புதன், 25 பிப்ரவரி, 2015

சாம்சங்கை கதறடிக்கும் இந்திய மொபைல் நிறுவனங்கள்

சில ஆண்டுகள் முன்பு சிதம்பரம் ஒரு பட்ஜெட்டில் உள்நாட்டு எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களுக்கு அதிக வரி சலுகைகளை கொடுத்தது நியாபகம் இருக்கிறது.


அதனால் தான் என்னவோ, மொபைல், டேபிலேட் என்று இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய உற்பத்தியாளர்கள் தங்களது இடத்தை நிலை நிறுத்தி வருவது மகிழ்வாக உள்ளது.



இத்துடன் திறந்த இலவச மென்பொருள்கள், குறைந்த விலையில் சீனா, தைவானில் கிடைக்கும் ஹார்ட்வேர் போன்றவையும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக உள்ளன.

கடந்த காலாண்டில் மைக்ரோமேக்ஸ் சாம்சங்கை இடத்தைப் பிடித்து இந்தியாவின் முதன்மை மொபைல் உற்பத்தியாளராக உயர்ந்தது.


இந்த நிலையில் சாம்சங் டேப்லெட் சந்தையிலும் தமது இடத்தைப் பறிகொடுத்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்தது iBall என்ற துவக்க நிலையிலுள்ள நிறுவனம் என்பது குறிப்பிட்டத்தக்கது.

iBall நிறுவனம் 2001ல் ஆரம்பிக்கப்பட்டு 2010ல் தான் டேப்லெட் துறையில் நுழைந்துள்ளது என்பது தொழில் முனைவர்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியாக இருக்கும்.

சிறிய மௌஸை உற்பத்தி செய்ய ஆரம்பித்தவர்கள் இன்று டேப்லெட் சந்தையும் பிடிக்க முடிகிறது என்றால் இன்னும் இந்திய சந்தையில் ஓரளவு ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது என்றும் யூகிக்க முடிகிறது.

விளம்பரங்கள்,மல்டி லெவல் மார்கெட்டிங் என்று பெரிதளவு செலவிடும் பெரிய நிறுவனங்களால் விலையை ஓரளவிற்கு கீழ் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதுவும் சிறு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் சாம்சங் 40,000 கோடி அளவு வர்த்தகத்தை இந்தியாவில் புரிகிறது. இவ்வளவு பெரிய வருமானம் இந்திய நிறுவனங்களுக்கு செல்வது நமது அந்நிய செலாவணி நிலையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல உதவும்.

சாம்சங்கில் பணி புரிந்தாலும் ஒரு இந்தியனாக நமது நிறுவனங்களின் வளர்ச்சி பெரிதும் மகிழ்வை கொடுக்கிறது. வாழ்த்துக்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: