திங்கள், 23 டிசம்பர், 2013

தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ்

இந்த கட்டுரை 2013 ஆண்டு முழுவதும் பல பிரச்சனைகளில் உழன்று கொண்டு இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தைப் பற்றியது. அதாவது ஒரு சரியான அடுத்த தலைமுறை கிடைக்காமல் தவித்து வருவதைப் பற்றியது.


கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன் அவர்கள் நிறுவனத்தை விட்டு விலகினார். இதனால் சந்தையில் இன்று இன்போசிஸ் பங்குகள் 1% வரைக் குறைந்தன. இந்த செய்தி தான் இந்தக் கட்டுரைக்கும் கரு.

ஒரு காலத்தில் மென்பொருள் வல்லுனர்களின் முதன்மைத் தேர்வாக இருந்த இன்போசிஸ் கடந்த சில வருடங்களாக ஒரு கடினமான காலக்கட்டத்திலே உள்ளது.

இன்று பணியாளர்களின் திருப்தியின்மை, ஒரு நல்ல அடுத்த தலைமுறை மேலாண்மை வாய்க்காமை, அமெரிக்காவில் ஏற்பட்ட விசா குளறுபடிகள் மற்றும் பெரிய அபராதம் என்று பல பிரச்சினைகளில் உழன்று கொண்டு இருக்கிறது.

தற்போதைக்கு இன்போசிஸ் என்ற ஒன்றரை லட்சம் பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் நாராயண மூர்த்தி என்ற தனி நபரை மட்டுமே நம்பி இயங்க முற்படுகிறது.

இன்போசிஸ் ஆரம்ப அணி 

பங்குச்சந்தையில் அவர் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் என்றதும் பங்குச்சந்தையில் பங்குகள் ஒரே நாளில் 20% உயர்ந்தன. அப்பொழுதே வியப்பாக இருந்தது. ஒரு தனி மனிதன் மேல் இவ்வளவு நம்பிக்கையா என்று.. உண்மையில் இன்போசிஸ் வாடிக்கையாளர்களுக்கு அவரது மேலாண்மை மீது ஒரு அபார நம்பிக்கை இருந்தது உண்மையே.

ஆனால் நிறுவனத்தையே மாற்றி அமைக்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் ஒரு தனி மனிதனால் மேஜிக் ஒன்றும் செய்து விட முடியாது என்பதே யதார்த்தம்..

இந்த ஒரு வருடத்தில் மட்டும் பாலகிருஷ்ணன் அவர்களுடன் சேர்த்து எட்டு உயர் அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். இவர்களின் விலகலை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் இவர்களுக்கு நிறுவனத்துக்கு உள்ளே நடக்கும் அணைத்து நிகழ்வுகளும் ஒரு அத்துப்படி. இவர்கள் விலகுகிறார்கள் என்றால் நிறுவனம் ஒரு சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்றும் அர்த்தமாகக் கொள்ளலாம்.

பல விதங்களில் நிறுவனம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்போசிஸ் பின்னடைவுக்கு சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. பல தெரிந்தும் தெரியாமலும் உள்ளன.

நிதி அறிக்கையின்படி பார்த்தால், இன்போசிஸின் போட்டியாளர்கள் 12~14 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கும் போது இன்போசிஸ் 6 முதல் 10 சதவீத வளர்ச்சி மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. இது முதலீட்டார்களுக்கு நிறுவனத்தின் மேல் உள்ள நம்பிக்கையை குறைத்து விட்டது.

மென்பொருள் சேவையின் முக்கிய ஆதாரமே மனிதவளம் தான். ஆனால் இன்போசிஸ் பணியாளர்களின் விலகல் சதவீதம் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நல்ல திறனுடைய பணியாளர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் சேருவதற்கு தயங்குவதும் உண்மையே..

பொறியாளர்களுக்கு தகுதியான ஊதியத்தைக் கொடுக்கத் தயங்குவதும், பணியாளர்களை சரியான அளவில் பயன்படுத்தாமலும், அதைவிட மதிக்காமலும் உள்ள நிர்வாகம் ஒரு பெரிய தடைக்கல்லாக உள்ளது.

இது போக போட்டியாளர்களுடன் போட்டி போட முடியாமல் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி உள்ளது.

இவ்வாறு கார்பரேட் நிறுவனத்தின் முக்கோணப் புள்ளிகளான பணியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் என்று மூன்று பேரின் நம்பிக்கையும் இழந்து காணப்படுகிறது.

இந்த நேரத்தில் நாராயண மூர்த்தி என்ற ஒரு தனி மனிதனால் மேஜிக் ஒன்றும் பெரிய அளவில் செய்து விட முடியாது.

இந்தப் படை மட்டும் போதுமா?
நாராயண மூர்த்திக்கு வேண்டியது சுற்றி இருக்கும் ஒரு தகுதியான இரண்டாம் கட்ட மேலாண்மை குழுவே. அதாவது நீல்கேணி, கோபால கிருஷ்ணன் போன்ற அசாத்திய திறமையுடைய சுற்று வட்டாரமே நாராயண மூர்த்தியுடன் சேர்ந்து இன்போசிஸின் கடந்த கால அபார வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. ஆனால் இத்தகைய திறமையான மேலாண்மைக் குழுவை உருவாக்க கடந்த பத்து வருடத்தில் இன்போசிஸ் தவறிவிட்டது.

ஆனால் அவர் இன்று தனது மகனை முன் நிறுத்துவது நிறுவனத்தில் தமது வீரியத்தைத் தக்க வைக்கும் முயற்சி போல் உள்ளதே தவிர நிறுவனத்திற்கு எந்த அளவு பயன்படும் என்று தெரியவில்லை. கார்பரேட்டில் காங்கிரஸ் கலாச்சாரம் எந்த அளவு எடுபடும் என்பது ஒரு புதிராகவே உள்ளது.

ஒரு முதலீட்டாளராக பார்த்தால் இன்போசிஸ் பங்குகளிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருப்பதே நல்லது. ஏனென்றால் இன்போசிஸ் ஒரு நீண்ட காலப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. இதிலிருந்து மீண்டு வர காலம் ஆகலாம். அல்லது ...???.

ஒரு சாமானியனாக இன்போசிஸ் மீண்டும் மீண்டு வர வேண்டும் என்றே தோன்றுகிறது. இன்போசிஸ் சரிவு இந்திய மென்துறையின் சரிவே. அதில் ஒன்றரை லட்சம் மக்களின் நேரடி வாழ்க்கை அடங்கி உள்ளது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: