ஞாயிறு, 15 மார்ச், 2015

பங்குச்சந்தைக்கு வரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் செய்வதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டதால் பங்குச்சந்தையில் அவை சார்ந்த பங்குகள்நேர்மறையிலே இருந்தன.





இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் 26% அளவிற்கே அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த உச்ச வரம்பு 49% என்று உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரனத்திற்கு SBI இன்சூரன்ஸ் நிறுவனத்தில் BNP Paribas என்ற நிறுவனம் 26% பங்குகளை வைத்து இருந்தது. மீதி பங்குகள் SBIயிடம் இருந்து வந்தது. BNP Paribas இதற்கு மேல் தமது முதலீட்டை அதிகரிக்க அனுமதி இல்லை. ஆனால் தற்போது இன்னும் 23% பங்குகளை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் 20000 கோடி முதல் 30000 கோடி வரை பணம் இந்திய இன்சூரன்ஸ் சந்தைக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் பல நாடுகளில் இன்சூரன்ஸ் துறை ஏற்கனவே வளர்ந்து விட்ட சூழ்நிலையில் இந்தியாவில் தற்போது தான் மேலே வர ஆரம்பித்துள்ளது. அதுவும் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது அப்பா காலத்தில் இன்சூரன்ஸ் இருந்த நிலைக்கும், தற்போது நாம் காணும் நிலையையுமே ஒப்பீட்டு பார்க்கலாம்.

இதனால் அடுத்த 10 முதல் 20 வருடங்களில் 20% அளவு வளர்ச்சி கொடுக்கும் துறையாக இன்சூரன்ஸ் துறை எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அதிகபட்ச வளர்ச்சியின் காரணமாக இங்குள்ள இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ள பெரிய ஜாம்பாவான்களான SBI, HDFC, ICICI போன்ற நிறுவனங்கள் தற்போதைக்கு வெளியிலிருந்து பணம் திரட்ட ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் அவர்களிடமே மிஞ்சிய அளவில் பணம் கையிருப்பில் இருப்பதும் ஒரு காரணம்.

தற்போதைக்கு அடுத்த நிலையில் உள்ள நிறுவனங்களே வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அதிக ஆர்வம் காட்டும்.

49% அளவு முதலீடு அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பங்குச்சந்தையின் மூலம் முதலீடு திரட்டுவது தான் எளிதாக இருக்கும். இதனால் அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் அதிக அளவு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தைக்குள் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக