ஞாயிறு, 28 ஜூன், 2015

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தரங்கில் 1930ல் நடந்த பொருளாதார சீர்குலைவு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.

2008ல் நடந்த பொருளாதார தேக்கத்தை பற்றி 2005லே அனுமானமாக கூறி இருந்தார். இதனால் அவரது கருத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.



அவர் சொல்லியவாறு உலக அளவில் விவாதம் நடந்தால் தான் இது தொடர்பான சாத்தியக் கூறுகள் பற்றி அறிய முடியும். ஒரு தனி மனிதனாக இதனை நமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயமாகவே கருதி கொள்ளலாம். 

ஆனால் இது வரை இத்தகைய பொருளாதார பேரழிவு தொடர்பான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கவில்லை என்பது தான் நமக்கு முன்னால் இருக்கிற சாதகமான விடயம்.

நேற்று ரிசர்வ் வங்கி சார்பில் அவரது கருத்துக்கு மறு விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. உலக பொருளாதாரம் அத்தகைய பாதிப்பில் இல்லை, ஆனால் உலக மத்திய வங்கிகள் எடுத்து செல்லும் பொருளாதார கொள்கைகளை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

என்னவாக இருப்பினும், 1930ல் நடந்த பொருதார பேரழிவு என்பது என்ன என்பதை நாம் அறிந்து கொண்டால் நாமே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சுய பரிசோதனையில் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

அதனால் அந்த வரலாற்றைக் கொஞ்சம் திருப்பி பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியை எடுத்துக் கொண்டால் உலகின் ஒரு மோசமான சகாபதம் என்றே சொல்லலாம். முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு பல அப்பாவி நாடுகளும் இரையாக்கப்பட்ட காலக்க்கட்டம் அது.

அந்த சமயத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஆனால் அதே வேளையில் உலகப்போரினால் ஏற்பட்ட மறைமுக பலன்களை சொகுசாக அமெரிக்கா அனுபவித்துக் கொண்டிருந்தது.

முதல் உலகப்போர் நடக்கும் சமயம் ஐரோப்பாவில் யுத்தம் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. அதனால் தொழில் வளர்ச்சி ஒன்றும் பெரிதாக ஏற்படவில்லை. இந்த சமயத்தில் அமெரிக்கா தான் தனது உற்பத்தி பொருட்களை அங்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது. அதனை ஐரோப்பிய நாடுகள் வாங்கி பயன்படுத்திக் கொண்டு இருந்தன.



ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்களிடம் இருக்கும் காசு கரைந்த பின்னர் அமெரிக்காவே கடனும் கொடுத்தது. அமெரிக்கர்கள் கடன் கொடுக்க  ஐரோப்பியர்கள் அந்த காசை வைத்து மீண்டும் அமெரிக்க பொருட்களை வாங்கி வந்தனர். அதே போல் போருக்கும் பயன்படுத்தி வந்தனர்.

ஆழமாக பார்த்தால் கடன் வாங்கி பொருட்களை ஊக்குவிக்கும் கிரெடிட் கார்டு பொருளாதாரம் தான் இது. ஆனால் அமெரிக்கர்களோ தேவை அதிகரித்து தமது தொழில் தான் பல மடங்கு வளர்கிறது என்ற தவறான எண்ணத்தில் தொழிற்சாலைகளில் பெரிய அளவில் உற்பத்தியை அதிகரித்தனர். ஐரோப்பியர்கள் ஒரு வேளை கடனைத் திருப்பிக் கொடுக்க முடியா விட்டால் என்ன ஆகும் என்பதற்கு தயாராக இருக்கவில்லை.

ஒரு கட்டத்தில் முதலாம் உலகப்போர் முடிய அமெரிக்காவோ தான் கொடுத்த கடனை ஐரோப்பிய நாடுகளிடம் திருப்பி கேட்டது.  ஆனால் ஐரோப்பாவில் சுத்தமாக காசு கிடையாது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் ஜப்தி நிலைக்கு தான் சென்று இருந்தன. அதன் பின் அவர்களிடம் தோற்ற ஜெர்மனியிடம் ஆட்டையை போட்டு ஒரு சிறு பகுதியை திருப்பிக் கொடுக்க முடிந்ததே தவிர மீதியைக் கொடுக்க முடியவில்லை.

இது தவிர அமெரிக்கா கடன் கொடுத்தால் தான் அடுத்தவேளை பொருட்களை ஐரோப்பியர்கள் மீண்டும் அமெரிக்காவிடம் வாங்க முடியும் நிலை. ஆனால் அமெரிக்கா கடன் கொடுப்பதை நிறுத்தியது. இதனால் ஐரோப்பியர்கள் இறக்குமதி செய்து பொருட்கள் வாங்குவது அப்படியே நின்று போனது.

ஆனால் அமெரிக்க நிறுவனங்களோ பொருளாதார வளர்ச்சி என்ற மாயத் தோற்றத்தில் ஏகப்பட்ட பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து வைத்து இருந்தனர். இதனை ஏற்றுமதி செய்து காசு பார்க்கலாம் என்றால் திடீர் என்று இறக்குமதி செய்ய ஆள் இல்லை.

சரி உள்நாட்டிலாவது விற்கலாம் என்று நினைத்தால் அங்கு அதை விட மோசமான சூழ்நிலை.



2010களில் கம்பெனிகளின் உரிமையாளர்கள் 75% வளர்ச்சியை சந்தித்து இருந்தனர். ஆனால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வெறும் 10% ஊதிய உயர்வை தான் அளித்து இருந்தன. அது அவர்கள் அன்றாட செலவுகளுக்கே சரியாக இருந்த போது புதிதாக ஆடம்பர பொருட்கள் வாங்க கையில் காசில்லை. அதனால் அவர்களும் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

இன்னும் ஆழமாக பார்த்தால் 0.1% பணக்காரர்கள் நாட்டின் 25% சொத்தை ஆக்கிரமித்து இருந்தனர். இது ஒரு செல்வ சமநிலையின்மையை ஏற்படுத்தி இருந்தது.

இந்திய அம்பானிகள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது. நாட்டின் வளத்தை சரியாக பகிராவிட்டால் கடைசியில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளை அவர்கள் தான் வாங்க வேண்டி இருக்கும்.

இப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விலை போகாமல் அப்படியே தொழிற்சாலைகளில் முடங்கின.

அடுத்த பாகத்தில் தொடரும்..
ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன? -2

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக