திங்கள், 29 டிசம்பர், 2014

தமிழகத்தில் தொழில் துவங்குவது அவ்வளவு கடினமா?

பன்சால்களால் முடிந்தது தமிழர்களால் முடியாதா?  என்ற தலைப்பில் ஒரு சுயதொழில் தொடர்பான கட்டுரை முன்பு எழுதி இருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் சில கருத்துக்களையும் விமர்சனங்களாக பெற முடிந்தது.

நண்பர் சதீஷ் அவர்கள் கீழ் உள்ளவாறு மெயில் அனுப்பி இருந்தார். 


சிறந்த மாநிலம் விருது - தமிழ்நாடு 
***
      வணக்கம். மீண்டும் தங்கள் தளத்தில் உள்ள “பன்சால்களால் முடிந்தது தமிழர்களால் முடியாதா” என்ற கட்டுரையை படித்தேன். நல்ல கட்டுரை மற்றும் மிக நல்ல கேள்வியும் கூட. எனது மனதில் இருக்கும் தடைக்கான காரணத்தை தங்களிடன் விவாதிக்கிறேன்.

     இங்கு மிகப்பெரிய தடை அரசியல் குறுக்கீடு மற்றும் கட்டப்பஞ்சாயத்து. நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு ஒருவன் தன் திறமையை உபயோகித்து மேலே வருகிறான் என்றால் அது அந்த ஊரில் உள்ள பெரிய புள்ளிகளுக்கு உறுத்தலாய் இருக்கும். காரணம் தன்னை விட ஒருவன் மேலே வர அவரது மனம் ஒப்புக்கொள்ளாது.

     உடனடியாக குறுக்கிட்டு ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ அவர்கள் அபகரிக்க திட்டமிடுகின்றனர். மேலும் சம்பந்தபட்டவர்கள் மறுத்தால் அல்லது எதிர்க்க துணிந்தால் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் மிரட்டுகின்றனர் அல்லது அந்த சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி களங்கம் கற்பிக்கின்றனர். இதனால் அந்த நபர் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்கிறார். அதிலும் அந்த நபர் அரசியல்வாதியை விட கீழ் சாதியை சார்ந்தவர் என்றால் முடிந்தது கதை.

     இதனால் நாம் பல நல்ல நிறுவனங்களை இழந்துவிட்டோம் என்பது நிச்சயமாக மறுப்பதற்கில்லாத உண்மை. உதாரணமாக ஈரோட்டில் ஈமு பார்ம் நிறுவனம் ஒன்று இருந்தது. நீங்களும் அறிந்திருப்பீர்கள். குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக வளர்ந்து வந்த நிறுவனம் அது. ஆனால் அந்த வளர்ச்சியே அதற்கு முடிவாக அமைந்துவிட்டது.

     இங்கு அந்த நிறுவனம் ஒரு அரசியல்வாதியின் தலையீட்டால் அதன் சொத்துக்களை அவர் அபகரித்து அந்த பழியை நிறுவன அதிபர் மீது போட்டார் என்பது செவிவழிச் செய்தி. இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால் இங்கு எல்லாமே அரசியல், சாதி மற்றும் கட்டப்பஞ்சாயத்து தான்.

     ஆகையால் தான் நம் தமிழர்கள் அனைவரும் இது போன்ற பெரிய பிரச்சனைகளை பார்த்து- கைக்கு கிடைக்கும் சிறிய தொகையை வைத்து தமது பிழைப்பை ஓட்டுகின்றனர்.

     ஆனால் மிகச்சில நிறுவன அதிபர்கள் மட்டுமே தமது தொழிலை தொடர்கின்றனர். காரணம் தமிழகத்தில் இது போன்ற அரசியல் கட்டப்பஞ்சாயத்து உருவெடுக்கும் முன்பே தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆகையால் தான் பெயர் சொல்லும் அளவிற்கு தமிழக நிறுவனங்கள் இங்கு உள்ளன.

      எனவே இங்கு அரசியல்வாதிகள் தான் மிகப்பெரிய தடையாக உள்ளனர் என்பது எனது கருத்து. உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால் விவாதிக்கவும்.

நன்றி!
சதீஷ்
***

நான் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் இல்லாததால் உள்ளூர் அரசியல் நிலவரங்கள் அவ்வளவாக தெரியவில்லை. அதனால் நமது தள நண்பர்களின் கருத்துக்களை இந்த விவாதத்தில் பெரிதும் வரவேற்கிறோம்.
 
எமது தனிப்பட்ட கருத்தாக, 

எந்தவொரு தொழில் துவங்குவதாக இருந்தாலும் தனிமனித ஆர்வம், குடும்ப ஒத்துழைப்பு, சமுதாய சூழ்நிலை என்ற மூன்றும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். இதில் ஒன்று மாறுபட்டு இருந்தால் கூட சிரமமாக இருக்கும்.

இதில் முதல் இரண்டும் நன்றாக அமைந்தால் தான் மூன்றாவதைப் பற்றி சிந்திக்க முடியும். 

ஆனால் தமிழர்களை பொறுத்த வரை வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தனிமனித எண்ணம் அவ்வளவாக இருப்பதில்லை என்பதை காண முடிகிறது. 

தற்போது கூட பத்து லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து போக்குவரத்து துறையில் வேலைக்கு போக தயாராக உள்ளதை அறிய முடிகிறது ஆனால் அதே பணத்தை முதலீடாக தொழிலில் போட்டு முதலாளியாக மாறுபவர்கள் மிகக் குறைவே.

58 வயது வரை ஏதாவது ஒரு வேலை கிடைத்து வாழ்க்கையை ஒட்டி விட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் உள்ளது. இதற்கு நமது குடும்ப சூழ்நிலைகளும் காரணமாக உள்ளது என்பது தான் முக்கியமானது.

அதிலும் பெண்கள். எனது அப்பா சொந்த தொழில் தொடங்க தடையாக தாய் காரணமாக இருந்தார். நான் தொழில் தொடங்க அனுமதி கேட்டால் மனைவி செட்டில் செய்த பிறகு தொழில் செய்யலாம் என்கிறார். செட்டில் என்பதன் விரிவாக்கமோ நீண்டு கொண்டே செல்கிறது.

அதாவது சந்நியாசம் போகிற வயதில் தான் பிசினஸ் மேனாக வேண்டுமாம். அப்பொழுது எவ்வளவு எனெர்ஜி இருக்கும் என்று தெரியவில்லை.

ஒரு குறைந்தபட்ச ரிஸ்க் எடுக்க கூட நாம் தயார் இல்லை என்ற சூழ்நிலையில் சமுதாயத்தின் மீது முழு பழியையும் போட முடியவில்லை.  


இன்னும் ஒப்பீடு அடிப்படையில் பார்த்தால் தமிழகம் வட மாநிலங்களை ஒப்பிடுகையில் சட்டம், ஒழுங்கு, கட்டமைப்பு என்று பல வழிகளில் முன்னணியில் உள்ளது என்பதையும் நாம் ஏற்க வேண்டி உள்ளது..

பிரபாகரன் என்கிற நண்பரின் Biocline நிறுவனத்தை பற்றி கட்டுரையில் எழுதி இருந்தோம். நாம் எழுதிய பொழுதை விட தற்போது ஆன்லைன், புதிய தயாரிப்புகள் என்ற அவரது வியாபர விரிவாக்கம் பிரமிக்க வைக்கிறது. 

பார்க்க: தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்

இருபத்து ஐந்து வயதில் அவரால் சாதிக்க முடிகிறது என்றால் நாமும் நேர்மறை வாய்ப்புகளை பற்றி அதிகம் சிந்திக்கலாம்.

ஆரோக்கியமான விவாதத்தை தொடங்கி வைத்த சதீஷ் அவர்களுக்கு நன்றி!

English Summary:
Question arising on business opportunities and safety in Tamilnadu. Source are saying and giving best rank in the country. Is it in reality? Questions are coming in people's risk taking behaviour also.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. தனிமனித ஆர்வம் குடும்ப ஒத்துழைப்பு மிக முக்கியமே.. தமிழ் நாட்டை பொறுத்தவரை பள்ளிகளுக்கு மதிப்பெண்களை பெற்றால் எப்படி போதுமே.. அப்படியே தான் சம்பளம் கிடைத்தால் போதும் என்ற நிலையே உண்மை... சில ஆர்வமுள்ளவர்கள் தொடங்கினாலும் பல முட்டுகட்டைகள் சதிஸ் அவர்கள் சொல்லவது போலவோஅல்லது ஊக்குவிப்பர்பவகளுக்கு பதிலாக குறைகளால் நிறைந்து போகின்றது உண்மையே....

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. சுய தொழில்செய்ய அடிப்படை பணம் தேவை. நான் படிப்பை முடித்த பின்பு வங்கியில் லோன் கேட்டு போனால் ஒரு வங்கியும் தரவில்லை, மேலும் ஊரில் உள்ள பெரும் புள்ளியிடம் சென்று surety கேட்க சொன்னார்கள். அவர்கள் கடைசி வரை surety போடவே இல்லை. அதனால் வெறுத்து போய்வேலையில் சேர்ந்துவிட்டேன். வங்கிகள் எல்லாம் லோன் அனைவருக்கும் கோடுப்பதில்லை. வேண்டியவற்களுக்கு மட்டும் தான் கோடுக்கிறது. அதாவது, அந்த வங்கியில் தெரிந்தவர் யாராவது இருக்க வேண்டும் அல்லது ஊரில் உள்ள பெரும் புள்ளியின் தயவு வேண்டும். அப்போது தான் லோன் கிடைக்கும். கிராமங்களில் இது தான் நிலமை. நகரங்களிலும் எனக்கு தெரிந்தவரை இதே தான்.

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்களுக்கு நன்றி ராஜா!

    பதிலளிநீக்கு