ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ராணுவத்தில் ஒரே ரேங், ஒரே பென்சன் - ஒரு விரிவான பார்வை

இந்தக் கட்டுரை இந்திய ராணுவத்தில் பணி புரியும் வேலூரை சேர்ந்த திரு.ராஜா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவரது துறை சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் விரிவாக பகிர்ந்ததற்கு நன்றி!

One Rank One Pension (OROP) என்பதை ஒரு பதவி ஒரு ஊதியம் என்று கூறினால் சற்று புரியாது, அதை கொஞ்சம் புரிகிற மாதிரி பார்ப்போம்.



இந்திய ராணுவத்தில் பல பதவிகள் உள்ளன. உதாரணத்திற்கு Sepoy என்ற (கடை நிலை ஊழியர்) ஒரு பதவி உண்டு. Sepoy என்ற பதவியிலிருந்து ராமு என்பவர் 2005 ம் ஆண்டு ஓய்வு பெற்றுருந்தால் அவருக்கு பென்ஷன் 7500 ரூபாய் கிடைக்கும், அதே Sepoy பதவியிலிருந்து ராஜா என்பவர் 2015 ம் ஆண்டு ஓய்வு பெற்றால் 12500 ரூபாய் கிடைக்கும். இப்போது ராமு என்பவர் ராஜா வாங்கும் பென்ஷன் தொகை எனக்கும் வேண்டும், ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே பதவியில் (Sepoy) இருந்தோம் அதனால் எங்களுக்கு ஒரே அளவு பென்ஷன் வேண்டும் என்கிறார். இதுதான் One Rank One Pensionனோட கான்சப்ட்.

சரி இவர் கேட்பது சரியா? இந்தியாவில் மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு கமிட்டியை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள உயர்வை அளிக்கிறது. இது பணியில் உள்ளவர்களுக்கு மட்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு அல்ல.

இதில் ராமு என்பவர் 5 வது சம்பள கமிஷன் அமலில் இருக்கும் போது ஓய்வு பெற்றவர், ராஜா என்பவர் 6 வது சம்பள கமிஷன் அமலில் இருக்கும்போது ஓய்வு பெற்றவர் அதனால்தான் இந்த பென்ஷன் வித்தியாசம். இது எல்லா அரசு துறையில் உள்ளவர்களுக்கும் இருப்பதுதானே இவர்கள் மட்டும் என்ன Special என்று தோன்றலாம்.இவர்கள் கோரிக்கை நியாயம் இல்லை என்றுகூட தோன்றலாம், இதையும் கொஞ்சம் புரிகிறமாதிரி பார்க்கலாம்.

இந்திய ராணுவத்தில் 18 வயதில் டீன்ஏஜ் என்று சொல்லப்படுகின்ற பதின் பருவத்தில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தவுடன் உலகமே என்ன? என்று தெரிவதற்குள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறான். அவனுக்குள் இருக்கிற அன்பு, காதல், போன்ற உணர்வுகளை அழித்து அவனை போருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வருடத்தில் 2 மாதம் விடுமுறை அளிக்கப்படுகிறது அதுவும் பலருக்கு 1 மாதம் மட்டுமே கிடைக்கிறது. 25 - 30 வயதில் திருமணம் நடக்கிறது. 35-38 வயதில் ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறும்போது அவருக்கு 5-8 வயதில் குழந்தை இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் 40 வயதிற்கு மேல் தான் கடமை தலைதூக்குகிறது, பெற்றோர்களை கவனிக்க, குழந்தைகளின் மேற்படிப்பு, மகளின் திருமணம், தம்முடைய எதிர்காலம் என ஏராளம்.



பணியின் போது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடுவது, உயிருக்கு உத்திரவாதமில்லை, பனி மலை, பாலைவனம் என கடுமையான பனிச்சுமை காரணமாக சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர், பலர் 90% பேர் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகின்றனர்.

அவ்வாரு உலகமே ஒன்றும் தெரியாத ஒருவர் 35 வயதில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஒரு புது உலகத்தை காண்கிறார். பணிக்கொடையாக கிடைத்த சில லட்ச பணத்தையும் சில ஆண்டுகளுக்கு உள்ளேயே இழக்கிறார்.

பின்பு ஓய்வு எடுக்க வேண்டிய 55 வயதுக்கு பின்பு அவருக்கு தெரிந்த security வேலைக்கு போகிறார். நாட்டுக்காக துப்பாக்கி பிடித்த கைகளில் பல்வேறு shopping mall களில் கதவை திறந்து வணக்கம் வைக்கிறார்கள். எனவே "எங்களையும் மற்ற அரசு ஊழியர்களையும் ஒன்றாக பார்காதீர்கள்" என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த கோரிக்கை(OROP) பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 2004 ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தேர்தல் வாக்குறுதி போல காங்கிரஸ் சொல்லி வைக்க அது தீவிரமானது. இதில் என்ன குழப்பம் என்றால் எப்போதெல்லாம் பென்ஷன் அளவு மாற்றமாகியிருக்கிறதோ அதற்கெல்லாமும் பணம் தரவேண்டும்.

அதாவது ராமு 2005 ம் ஆண்டு 5 வது சம்பள கமிஷன் அமலில் இருக்கும்போது 7500 பெற்றார். பின்பு 2006 ல் 6 வது சம்பள கமிஷன் அமலானது. அப்போது ஓய்வுபெற்றவர்கள் 12500 வாங்கினர். இப்போது ராமுவுக்கு 2006 ம் ஆண்டிலிருந்து 12500 தரணும். அதாவது 12500 - 7500 = 5000 ரூபாய் ஒரு மாதம் என வருடத்திற்கு 60000 என 9 வருடத்திற்கு 5,40,000 தர வேண்டியுள்ளது.

இவ்வளவு பணம் ஒருவருக்கு என்றால், மொத்தம் சுமார் 25 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் 5 லட்சம் விதவைகளுக்கும் (ஆம் 5 லட்சம் பெண்கள் தங்களுடைய கணவனை இழந்து பிள்ளைகளை கரை சேர்க்க போராடிக்கொண்டிருக்கிறார்கள், இவர்கள் படும் இன்னல்களும், பாலியல் துன்பங்களும் சொன்னால் புரியாது) தரவேண்டியுள்ளது, இது வேண்டாத வேலை என 2008 ல் நிராகிக்கரிக்கப்பட்டது.

என்ன செய்வது என தெரியாத "அப்ரானிகள்" தன்னுடைய ரத்தித்தினால் சுமார் 20000 பேர் கையெழுத்து போட்டு, தங்களுடைய வீர பதக்கங்களை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பினார்கள்.

ஆறாவது சம்பள கமிஷனின் போது 10,12 வது வகுப்பு படித்தவர்களுக்கு இவ்வளவு சம்பளமா என வாய்கூசாமல் கேள்வி கேட்ட இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டேல் அதை கிழித்து குப்பை தொட்டியில் போட்டார். ஆனால் மீடியாக்களின் புண்ணியத்தால் அது பெரிதுபடுத்தப்பட்டது. அடுத்து தேர்தலும் வர இருப்பதால் காங்கிரஸ் இதை ஏற்றுக்கொண்டது.

ஏன் இன்னும் இதை அமுல்படுத்தவில்லை?

ஏனெனில் இந்தக் கோரிக்கையை யாரும் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை. சும்மா மீடியாவிடமும், மக்களிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக ஏற்றுக்கொள்ளபட்டவை. இதை அமல் படுத்த சுமார் 9000 கோடி தேவை. கடந்த கால பட்ஜெட்களில் ஒரே ரேங், ஒரே பென்சன் கொள்கைக்காக அறிவிக்கப்பட்டது வெறும் 1000 கோடி.

இந்திய அரசிடம் அவ்வளவு பணம் இல்லையா? கேட்டால் நாடு கடனில் உள்ளது அதனால் சிக்கன நடவடிக்கை என்பார்கள். மானிய தொகையை விட்டுகொடுங்கள் என பிரதமர் கேட்கிறார்.

ஆனால் எந்த MP க்களும் மானியத்தை விட்டுகொடுக்கமாட்டார். அதே பாராளுமன்ற கேன்டீனில் ஒரு கப் டீ 1 ரூபாய், இலவச wifi. லாலுபிரசாத் யாதவ் சொன்னார், ராணுவத்திற்கு இவ்வளவு சம்பளமா.?..100 ரூபாய் தாருங்கள், எவ்வளவு பேர் வேண்டும் நான் தருகிறேன் என்றார்.

பிரதிபா பாட்டேல் சொன்னார், தினமும் இந்திய ராணுவத்தை காலையில் எழுப்ப 4 கோடி ரூபாய்க்கு தேநீர் செலவாகிறது என்றார், இவரை மன்மோகன்சிங் இந்தியாவின் இரும்புமங்கை என்றார். இதுதான் இந்திய அரசியல்வாதிகளின் மனநிலை.

இராணுவத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கினால் அதை பலர் விமர்சிக்கின்றனர். இதை கல்விக்கு பயன்படுத்தியிருக்கிலாமே என சில அறிவாளிகள் கூறுவர்.



போர் தொடங்கினால் 2 மணி நேரத்துக்குள் சீனா அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிடும், அந்த அளவுக்கு இந்திய ராணுவம் பலவீனமாக இருக்கிறது என அந்த அறிவு ஜூவிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. போரை பற்றி தெரியவேண்டும் என்றால் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் படித்தால் ஓரளவு புரியும்.

பார்க்க: அமேசானில் வந்தார்கள் வென்றார்கள் புத்தகம்

சரி நாடு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்போம். அதற்கும் ஒரு யோசனை சொல்லப்பட்டது. அதாவது ராமு கேட்கும் பென்ஷன் தொகையான 12500 த்தை இப்போதே தருவது, மீதமுள்ள தொகையை பகுதி, பகுதியாகவோ அல்லது பாண்டு பத்திரங்களாகவோ தரலாம் என்று.

இதில் 20, 30 வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் 1000, 2000 மட்டுமே பென்ஷன் கிடைக்கிறது. தமிழகத்தில் முதியோர் பென்ஷன் 1000 கிடைக்கிறது... எந்த போர்க்களத்தையும் பார்க்காமலே! 30 வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களின் தற்போதைய வயது சுமார் 65 மட்டுமே என்பதை நினைவில் கொள்க.

நாட்டின் சுதந்திர தினம், குடியரசு நாட்களில் தேசிய கொடியை சட்டையில் குத்திக்கொண்டு தேசிய உணர்வை ஒரு நாள் மட்டும் காட்டும் பலர் அன்றைய தினம் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்வர்.

அந்த முன்னாள் ராணுவத்தினர் கடந்த 15 -20 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஓய்வு பெற்றவர்களால் நமக்கு என்ன பயன் என்ற எண்ணமே!

இராணுவத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் யாரும் சங்கம் அமைத்து கொள்ள முடியாது. ஏனெனில் சங்கம் ராணுவ புரட்சிக்கு வழி வகுக்கும் என கட்டுப்பாடு உள்ளது. இது நாட்டுக்கு நல்லது. அதுவே தன்னுடைய அடிப்படை உரிமையைக்கூட பெறமுடியாத பிள்ளைப்பூச்சியாக மாறிவிட்டனர்.

முன்னாள் ராணுவத்தினர் கேட்கும் ONE RANK ONE PENSION என்பதை நியாயம் என்று சொல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட முடிவெடுக்காமல் தள்ளிப் போடவே முயலுகின்றனர்.

கட்டுரை ஆசிரியர் ராஜா

நன்றியுடன்
ராஜா
இந்திய ராணுவம், டெல்லி




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக