திங்கள், 3 நவம்பர், 2014

CROSS HOLDING: முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நரித்தந்திரம்

நாம் முன்னர் நேர்மையில்லாத CAIRN பங்கை வாங்கலாமா? என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம். CAIRN நிறுவனம் தனது தாய் நிறுவனத்திற்கு மற்ற முதலீட்டாளர்கள் விருப்பம் இல்லாமலே ஒரு மிகப் பெரிய தொகையை வெறும் 3% வருடாந்திர வட்டிக்கு கொடுத்தது. அதனால் அந்த பங்கை விட்டு விலகி விடலாம் என்று கூறி இருந்தோம்.


இது தான் ஒரு சிறு முதலீட்டாளருக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்றும்  சொல்லலாம்.

அதிகப்படியான சதவீத பங்குகளை வைத்து இருக்கும் நிறுவன நிர்வாகம் குறைந்த பங்குகளைக் கொண்ட முதலீட்டாளர்கள் மீது தங்களது சொந்த லாபம் கொண்ட முடிவுகளைத் திணிப்பது என்பது தான் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம் என்றும் சொல்லலாம்.



நமக்கும் முடிவுகளை எடுப்பதில் நிர்வாகத்தில் ஓட்டுரிமை உள்ளது. ஆனால் அந்த ஓட்டால் எந்த பயனும் இல்லை என்று சொல்லும் போது அந்த ஓட்டும் மதிப்பு இல்லாததாக மாறி விடுகிறது.

இதையும் விட ஒரு உச்சக்கட்ட நரித்தந்திரம் உள்ளதை பகிர்கிறோம்.

இதனை நாகரீக மொழியில் "CROSS HOLDING" என்று சொல்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாடுகளை தன்னிடத்து வைத்துக் கொள்வது. இதனை மறைமுக பங்குகள் என்று சொல்கிறார்கள். அதாவது, ஒரு இடத்தில பங்குகளை வைத்துக் கொண்டு இரண்டு நிறுவனங்களையும் இந்த முறையில் எளிதில் கண்ட்ரோல் செய்ய முடியும்.

உதாரணத்துடன் பார்த்தால்,

நமக்கு தெரிந்து சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டும் தான் உற்பத்தி செய்கிறது என்று நினைத்து இருப்போம். ஆனால் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தவிர்த்து அவர்கள் குழுமத்திடம் 24 நிறுவனங்கள் உள்ளன. கப்பல் கட்டுதல், கட்டிடம் கட்டுதல், ஆயுதம் செய்தல், சூப்பர் மார்க்கெட், தீம் பார்க் என்று அணைத்து தொழில்களிலும் ஈடுபட்டு உள்ளார்கள். இல்லாத இடத்தை எண்ணி விடலாம் போல..

இவ்வளவு நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவது லீ ஹுன் ஹீ என்ற தனி மனிதர் தான். ஆனால் அவரிடம் இருப்பது மொத்த நிறுவனங்களின் பங்குகளில் வெறும் 2% தான்.

வெறும் 2% பங்குகளை வைத்து இருக்கும் ஒருவர் மீதி 98% பங்குகளையும் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதை பார்ப்போம்.



லீ ஹுன் ஹீ சாம்சங்கின் EVERLAND நிறுவனத்தில் 46% பங்குகளை வைத்துள்ளார். EVERLAND நிறுவனம் SAMSUNG LIFE நிறுவனத்தின் 19% பங்குகளை வைத்துள்ளது. SAMSUNG LIFE நிறுவனம் SAMSUNG ELECTRONICS நிறுவனத்தின் 7.5% பங்குகளை வைத்துள்ளது.  Samsung Electronics நிறுவனம் 17.6% Samsung Heavy நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளது.

இப்படி குறுக்கு வளையங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. கடைசியில் பார்த்தால் லீ வைத்து இருப்பது சாம்சங் குழுமத்தின் வெறும் 2% பங்குகளே. ஆனால் அவரால் கொரியா நாட்டையே கட்டுப்படுத்த முடியும். ஆமாம்.  சாம்சங் நிறுவனம் கொரியா நாட்டின் ஜிடிபியில் 20% பங்கை அளிக்கிறது. அதனால் அவரால் ஒரு நாட்டையே கட்டுப்படுத்த முடியும்.

இங்கு தான் செல்வம் பரவலாக்கப்படுவது முதலாளிகளின் சில தந்திர உபாயங்களால் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.



இத்தகைய CROSS HOLDING தன்மை தான் இந்தியாவிலும் ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ளது. ஆனால் அவர்களால் நாடு முழுவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நமது அதிர்ஷ்டமே. இந்தியாவில் கொரியாவைக் காட்டிலும் ஏகப்பட்ட சிறிய நிறுவனங்கள் பரவலாகவே உள்ளன என்பது ஓரளவு ஆரோக்கியமான தன்மையே. அதற்கு மிகப்பெரிய நாடு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதலீட்டாளர்கள் இந்த குழும பங்குகளில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது .எப்ப எந்த முடிவு எடுப்பார்கள் என்று கணிக்க முடியாது. திடீர் என்று பங்கு விலை குறைந்து விடும்.

கொரியா அதிபர் இந்த CROSS HOLDING வழிக்கு எதிராக சட்டம் கொண்டு வர முற்படுகிறார். ஆனால் கொண்டு வந்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 2% படுத்து விடுமாம். இதனால் முதலையின் வாயில் அகப்பட்டது போல் தான் உள்ளது அவர் நிலைமை.

தொடர்புடைய பதிவுகள்:


English Summary:
The Cross Holding in share market leads to monopoly situation in business. The small percentage investor also dominates many companies through cross holding method.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக