சனி, 21 டிசம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள் - 5

இந்த கட்டுரை எமது மியூச்சல் பண்ட் தொடரின் செயலாக்க கட்டுரையே.

முந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம், நமக்கு எது தேவை?, சில சுய கேள்விகள், மியூச்சல் பண்ட்டை அளவிடுதல் என்று பல பிரிவுகளை பார்த்தோம்.

அதனை நிகழ் வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் சுருக்கமாக பார்ப்போம். இதனால் இந்த தொடரின் முதல் பாகத்தில் இருந்து படித்து வருவது அதிக பலனை தரும்.

பார்க்க: ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1




எமது நெருங்கிய நண்பர் ஒருவர் ஏஜென்ட் சொல் கேட்டு ஒரு மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தார். அதுவும் வருமான வரி கட்டுவதற்காக அவசரம் அவசரமாக செய்த ELSS முதலீடு.

அடுத்து மூன்று வருடம் கழித்து பார்த்தால் நெகடிவ் ரிடர்ன். நஷ்டத்தில் எடுக்க மனதில்லாமல் அடுத்து வருடம் வரை வைத்து பார்க்கலாம் என்றால் அதிலும் மீளவில்லை.

இவ்வளவிற்கும் அவர் படித்து ஐடி துறையில் இருப்பவர் தான். இணையம் எளிதில் கிடைக்கும் வசதிகள் உள்ளது. ஆனாலும் அந்த தவறிற்கு காரணம் என்று பார்த்தால் அவசரத்தில் தவறாக முதலீடு செய்தது, ஏஜென்ட் பேச்சை அப்படியே நம்பியது என்பது தான்.

பொதுவாக நமது ஊரில் பார்த்தால் நிதி மேலாண்மை செய்யும் ஏஜெண்ட்களுக்கு முதலீடு தொடர்பான ஆழ்ந்த அறிவு என்பது குறைவு தான். எந்த பாலிசி, முதலீடு என்றாலும் இவ்வளவு போட்டால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கிடைக்கும் என்ற பேராசை காட்டுவது தான் முதல் படி. அதில் பல பேர் விழுவார்கள்.

அது எப்படி நிலையான வருமானம் வரும்? என்று மேலும் கேள்வி கேட்டால் அதன் பின் மேல் உள்ள மேலாளரை காட்டுவார்கள். அவர் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் விளக்கி எப்படியும் முதலீடு செய்ய வைத்து விடுவார்.

அதன் பின் நாம் முதலீடு செய்யும் வரை அவர்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். அது எத்தனை வருடங்கள் சென்றாலும் சரி தான்.அதனால் கமிஷன் அதிகம் தரும் மியூச்சல் பண்ட்களை தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள். அது நல்ல நிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியின் முதலீட்டு காலம் முடியும் போது யாரும் திருப்பி கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.

எம்மிடம் கேட்டால் Mutual Fund ஒன்றும் ராக்கெட் அறிவியல் போன்று புரியாத ஒன்று அல்ல. பங்குச்சந்தைக்கு நேரடியாக போவதற்கு பதிலாக Mutual Fund ஒரு ஏஜென்ட் போன்று செயல்படுகிறது. அதற்கும் நாம் ஏஜென்ட் ஒருவரை வைத்துக் கொள்வது அவசியமற்றது.

அடுத்து அவசர அவசரமாக வருமான வரிக்காக அலுவலகத்தில் கேட்கும் போது முதலீடு செய்வது. அதிக தவறுகள் இதில் தான் வருகிறது. இதற்கு மாதந்தோறும் SIP முறையில் முதலீடு செய்து வரலாம். டிமேட் ஸ்டேட்மென்ட்களே அலுவலகத்தில் சமர்ப்பிக்க போதுமானது. வருமான வரி பலனும் கிடைத்து விடும்.

சில எளிய அடிப்படை வழிகளை கூறுகிறோம்.

மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களை பார்த்தால் மூன்று பிரிவினர் தான். கண்டிப்பாக இதில் ஏதாவது ஒன்றில் நாம் வந்திருவோம்.

ஒன்று, 
இளமை துள்ளல் கொண்ட இப்பொழுது தான் வேலை கிடைத்து முதலீட்டை ஆரம்பிப்பாவார்கள். இவர்களுக்கு குறைந்தது இன்னும் 30 வருடங்கள் வேலை பார்க்க அளவு நேரம் இருக்கிறது. அதனாக கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம். அதிக அளவு பங்குசந்தையில் முதலீடு செய்யப்படும் Equity Fund ஏற்றது. 20% அளவு வருட  ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது,
35 வயதில் குடும்பம், குழந்தை என்று சுமைகளை சுமககும் நேரம். இந்த நேரத்தில் வருமானமும் தேவைப்படும். ஆனால் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க முடியாது. அவர்கள் Balanced Fund நிதியில் முதலீடு செய்யலாம். 15% அளவு ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

மூன்றாவது,
50 வயது கடந்து பென்ஷன் அல்லது Fixed Deposit வட்டியை நம்பி இருப்பவர்கள். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க முடியாது. இவர்கள் Debt Fund வகையில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 10% அளவு ரிட்டர்ன் எதிர்பார்க்கலாம்.

பார்க்க: 

எந்த நிறுவனம்?


அடுத்து எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்று. கேட்டால் பெரிய வங்கி துறை சார்ந்த SBI, HDFC, Axis Bank போன்றவற்றின் நிதிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. 

மற்ற மியூச்சல் பண்ட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏதேனும் சூழ்நிலையில் நிறுவனத்தையே விற்று விடுகிறார்கள். அதன் பின் வேறொரு பண்ட்டில் இணைக்கிறார்கள். நிர்வாக சிக்கலும் ஏற்படுகிறது. இங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் ஏற்பட்டு விடுகிறது.

எந்த மியூச்சல் பண்ட்?

இறுதியாக இந்த கட்டத்தில் வரும் போது குறைந்த பட்சம் உங்கள் மியூச்சல் பண்ட் பட்டியல் ஐந்து என்ற எண்ணிக்கையில் சுருங்கி இருக்கும். இதில் எந்த முதலீடும் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆனாலும் அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி?  -4 என்ற கட்டுரையை படியுங்கள். அதில் பல டெக்னிக்கல் தகவல்கள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும்.

என்ன தான் தியரி போன்று விளக்கினாலும் அனுபவமாக எதுவும் வராது. அதனால் ஒரு சிறிய தொகையில் நீங்களே ஒரு நிதியை மேற் சொன்ன அடிப்படைகளை வைத்து தேர்ந்தெடுங்கள். MoneyControl தளத்தில் சென்று மியூச்சல் பண்ட் பட்டியலை முழுவதுமாக பார்க்க முடியும்.

அதன் பின் Paper Investing முறையில் ரிடர்ன் மற்றும் தவறுகளை குறித்து வரலாம். அதனை அடுத்து வரும் முதலீடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த தொடரின் அணைத்து பாகங்களையும் E-Book வடிவில் பின்னர் பகிர்கிறோம். ஈமெயில் வழியாக இணைந்து இருங்கள்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

  1. மிக தெளிவாக விளக்கங்கள் அளிக்கின்றீர் :) நன்றி மற்றும் வாழ்த்துகள்! உங்கள் பதிவுகள் என்றும் வளரட்டும்!!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துகள் மிக உற்சாக அளிக்கிறது. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. நண்பா இதன் தொடர்ச்சி காணப்படவில்லையே ....

    பதிலளிநீக்கு