வியாழன், 1 ஜனவரி, 2015

PACL மோசடி - ஏமாறுபவர்கள் இருக்க ஏமாற்றங்களும் தொடர்கின்றன

சஹாரா, சாரதா என்று சிட் பண்ட் நிறுவனங்களின் மோசடிகள் தொடருகின்றன. பலமான அரசியல் பின்புலங்களின் தொடர்பால் அவர்களுடைய ஏமாற்று வேலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன.


இந்த சதுரங்க வேட்டையில் சிக்குவது பெரும்பாலும் நடுத்தட்டு மக்களே என்பது வேதனையான ஒன்று.

அந்த வரிசையில் புதிதாக ஒரு பண்ட் நிறுவனம் இணைகிறது. இதன் பெயர் PACL Ltd. இவர்களது வியாபர அணுகுமுறை புதுமையானது.



மக்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பார்கள். அதற்கு 12% வட்டி தருவதாக சொல்வார்கள். இவ்வாறு பெறப்படும் பணம் நிலங்களில் முதலீடு செய்யப்படும். அவர்களது கொள்கை படி,  நிதி பெறுபவர்கள் பெயரில் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளாக அவ்வாறு நிலமும் ஒதுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய பணமும் கொடுக்கப்படவில்லை.

அதன் பிறகு நிறுவனம் மீதான புகார்கள் செல்ல செபி இந்த நிறுவனம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் உள் சென்றால், இந்த நிறுவனம் டெபொசிட் வாங்க அனுமதி கூட பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

அது போக, வாங்கிய நிலங்களின் மொத்த அளவை பார்த்த போது பெங்களூர் நகரத்தின் அளவை விட பெரிதாக இருந்தது. விசாரித்தால், பெரும்பாலான வாங்கப்பட்ட நிலங்கள் கொஞ்சமும் மதிப்பு பெறாத இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள நிலங்கள் என்பதும் தெரிய வந்தது.

இந்த நிறுவனம் ராஜஸ்தானை சார்ந்ததாக இருந்தாலும், அதிக அளவில் ஆட்டையைப் போட்டது தமிழகத்தில் தான்  என்று தெரிய வந்துள்ளது. அதாவது மொத்த மோசடி 44,000 கோடி. அதில் தமிழகத்தில் மட்டும் 10,000 கோடி.

செபி மூன்று மாதங்களுக்கு அணைத்து பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. அந்த காலக்கெடு முடிந்தாலும் நிறுவனம் கோர்ட்டிற்கு சென்றுள்ளதால் தீர்ப்பிற்கு காக்க வேண்டி உள்ளது.


நண்பர்களே! நமது நாடு ஒரு வித்தியாசமான நாடு. இங்கே எந்த அளவு ஆன்மிகம் போற்றப்படுகிறதோ அதே அளவு ஏமாற்று வேலைகளும் அதிகமாக உள்ளது. இதில் அரசியல்வாதிகளும் உடனிருப்பதால் நியாயங்களை எளிதில் பெற முடியாது. அதனால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.

ஒன்றிரண்டு சதவீத கூடுதல் வட்டிகளுக்காக இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத இடங்களில் முதலீடு செய்யாதீர்கள்! இவைகள் பங்குச்சந்தைகளை விட மிகவும் ரிஸ்கானது என்பதை உணர வேண்டும்

எல்லா நிறுவனங்களும் டெபாசிட் வசூலிக்க முடியாது. அதற்கு Non-Bank Deposit Takers (NBDT) என்று ரிசர்வ் வங்கி பட்டியலை தயாரித்துள்ளது.

கீழே உள்ள இணைப்பில் பட்டியல் உள்ளது. நீங்கள் எந்த வங்கி அல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதனை சரிபார்த்து முதலீடு செய்யவும்.

http://www.rbi.org.in/commonman/English/scripts/nbfcs.aspx#NI

English Summary:
PACL Ltd. banned to collect deposits from public by SEBI. It also advised to return back all deposits. Due to court case, the process is delayed more.

பார்க்க:
சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக