வியாழன், 11 செப்டம்பர், 2014

இன்னும் சரிவிற்காக காத்திருக்கும் பங்குச்சந்தை

இந்த வாரத்தில் பங்குசந்தையில் நடந்த நிகழ்வுகளை இன்று பார்ப்போம்.

அதற்கு முன், சுரேஷ் நடராஜன் என்ற நண்பர் நமது போர்ட்போலியோவை பயன்படுத்திக் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்காக பிரதம மந்திரி நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு 'முதலீடு' பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.


அவரிடமிருந்து வந்த மின் அஞ்சல் இது தான்.
"Booked profit in Liberty at 329/- .   By having good profit on this account. Donated 5000 to PMfund for disaster . "

பொதுவாக வங்கியில் வேலை பார்ப்பவர்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் என்று பார்த்தால் அவர்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். அதே நேரத்தில் கடைந்தெடுத்த கஞ்சர்களாக இருக்கவும் வாய்ப்பு அதிகம் உண்டு.



பொருளாதாரத்தில் OPPORTUNISTIC என்ற பதம் உண்டு. உதாரணத்திற்கு ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடும் போது சாப்பாட்டினை ருசிக்காமல் அதற்கான கட்டணத்தையும், அதே நேரத்தில் வெளியே இருந்தால் எவ்வளவு சம்பாதித்து இருக்கலாம் என்று நினைக்க தோன்றுவதை தான் OPPORTUNISTIC என்று குறிப்பிடுவார்கள்.

இந்த அளவு ஒவ்வொரு செயலின் போதும், ஒரு சிறிய பணத்தொகைக்கும் அளவுக்கு அதிகமாகவே கணக்கு போடுவது பணப்புழக்கம் உள்ள துறைகளில் இருப்பது வழக்கமான விடயம். இது கார்பரேட் நிறுவனங்களில் இருக்க வேண்டியது தான். ஆனால் தனி மனித வாழ்வில் தவிர்க்க வேண்டியது.

இது பங்குச்சந்தையிலும் சாலப் பொருந்தும் என்பதை அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறோம். 2006/2007 என்று நினைக்கிறேன். இதே போல் சந்தை உயர்வில் இருந்த சமயம். எமது முதலீடுகளும் ஓரளவு லாபமாக சென்று கொண்டு இருந்தது.

ஒரு நெருங்கிய நண்பர் அந்த சமயத்தில் கடன் கேட்டு இருந்தார். கடனைக் கொடுத்த பிறகு இவருக்கு கொடுத்த காசை ஷேர் மார்க்கெட்டில் போட்டிருந்தால் நல்ல ரிடர்ன் கிடைத்து இருக்குமே என்று நினைக்க தோன்றியது.

அப்பொழுது தான் மனம் பணம், பணம் என்று அலைய தொடங்கியதையும் இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகி செல்ல ஆரம்பித்ததையும் உணர முடிந்தது. அதன் பிறகு தான் கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறிய பகுதியை உதவியாக மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அந்த வகையில் பணத்தைப் பற்றியே எப்பொழுதும் நினைத்து இருக்க வேண்டிய துறையில் இருந்து கொண்டே பண உதவி செய்திருக்கும் திரு.சுரேஷ் அவர்கள் பாராட்டுதலுக்கு உரியவராகிறார்.. எமது வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!

முதலீடு தளத்தின் வருடாந்திர நிறைவின் போது போர்ட்போலியோவில் கிடைத்த வருமானத்தின் லாபத்தின் 5% பகுதியை நன்கொடையாக கொடுப்பதாக சொல்லி இருந்தோம். உதவி சரியானவருக்கு நேரடியாக சென்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் டிசம்பரில் இந்தியா சென்ற பிறகு கொடுத்து விடுகிறோம். கொடுத்த பிறகு தளத்திலும் தெரிவிக்கிறோம்.

இனி சந்தையைப் பற்றி பார்ப்போம்.

கடந்த வாரம் சந்தையில் ஒரு சிறிய கரெக்சன் எதிர்பார்ப்பதாக கூறி இருந்தோம். கடந்த வாரத்தில் இருந்து 400 புள்ளிகள் வரை குறைந்து உள்ளது. இன்னும் ஒரு 500 புள்ளிகள் வரையாவது சரிவை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறோம்.

நாம் சொல்லியது போல் இந்த வாரமே செப்டெம்பர் போர்ட்போலியோவை பகிர்கிறோம். அதனை பின்பற்றுவர்கள் தற்போது 40% என்றும், கொஞ்சம் சரிவின் போது 40% என்றும், மீதி 20% பணத்தை சந்தையின் போக்கிலே சென்று முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் லாப, நஷ்டங்களை எளிதில் சமநிலைப்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் சந்தையில் பெரிய நிறுவனங்களின் பங்குகளைக் குறிக்கும் சென்செக்ஸ் தான் சரிந்து இருக்கிறதே தவிர, MID CAP, SMALL CAP நிறுவனங்களைக் குறிக்கும் குறியீடுகள் தொடர்ந்து ஐந்து நாட்களாக அதிகரித்து வந்துள்ளதையும் கவனிக்க. அதனால் தான் சந்தையில் இன்னும் சிறிய சரிவு பாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டோம்.

அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் தரவுகள் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை மற்ற பொருளாதாரங்களை விட பலமாக இருப்பதையே குறிப்பிடுகின்றன. அதனால் இந்த சரிவுகளை கரெக்சன் என்று கருதிக் கொள்வது தான் மிகச் சரியாக இருக்கும்.

இந்த வாரத்தில் ONGC, NHPC, COAL India போன்ற நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்த பங்குகள் 4% வரை குறைந்தன. இதில் ONGC மட்டும் வாங்கக் கூடிய பங்காக உள்ளது..

அடுத்து முக்கிய நிகழ்வாக SUN Pharma நிறுவனத்தின் அமெரிக்க பிரிவில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளார்கள். இதனால் பங்கு 5% வரை வீழ்ச்சியில் காணப்பட்டது. இது RANBAXYயிலும் எதிரொலித்தது.

வங்கிகளின் வாராக்கடன்கள் குறைந்து வருவதாக செய்திகள் வருவது ஒட்டுமொத்த பொருளாதரத்திற்கும் சாதகமான விஷயம்.

SNOWMANயை அடுத்து SHARDHA IPOவும் 60 மடங்கிற்கு அதிகமாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதனால் இதிலும் பங்குகள் கிடைப்பது அரிதிலும் அரிதான விடயம் தான். நேரத்தையும் வீணாக்கி பணமும் ஒரு இடத்திற்குள் அடைபட்டுக் கிடப்பதால் இனி IPOவை விட்டு விடலாம் என்று தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.

கடந்த மாத ஆட்டோ விற்பனையில் மாருதியும் டிவிஎஸ் நிறுவனமும் ஒஹோவென்று இருக்க டாடாவும், மகிந்தராவும் சிறிது தொய்வை சந்தித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்கள் போர்ட்போலியோ வேலைகள் இருப்பதால் மீண்டும் திங்களில் பார்க்கலாம். Have a Nice Week end!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. Rama, retail portion of Snowman got subscribed 41.26 times more, but Sharda Cropchem retail portion got subscribed 5.85 times more. So you have some good chance for allotment when compared to Snowman.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks jaikumar for your comments! Even I also have the same hope on Sharda. Congrats for your big profit in Snowman!

      நீக்கு