திங்கள், 30 டிசம்பர், 2013

பங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்?-1

இந்த கட்டுரையில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்கிறோம். எமது போர்ட்போலியோ போல் இதுவும் வாசகர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறோம்.

இந்த சமயத்தில் புதிய வாசகர்களின் குறிப்புகளுக்காக, இதுவரையான விளக்கங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட நமது போர்ட்போலியோ நான்கு மாதங்களில் மட்டும் 25% லாபம் கொடுத்து உள்ளது.

அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம். 
REVMUTHAL போர்ட்போலியோ 

போர்ட்போலியோ விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.
பங்கு பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள்

பொதுவாக பங்குசந்தையில் யார் கொஞ்சம் விரைவாக கணிக்க செய்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவதே வாரன் பப்பெட் முதல் ராஹேஷ் ஜுன்ஜுன்வாலா வரை நிருபணமாகி வருகிறது.

இந்தக் கணிப்பு என்பது ஜோதிடம் அல்லது ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்ட கணிப்பு அல்ல. இதுவரை கிடைத்த தரவுகளை வைத்து இனி இப்படி இருக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுவது.

தற்போது அடுத்த வருடம் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்று நமது மன ஓட்டத்தில் உள்ளதைப் பகிர்வது உங்களுக்கும் பயனாக இருக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் கொடுக்கும் எதிர் கருத்துகள் எமக்கும் பயனாக இருக்கலாம். அதனால் உங்கள் கருத்துகளை பகிருங்கள்!



முதலில் இந்த வருடம் 2013ன் ஒரு சின்ன பிளாஷ்பேக் பார்ப்போம். ஏனென்றால் இவை தான் நமக்கு அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்க கூடிய தரவுகள்.

முதற்பாதி:


இந்த வருட முதற்பாதியில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. அதாவது 1991க்கு முன் இந்திய அரசாங்கம் தங்கத்தை உலக வங்கியில் அடகு வைத்து கடன் பெற்று பட்ஜெட் போட்டார்கள். அந்த நிலைக்கு சென்றாதாகவும் ஒரு கட்டத்தில் கருதப்பட்டது.

இதற்கு மோசமான ஊழலடைந்த நிர்வாகம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் பல தொழில் துறை வழக்குகள் நீதிமன்றம் வரை சென்று அப்படியே தேங்கிக் கிடந்தன. இதன் காரணமாக ஆட்டோ, ரியல் எஸ்டேட், சுரங்கம், மின்சாரம் என்று பல துறைகள் படுத்துவிட்டன.

இந்த முக்கியத் துறைகள் ஒழுங்காக செயல்படாததால் வங்கிகளின் தொழில் துறைக் கடன் வாராக் கடனாக மாறியது. இதனால் வங்கித் துறைகளும் சேர்ந்து அடி வாங்கின.

மற்றொரு முனையில் அந்நிய செலாவணி பற்றாக்குறை நான்கு சதவீதம் மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. உணவு பணவீக்கம் வேற 18% வரை அதிகரித்தது.

இப்படி தொட்ட இடம் எல்லாம் வலியாக இருந்ததால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சரியாகக் குழம்பி போயின.

ரிசர்வ் வங்கிக்கு வேறு ஒரு இக்கட்டான நிலைமை. பண இருப்பு விகிதங்களைக் கூட்டினால் தான் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அப்படிக் கூட்டினால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனைத் திறமையாக சமாளித்தது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் வருட மத்தியில் சிதம்பரமும் ரகுராம் ராஜனும் சேர்ந்து எடுத்த சில அவசர முடிவுகள் நல்ல பலனைக் கொடுத்தது. இதன் காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறை கணிசமாகக் குறைந்தது.
அவர்கள் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள்..இது தான் அடுத்த வருட பங்குகளை தேர்தெடுக்க நமக்கு கிடைத்த key points..

தங்கம் 

அந்நிய செலாவணி கட்டுக்கு கொண்டு வர தங்கத்தின் மீதான் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இதனால் நகை தொடர்பான பங்குகள் கீழே இறங்கின. ஆனால் நவம்பரில் அந்நிய செலாவணி மீண்டும் கட்டுக்குள் வந்து விட்டது.

இதனால் தங்கத்தின் இறக்குமதி வரி மெதுவாக குறைப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி குறைக்கபட்டால் மீண்டும் நகை தொடர்பான பங்குகள் மேலே வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. (ஆனால் தனிப்பட்ட முறையில் எதற்கும் பயன்படாத நகைகள் மீதான வெறுப்பு காரணமாக நான் இந்த பங்குகளில் முதலீடு செய்வதில்லை, மற்றவர்களுக்காக பதிவு செய்கிறோம்.)

சுரங்கம், மின்சாரம் 

அடுத்து இந்த வருடத்தில் பயங்கரமாக அடிப்பட்டவை சுரங்க பங்குகள். மிகப்பெரிய அளவில் நடந்த நிலக்கரி ஊழல் காரணமாக முக்கிய நிலக்கரி சுரங்கங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டன.
இதனால் நிலக்கரி வெட்டி எடுக்க முடியவில்லை.  நிலக்கரி இல்லாததால் மின்சார உற்பத்தி குறைந்தது.

பற்றாக்குறை நிலக்கரி இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டததால் அன்னிய செலாவணிக் கூடியது. இது மற்ற துறைகளையும் பாதித்தது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு இந்த ஊழல் முக்கியக் காரணமாக அமைந்தது.

அதன் பிறகு முதல்வன் பட வேகத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலக்கரி சுரங்கம் தொடர்பான சில கடுமையான விதி முறைகள் தளர்த்தப்பட்டன. மின் உற்பத்தி தொடர்பான சில பெரிய திட்டங்கள் மின்னல் வேகத்தில் அனுமதி வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள்  இரண்டு வருட இடைவெளியில் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும் என்று கருதலாம். இதனால் அடிமாட்டு விலையில் கிடைக்கும் சில சுரங்கம், பவர் தொடர்பான பங்குகளை வாங்கிப் போட்டால் லாபம் மடங்குகளில் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பதிவு பெரியதாகி விட்டதால் இந்த இணைப்பில் தொடர்ச்சியை பாருங்கள்.
அடுத்த வருடம் பங்குச்சந்தையை எப்படி அணுகலாம்? - 2  


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக