திங்கள், 23 மார்ச், 2015

ஸ்பெக்ட்ரம் ஏலத்தால் ஏறும் டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமை

இந்தியாவில் மட்டும் 84 கோடி தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். அதற்கு காரணம் இந்தியாவில் டெலிகாம் வட்டங்கள் 22 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.


அதில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒன்பது ஆப்ரேடர்கள் டெலிகாம் சேவைக்கு அனுமதிக்கப்படுகின்றனன்ர். இதில் ஆறு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டாலே போதுமானது.

இந்த மிகைப்படுத்தப்பட்ட போட்டி காரணமாகவே இந்திய டெலிகாம் நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியவில்லை.



ஆனால் அடுத்து மொபைல் உலகில் இன்டர்நெட் புரட்சி ஏற்பட்டு வருவதால் டேட்டா பிரிவு சேவை கணிசமான வருமானத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையை டெலிகாம் நிறுவனங்கள் பயன்படுத்த தயாராகி வருகின்றன.

டெலிகாம் நிறுவனங்களை பொறுத்த வரை அவர்கள் சொத்து என்பது வெறும் டெலிகாம் டவர்கள் என்பது அல்ல. அலைக்கற்றை என்று சொல்லப்படும் ஸ்பெக்ட்ரம் என்பது தான் மிகப்பெரிய சொத்து.

அந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் தான் தற்போது இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது.

ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்களுடன் சில குட்டி நிறுவனங்களும் போட்டியில் குதித்து உள்ளன.

இது போக ரிலையன்ஸில் மட்டும் இரண்டு குரூப் போட்டி போடுகிறது. Reliance Communications என்பது அணில் அம்பானி நடத்தி வருவது. முகேஷ் அம்பானி Reliance Jio என்ற ஒரு நிறுவனத்தையும் ஏற்படுத்தி ஏல போட்டியில் இறங்கியுள்ளார்.



இதனால் நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை தக்க வைக்கவே படாத பாடு பட வேண்டியுள்ளது.

இந்த கடுமையான போட்டியால் லாபம் அடைந்து இருப்பது இந்திய அரசு தான். 80,000 கோடி அளவு மட்டும் எதிர்பார்த்த அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க உள்ளது. இது அரசின் இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறையை கணிசமாக குறைக்க உதவும்.

அதே நேரத்தில் டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமையை கணிசமாக ஏற்றி விடும். டெலிகாம் பங்குகளில் முதலீடு செய்யும் போது கடன் எவ்வளவு இருக்கும் என்று பார்த்து முதலீடு செய்யுங்கள். சிறிய நிறுவனங்கள் இந்த ஏலத்தால் மீள்வது என்பது கடினமான செயலே.

ராஜா புண்ணியத்தால் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருவதால் எந்த நிறுவனம் ஏலத்தில் வென்று உள்ளது என்று அறிவிக்கப்படவில்லை. அந்த முடிவுகள் வந்த பின்னரே உண்மையான நிலவரம் தெரிய வரும்.

இவ்வளவு பெரிய தொகையை சமப்படுத்துவதற்கு கூடிய விரைவில் நமக்கு மொபைல் கட்டண உயர்வு பரிசளிக்கப்படலாம். 

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக