செவ்வாய், 10 நவம்பர், 2015

வரி விலக்கு பேச்சும், சுத்தமாக வைக்க புது வரியும்..

வரும் நவம்பர் 15 முதல் இந்தியாவில் புதிய வரி ஒன்று வருகிறது. இதன்படி, 0.5% அதிகமாக சேவை வரி பிடித்தம் செய்யப்படும்.


இந்த வரி தூய்மை இந்தியா திட்டத்திற்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



உண்மையில் இந்த வரி விதிப்பிற்கும் அருண் ஜெட்லி சமீப காலமாக பேசி வந்த பேச்சுக்களுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

இது வரை இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் லாபத்தில் 33% அளவு வரியாக செலுத்தி வந்தன. இந்த வரியை இன்னும் இரண்டு வருடத்தில் 25% அளவு கீழே கொண்டு வருவதாக உறுதி அளித்து இருந்தார்.

ஏனென்றால், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வரி விதிப்பு 15%க்கும் குறைவாகவே உள்ளது. இதனால் இங்கு அதிகமாக வரி இருந்தால் நிறைய முதலீடுகள் வராது என்பதன் வெளிப்பாடாகவே அந்த பேச்சுக்கள் அமைந்து இருந்தது.

அதே போல் GST வரி விதிப்பின் முக்கிய நோக்கமே மறைமுக வரிகளை அறவே ஒழிப்பது. அது தான் பார்லிமென்ட் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த இரண்டும் பொருளாதார சீர்திருத்தத்தின் முக்கிய நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது.

ஆனால் புதிதாக கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா வரி என்பது இந்த நடவடிக்கைகளுக்கு முரணான வரியாகவே பார்க்கப்படுகிறது.

மறைமுக வரியை ஒழிப்பது என்பது அரசின் அஜெண்டாவில் இருக்கும் சமயத்தில் இன்னொரு மறைமுக வரி கொண்டு வருவதன் அவசியம் தேவையில்லாதது.

ஏற்கனவே நமது ஊரில் ஏகப்பட்ட வரிகள் உள்ளன. அந்த வரிகளின் நோக்கம் நாட்டின் ஒழுங்கான கட்டமைப்பை ஏற்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்வது தான்.

அந்த வரிகளை எல்லாம் விட்டு விட்டு ஒவ்வொரு புதிய திட்டத்திற்கும் வரிகளை விதித்து வந்தால் அது தவறான உதாரணமாகவே மாறும்.

இந்த புதிய வரி மூலம் 400 கோடி ரூபாய் அரசுக்கு புதிதாக வருமானம் வரும். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. ஆனால் மக்களுக்கு அதிக உளைச்சலைக் கொடுக்கும்.

தூய்மை இந்தியா திட்டம் நல்ல நோக்கம் தான். அதற்கு அதிக அளவில் மக்களிடம் விழிப்புணர்வைத் தான் ஏற்படுத்த வேண்டும். தவிர வரி விதிப்பது தீர்வாகாது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக