ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லிக்கு ஒரு சலாம்

மது, பிரியாணி இல்லை. ஓட்டுக்கு பணம் இல்லை, ஆனாலும் டெல்லி தேர்தலில் இரண்டு பெரிய சக்திகளை எதிர்த்து ஒரு நல்ல வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொடுதததற்க்காக டெல்லி மக்களுக்கு ஒரு சலாம் போடலாம்.


இது வரை இந்திய மாநிலங்களில் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்தால் ஒரு தற்காலிக கவர்ச்சி அல்லது ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினை ஒன்றே காரணமாக இருக்கும்.

அயோத்தி பிரச்சனை இல்லாவிட்டால் பாரதீய ஜனதா வளர்ந்திருக்காது. இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்லாவிட்டால் திமுக வந்திருக்காது. எமர்ஜென்சி போராட்டம் இல்லாவிட்டால் ஜனதா கட்சி வளர்ந்து இருக்காது.

எம்.ஜி.ராமச்சந்திரன், ஏன்.டி.ராமராவ் போன்ற சினிமா கவர்ச்சிகள் இல்லாவிட்டால் அ.தி.மு.க. , தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்காது. இப்படித் தான் பல நிகழ்வுகள் அரசியல் வரலாற்றில் நடந்துள்ளன.

ஆனால் முதன் முறையாக வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு, தொலைநோக்குப் பார்வை போன்றவற்றை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக ஒரு தெளிவான தீர்ப்பு டெல்லி மக்கள் வழங்கியுள்ளனர். இவ்வளவு விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி முன்னோடியாக மாறிய டெல்லி மாநில மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கூடங்குளத்தில் கேஜ்ரிவால்

இந்த நேரத்தில் ஏற்காடு இடைதேர்தல் முடிவுகள் வேற வெளிவந்து நம்மை டெல்லியைப் பார்த்து பொறாமைப்படுத்தியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்கள் முன்னோடியாக இருக்கலாம். ஆனால் அரசியல் மாற்றங்களில் நாம் வட இந்தியாவில் இருந்து நிறைய கற்க வேண்டி உள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது மாற்றுக் கட்சிகள் தேர்தலில் போட்டியிட பயப்படுவதற்கு மக்களாகிய நாமும் ஒரு முக்கியக் காரணமே..

ஆம் ஆத்மி இந்த வெற்றியுடன் நின்று விடாமல் அவர்கள் சொன்னதை ஆக்கபூர்வமாக செய்திட முற்பட வேண்டும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக