திங்கள், 19 அக்டோபர், 2015

மொபைல் போன் கால் கட்டானால் ஒரு ரூபாய் கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாகவே Call Drop என்ற பிரச்சினை இருந்து வந்தது. அதாவது நாம் மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் கட்டாகும் அந்த நிமிடத்திற்கும் சேர்த்து நாம் கட்டணம் செலுத்த வேண்டும்.


இது தொடர்பாக TRAI என்று சொல்லப்படும் டெலிகாம் கட்டுப்பாட்டு வாரியம் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்து வந்தது.



இதனால் ஏர்டெல் தங்களது காலில் பேசுவது தொடர்பான கட்டணங்கள் இனி செகண்டுகளில் கணக்கிடப்படும் என்றும் அறிவித்தது.

ஆனாலும் TRAI விடுவதாக இல்லை.

இனி ஒவ்வொரு முறை போன் கால் இணைப்பு துண்டிக்கப்படும் போதும் நம்முடைய பேலன்சில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்படும். என்று கூறி உள்ளது.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று ரூபாய் வரை இப்படி பெற்றுக் கொள்ளலாமாம். இதனை நான்கு மணி நேரத்தில் நுகர்வோருக்கு SMS மூலம் தெரிவிக்க வேண்டும்.

இந்த விதி முறைகளைக் கண்டு டெலிகாம் நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.

சராசரியாக 200 ரூபாய் மாதத்திற்கு ரீசார்ஜ் செய்யும் ஒருவருக்கு 90 ரூபாயை கொடுத்து விட்டால் தங்களுக்கு எதுவும் மிஞ்சாது என்று அந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

இந்த Call Drop பிரச்சினைகளுக்கு டெலிகாம் நிறுவனங்களின் கட்டமைப்பு வாடிக்கையாளர்கள் பெருகும் அளவிற்கு சிறந்த முறையில் இல்லாததும் ஒரு முக்கிய காரணம்.

டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற முடியாமல் தவிக்கின்றன. முக்கியமான அலைவரிசைகள் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் இருந்து பெறுவது கடினமாக உள்ளது. இதனால் கிடைக்கும் அலைவரிசைகளைத் தான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

பார்க்க: ஏன் 900MHz ஸ்பெக்ட்ரத்தை நோக்கி நிறுவனங்கள் ஓடுகின்றன?

அதே நேரத்தில் மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் டவர் அதிகமாக வைக்கலாம் என்றால் அதற்கும் கதிர்வீச்சு பிரச்சினை காரணமாக அனுமதி கிடைப்பதில்லை.

இந்த காரணங்களால் டெலிகாம் நிறுவனங்கள் பழியை அரசின் மீது திருப்புகின்றன.

இதனால் முதலில் தங்கள் அதிருப்தியை அரசுக்கு தெரிவித்து உள்ளன. அதில் தீர்வு ஏதும் இல்லாவிட்டால் நீதி மன்றத்திற்கும் செல்ல முடிவெடுத்து உள்ளன.

இங்கு ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் TRAI பொத்தாம் பொதுவாக எல்லாருக்கும் ஒரு ரூபாய் கொடுக்கணும் என்று சொல்லி விட்டது.

ஆனால் டெலிகாம் முக்கிய விதிகள் படி இரண்டு சதவீதம் வரை Call Drops இருக்கலாம் என்று அனுமதிக்கிறது. அப்படி என்றால் அந்த சதவீதத்திற்கு மேல் சென்றால் தான் அபராதம் கட்ட வேண்டும், ஆனால் இந்த விதிமுறையில் அப்படி எதுவும் இல்லை.

அது போல், இரண்டு வேறு இணைப்புகளை வைத்து இருப்பவர் பேசும் போது கால் கட்டானால் யார் அபராதம் கட்டுவார்கள் என்று தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஏர்டெல் இணைப்பு வைத்திருப்பவர் ஐடியா மொபைலுக்கு பேசும் போது இணைப்பு கட்டானால் யார் பொறுப்பேற்பார்கள்? என்று கேள்வி எழுப்புகின்றன.

இரண்டு நிறுவனங்களுமே தங்கள் பிரச்சினை இல்லை என்று சொல்லி குஸ்தி போடவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த விதமான நடைமுறை பிரச்சினைகளால் டெலிகாம் நிறுவங்கள் கோர்ட்டிற்கு சென்றால் அவர்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது.

அதனால் TRAIயின் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

அவ்வாறு சாதகமாக வந்தால் ஏர்டெல்,  ஐடியா போன்ற நிறுவன பங்குகள் தாழ்ந்த அளவிற்கு மீண்டும் மேலே வர வாய்ப்பு உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக