புதன், 1 அக்டோபர், 2014

பங்குச்சந்தையில் மோடியின் கவர்ச்சி குறைகிறது...

தேர்தல் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள், மோடி மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இந்திய பங்குச்சந்தை ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது.


என்ன தான் எதிர்பார்ப்பு என்று கருதினாலும் ரியாலிட்டி என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. அதிலும் பொருளாதார நிகழ்வுகளில் கண்டிப்பாக தவிர்க்க முடியாது.

கடந்த ஆறு மாதங்களில் மோடி இந்திய மக்கள் மீது ஒரு வித நேர்மறையான நம்பிக்கையைத் தந்துள்ளார். அதனை ஒரு பெரிய வெற்றியாகவே கருதலாம்.



நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் ஆயிரங்களில், லட்சங்களில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மோடி என்ற காரணியும் காரணமாக அமைந்துள்ளது.

நாம் ஒரு ஐந்து லட்சம் மோடியை நம்பி முதலீடு செய்கிறோம். முதலீடு செய்யும் நிறுவனம் அந்த தொகையைப் பயன்படுத்தி மேலும் தொழிற்சாலைகளை திறக்கிறது. மேலும் திறப்பதால் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் பெறுபவர்கள் கொஞ்சம் தாரளமாக செலவு செய்யும் போது அதனை சார்ந்த நுகர்வோர் நிறுவனங்கள் பயன் பெறும்

இப்படி, ஒவ்வொருவரும் தூங்கி கொண்டிருக்கும் பணத்தை வெளிக் கொண்டு வரும் போது பணப் புழக்கம் அதிகரித்து விடுகிறது. ஆக, ஒரு சிறு நேர்மறையான நம்பிக்கை தேசத்தின் பொருளாதாரத்தையே மாற்றி அமைத்து விடுகிறது.

அந்த வகையில் சென்செக்ஸ் புள்ளிகளை 20000 என்பதிலிருந்து 27000 என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். இது மோடியின் என்ற தனிப்பட்ட மனிதரின் வெற்றியே.

ஆனால் ஒரே ஓட்டம் ஓடி விட்ட நாம் கொஞ்சம் நின்று பின்னோக்கி சிந்தித்து பார்ப்பதும் அவசியமாகிறது.

தற்போது இந்திய சந்தையின் P/E மதிப்பு 15 என்று உள்ளது. இது மற்ற வளரும் நாடுகளில் 10 என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு விகிதமான Price-To-Book என்பது 2.7 என்று உள்ளது. மற்ற வளரும் சந்தைகளில் 1.5~2 என்ற அளவில் உள்ளது. இந்த ஒப்பீடுகளின் படி தற்போது இந்திய சந்தை கொஞ்சம் அதிக விலையிலே உள்ளது என்று கருதலாம்.

அதனால் தான் கடந்த மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் நமது சந்தையில் பணத்தைக் கொட்டவில்லை.

நாம் சந்தை கடுமையாக சரியும் என்ற யூகத்திற்கு வரவில்லை. ஆனால் தற்போதைய நிலவரத்தில் 25000 என்பதை கீழ்மட்ட எல்லையாகவும் 27500 என்பதை மேல்மட்ட எல்லையாகவும் கருதி வர்த்தகம் செய்வது நன்றாக இருக்கும்.

அடுத்து, மேல் நாம் சொன்ன P/E, P/B மதிப்புகள் என்பது நிலையானவை அல்ல. வளர்ச்சியின் அடிப்படியில் மாறுபடுபவை. அதனால் வரும் காலாண்டுகளில் வளர்ச்சி அதிகம் இருந்தால் இவை சரியான மதிப்புக்கு மாறி விடும். அதனால் இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையாக முதலீடு செய்வதும் அவசியமாகிறது.

அந்த எச்சரிக்கைகளைப் பற்றியும் பார்ப்போம்...

இது வரை பங்கு முதலீடுகளை யூகங்களை, செய்திகளை, அரசின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து முதலீடு செய்து வந்திருப்போம். இனி பங்கு மதிப்பீடுதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

எந்த கெட்ட சூழ்நிலையிலும் நன்றாக செயல்படும் நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால் மதிப்பிடுதல் அடிப்படையில் பங்குகள் எப்பொழுதும் கிடைக்கவே செய்கின்றன.

இது வரை நாம் அதிக ரிடர்னை பெற்று இருப்போம். உதாரனத்திற்கு நாம் இலவசமாக கொடுத்த போர்ட்போலியோ ஒரு வருடத்தில் 120% அளவு லாபத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் இனி வரும் மாதங்களிலும் இதே ரிடர்னைத் தரும் என்ற அதிக எதிர்பார்ப்பை வைத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

எமது கட்டண போர்ட்போலியோக்களில் இரண்டு வருடத்திற்கு குறைந்தபட்சம் 40% எதிர்பார்க்கலாம் என்று கூறி இருந்தோம்.

ஆனால் ஒரு நண்பர் மெயிலில் கேட்டு இருந்தார். பத்தாயிரம் முதலீடு செய்தால் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படி இல்லையே என்று கேட்டு இருந்தார். அதாவது வருடத்திற்கு 120% லாபம் எதிர்பார்க்கிறார்.

அவரைப் பொறுத்த வரை தவறில்லை. சிலர் அவரிடம் அதிகபட்ச எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதலாம். ஆனால் அடிப்படை இல்லாமல் யூகித்தால் தவறாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஒன்றை நாம் புரிந்து கொள்வோம். எந்தவொரு பொருளின் சரியான மதிப்பிற்கும் வளர்ச்சிக்கும் சரியான காரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மதிப்பும் வளர்ச்சியும் எதேச்சையாக நடப்பதில்லை. அது பல தொடர்ச்சியான நிகழ்வுகளின் தொகுப்பே. அதனை ஓரளவு கணிக்கவும் முடியும்.

ஒரு பங்கை நாம் வாங்குகிறோம் அது இந்த வருடங்களில் இவ்வளவு கூடும் என்பதன் அனுமானங்களை சில கணக்கீடுகள் அடிப்படையில் நோக்கினால் அனுமானங்கள் பலிக்க அதிக வாய்ப்புள்ளது.

கீழ் உள்ள கணக்கீட்டில் முதலீடு காலம் இரண்டு வருடங்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நாம் கீழ் உள்ளவாறு பிரிக்கலாம்.

நிறுவனத்தின்/துறையின் எதிர்பார்க்கபப்டும் வளர்ச்சி - வருடத்திற்கு 20% - இரண்டு வருடங்களுக்கு 40% - CAGR அடிப்படையில் பார்த்தால் - +44%

மதிப்பீடல் அடிப்படியில் பங்கின் மலிவான சந்தை விலை - +10%

விரிவாக்கங்கள் காரணமாக எதிர்பார்க்கபப்டும் அதிக பட்ச வளர்ச்சி - +10%

அரசின் கொள்கைகள் சாதகமாக அமைந்தால் - +10%

ஆக, நமக்கு அதிகபட்சமாக ஒரு சராசரி நல்ல மதிப்புடன் கூடிய பங்கில் இரண்டு வருடங்களுக்கு 74% ரிடர்ன் எதிர்பார்க்கலாம். அதற்கு மேல் கிடைத்தால் நமக்கு யோகம். குறைந்த பட்சமாக அதன் வளர்ச்சியிலே இரண்டு வருடங்களுக்கு 44% எதிர்பார்க்கலாம்.

மேலுள்ளது நாம் தனிப்பட்ட முறையில் எமது கணக்கீடுகளுக்காக பயன்படுத்திக் கொள்வது. அதில் சில மாற்றங்களுடன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் தான் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

நம்முடைய ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கும் காரணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பகிர்கிறோம்.

அதனால் தற்போதைய சூழ்நிலையில் வாசகர்கள் கொஞ்சம் தங்கள் முதலீடுகளைத் திறனாய்வு செய்து முதலீடைத் தொடரலாம்.

எமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். தொடர்பு முகவரி muthaleedu@gmail.com. விவரங்களுக்கு இங்கு பார்க்கலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

English Summary:
Indian share market is coming out of Modi magic attractions. Recommending for selecting stocks based on fundamentally strong and by valuation methods. The financial statements are key factor.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. மிகவும் அருமையான கட்டுரை; உலக அளவில் இந்திய பங்கு சந்தையின் அலசல்......பயனுள்ள கட்டுரை. தொடரட்டும் தங்களின் சேவை.

    பதிலளிநீக்கு