வியாழன், 26 டிசம்பர், 2013

பங்குசந்தையிலும் ஒரு பெரியார் புரட்சி தேவை

தற்பொழுது பங்குச்சந்தையில் ஜோதிடம்(Astrlogy) பார்த்து முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனைப் பற்றிய விமர்சனம் தான் இந்த கட்டுரை.


இந்தக் கட்டுரை நாத்திகம், ஆத்திகம், கடவுள் நம்பிக்கை என்பதை விமர்சனம் செய்யும் கட்டுரை அல்ல. ஆனால் இந்த நம்பிக்கைகள் சற்றும் சம்பந்தம் இல்லாத பங்குச்சந்தையில் புகுத்தப்படுவதை விமர்சனம் செய்யும் பதிவே.

பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன் பல விதமான கணக்குகளை சாப்ட்வேர், பார்முலா, எச்செல் சீட் போன்ற சாதனங்களை வைத்து கணக்கிட்டு அதன் பின் முதலீடு செய்து வருவதே வழக்கமாக இருந்துள்ளது.

நீண்ட கால முதலீட்டிற்கு "Fundamental Analysis" தேற்றமும் குறுகிய கால முதலீட்டிற்கு "Technical Analysis" தேற்றமும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் சில புற நிகழ்வுகளால் இந்த தேற்றங்கள் சில சமயங்களில் பொய்த்து விடவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பொய்மை என்பது குறுகிய காலத்திற்கு மட்டுமே.

அடிப்படை வலுவாக இருந்தால் எந்த செயலும் தோல்வி அடைய வாய்ப்புகள் மிகக் குறைவே. இது பங்குச்சந்தைக்கும் சரியாகப் பொருந்தும்.

ஒரு நிறுவனம் நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருந்தால் கண்டிப்பாக அதன் நிதிநிலை அறிக்கையும் நன்றாகத் தான் இருக்கும். நிதிநிலை அறிக்கை நன்றாக இருந்தால் பங்கு விலை கட்டாயமாகக் கூடும்.

ஆனால் சில சமயங்களில் அரசின் கொள்கைகள், உலக அளவில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற சில நிகழ்வுகள் நிறுவனத்தை ஓரளவு குறுகிய கால அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.



சிலர் இந்த குறுகிய இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு முதலீட்டார்களிடம் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி வருகின்றனர்.

நஷ்டத்திலும், கஷ்டத்திலும் இருக்கும் போது நம்மை அறியாத ஒரு சக்தி வந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பே.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இன்று இணையத்தில் "AstroStockTips" என்ற பெயரில் தளங்கள் ஆரம்பித்து பணவேட்டை செய்து வருகின்றனர்.

உதாரணத்துக்கு சில தளங்கள். Astrostocktips.in, Ganeshaspeaks.com மற்றும் Astromoneyguru.com.

இந்த தளங்கள் ஐந்தாயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை கட்டணமாக வசூலித்து வருகின்றன. இதனைப் பயன்படுத்த மக்கள் வரிசையில் தான் உள்ளனர்.

செபி அமைப்பு இதனை சூதாட்டங்கள் என்ற பெயரில் எச்சரிக்கை செய்த பிறகும் இந்த ஏமாற்று வேலைகள் ஜோராக நடந்தே வருகின்றன. moneycontrol.com போன்ற நம்பிக்கையான பொருளாதார தளங்களும் இவர்களுக்கு துணை போவது வேதனையான ஒன்றே.

ஒரு சாமியார் சொன்னதற்காக அறிவியல் காரணமின்றி நிலத்தை தோண்டி பொன் எடுக்க முற்பட்ட அரசு இருக்கும் போது சட்ட ரீதியாக இவர்களை கட்டுபடுத்துவார்கள் என்று நாம் எதிர் பார்க்க முடியாது.

இவர்களுக்கு நாம் ஜோதிடம் பாணியில் சொல்வதாக இருந்தால் இந்தியாவிற்கு கலிகாலம் முத்தி உள்ளது.

நாம் ஏமாறும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அதனால் எச்சரிக்கையாக இருப்போம்!

நிறுவன வளர்ச்சிக்கும், பங்கு ஏற்ற இறக்கங்களுக்கும் கிரகங்கள் தான் காரணம் என்பது ஒரு பிற்போக்கான நம்பிக்கையே.

பங்குசந்தையிலும் ஒரு பெரியார் புரட்சி தேவைப்படுகிறது!




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

7 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே! எல்லா இடத்திலும் மூட நம்பிக்கை திட்டமிட்டு புகுத்தப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. இத எங்க போய் சொல்வது?

    பதிலளிநீக்கு
  3. ஆசையும்,பயமுமே மனிதனை இது போன்ற செயல்களுக்கு தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு