனுக்கு கொடுத்திருப்பது போல் பல்லில்லாத அரசாகத் தான் செயல்பட வேண்டியிருக்கும்.

நல்ல மாற்றங்கள் கலைஞர், ஜெயலலிதா ஆசியுடன் விரைவில் வந்து சேரட்டும்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக