திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்

"மொபைல் மார்கெட்டை இழக்கும் சாம்சங்?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்பு எழுதி இருந்தோம். கட்டுரையை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு வித அனுமானத்தில் தான் சொல்லி இருந்தோம்.


ஆனால் கடந்த வாரம் வெளியான மொபைல் போன் விற்பனை தொடர்பான தரவுகளில் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த சாம்சங் சரிவு தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருந்தாலும், (வேலை பார்ப்பதால் போனஸ் கிடைக்காதே!) ஒரு இந்திய மொபைல் நிறுவனம் வரலாற்றில் முதலிடத்தில் வந்தது மகிழ்ச்சியே!



நாம் கடந்த கட்டுரையில் கூறியவாறு ஒரே மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்ட மொபைல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததும் சாம்சங் நிறுவன மாடல்கள் மீது மக்களுக்கு ஒரு சலிப்பை தந்திருக்கலாம்.

அதே நேரத்தில் அதே வித சிறப்பம்சங்களைக் கொண்ட மொபைல்களை மைக்ரோமேக்ஸ் குறைந்த விலையில் தந்ததும் அவர்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் விற்பது தான் இதுவரை நல்ல வழியாக இருந்துள்ளது. இங்கு மேற்கு நாடுகளைப் போல் அதிக தரத்துடன், அதிக விலையில் விற்றால் எடுபடாது. அதனால் தான் நோக்கியா பல ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது.

இதே போன்ற வழிமுறையை தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வேறு விதமாக திறமையாக கண்டு வெற்றி கண்டுள்ளது எனலாம். அதனை எப்படி அடைந்தது என்பது கொஞ்சம் சாணக்கியமான விசயமாகவே கருதி கொள்ளலாம்.

மொபைல் போன்களிலும் கணிப்பொறியைப் போன்று மென்பொருள், வன்பொருள் சிப்கள் என்ற இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மொபைல் போன்களின் ஆரம்ப காலத்தில் பார்த்தால், ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமான மென்பொருளை பயன்படுத்தி வந்தன. இவை ஒவ்வொன்றும் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்து வந்ததால் மென்பொருள் உருவாக்குவதற்கான செலவும் அதிகமாகவே இருந்து வந்தது.

ஆனால் கூகிள் எப்பொழுது ஆண்டிராய்ட் மென்பொருளை இலவசமாக தர முயன்றதோ, அப்பொழுது மொபைல் துறையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டு விட்டது. அதாவது தரமான மென்பொருள் இலவசமாகவே கிடைத்தது.

அந்த சமயத்தில் தான் தனது மென்பொருளைத் தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருந்த நோக்கியா நிறுவனம் தனது மொபைல் பிரிவையே விற்க நேரிட்டது. இவ்வாறு நோக்கியா இழந்த பகுதியை சாம்சங் ஆண்டிராய்ட் மென்பொருளைப் பயன்படுத்தி சந்தையைப் பிடித்தது.

இந்நிலைலையில் ஆண்டிராய்ட் ஒரு வித்தியாசமான சூழ்நிலையையும் உருவாக்கியது. அதாவது ஹார்ட்வேர் இருந்தால் யாரும் மொபைல் செய்து விற்க முடியும் என்ற சூழ்நிலை உருவானது. இது சிறு நிறுவனங்களுக்கு சாதகமான விடயமாக மாறிப் போனது.

இந்த சூழ்நிலையை சில சீனா, இந்தியாவை சார்ந்த நிறுவனங்கள் சாமார்த்தியமாக பயன்படுத்திக் கொண்டன.

தரமான மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இது போக ஒரே தேவை ஹார்ட்வேர் சிப்கள். இந்த நிலையில் சிறு நிறுவனங்களுக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு தான் MediaTek என்ற நிறுவனம்.

சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட சொந்தமாக சிப்களை உற்பத்தி செய்வதில்லை. இந்த ஹார்ட்வேர் சிப்களை Qualcomm என்ற நிறுவனத்திடமே வாங்கி வந்தன. அதிக அனுபவமும், அதிக தரமும் Qualcomm நிறுவனத்திடம் இருந்ததால் அதன் சிப்கள் விலை கொஞ்சம் ஜாஸ்தி. இந்த நிலையை ஆனால் தைவான் நாட்டை சார்ந்த MediaTek நிறுவனம் தகர்த்தது.

இந்த சிப்களை மிகக் குறைந்த விலையில் தயாரித்து விற்க முன் வந்தது. சில சிப்களை பாதி விலைக்கு கூட அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது. இது குறைந்த விலை சந்தையை நம்பி இருக்கும் இந்திய, சீனா மொபைல் நிறுவனங்களுக்கு ஏதுவாக போனது.

இதனால், மென்பொருளுக்கு செலவில்லை. சிப்களும் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இது போக செலவு மார்கெட்டிங்கிற்கு மட்டும் தான். இந்த சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இந்தியாவில் சாம்சங்கை வீழ்த்தி உள்ளது.

கடந்த வருடம் நடந்த ஒவ்வொரு கிரிக்கெட் ஆட்டத்திலும் மைக்ரோமேக்ஸ் விளம்பரம் கட்டாயமாக இடம் பெற்று இருந்தது. இது அவர்கள் கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றி! வாழ்த்துக்கள்!

ஆக. நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியால் நமக்கு மலிவான விலையில் போன்கள் கிடைப்பதும் நல்லது தான்.



English Summary:
Micromax overtakes Samsung's position in India in Mobile handset market. Due to low cost chipsets and open source android platforms, Micromax is able to produce the low cost mobiles


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்
    http://omtamil.tv/patriyam/

    பதிலளிநீக்கு
  2. They are actually plastic toys rather than smart phones. wont support android version upgrades and custom ROMs. It clearly shows the quality of buyers.

    பதிலளிநீக்கு