செவ்வாய், 23 ஜூன், 2015

சீனாவில் கம்யூனிச சுற்றுலா அனுபவங்கள்..

கடந்த நான்கு நாட்களாக சீனாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம். இந்த சிறிய விடுமுறைக்கு பிறகு மீண்டும் சீனம் தொடர்பான கட்டுரையுடன் தொடர்கிறோம்.


சீனாவை பொறுத்த வரை மிகவும் பழமையான ஒரு கலாசார வரலாற்றை கொண்ட நாடு என்று சொல்லலாம். அதே போல் அவர்கள் மொழியும் தமிழைப் போல் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்பான வரலாறு உடையது.



தமிழர்களை போல் கலை, இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். நுணுக்கமான கலைப் பொருட்களை அருமையாக செதுக்கிறார்கள்

நாம் பிஜிங் நகருக்கு சென்று இருந்தோம். அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் தான் சீன பெருஞ்சுவர் உள்ளது. அதனை சீனா முழுவதும் வளைத்து வளைத்து கட்டி உள்ளார்கள். கிழக்கில் வட கொரியாவில் நீளும் சுவர் மேற்கே மங்கோலியாவை தாண்டியும் செல்கிறது.

பல கிராம மக்கள் தனித்தனியாக சுவர் கட்டி பின்பு அவை அனைத்தும் இணைக்கப்பட்டு பெருஞ்சுவராக மாறி உள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுவர் கட்டும் வேலைகள் தொடர்ந்து உள்ளன. உலக அதிசயத்திற்கு தகுதியான ஒன்று தான்.

சிறந்த குதிரை படை வீரர்களான மங்கோலியர்கள் ஒரு கட்டத்தில் சீனா முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அவர்கள் படை எடுப்பதை தடுப்பதற்காக தான் சீன பெருஞ்சுவர் கட்டப்பட்டது.

தலைநகரம் தவிர்த்து மற்ற இடங்களில் பெருஞ்சுவர் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது. அதனை பரமாரிப்பது என்பதும் எளிதல்ல என்றே தோன்றுகிறது.

சீனாவை பொறுத்த வரை இரண்டாயிரம் ஆண்டுகள் மன்னராட்சியில் தான் இருந்து உள்ளது. அதுவும் கடந்த நூற்றாண்டு வரை மன்னராட்சி தான்.

அதனால் எங்கு சென்றாலும் ஆடம்பர அரண்மனைகளாக கட்டி உள்ளனர். அதில் ஒரு மன்னருக்கு 500 மனைவிகள் என்று கைடு சொன்னார். எப்படி சமாளித்தார் தான் என்று தான் தெரியவில்லை?

இவ்வாறு Forbidden City என்ற தலைமை அரண்மனை, கோடைகால ஓய்வு அரண்மனை என்று பட்டியல் நீள்கிறது. இவைகளை நடந்து பார்க்க அதிக எனெர்ஜி தேவை. எல்லாம் குடிமக்கள் பணத்தில் கட்டிய மிகப்பெரிய அரண்மனைகள்.



இவர்களை ஒப்பிடும் போது சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மன்னர்களின் அட்டூழியங்கள் தான் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வழி வகுத்துள்ளது என்று சொல்லலாம். சன் யாட்சென் என்பவர் தான் முதலில் மன்னாராட்சியை ஓழித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் சிறிய காலத்திலே ராணுவத்தால் அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அதன் பின்னர் மாவோ கம்யூனிச சிந்தாந்தத்தில் சீனாவை ஒருங்கிணைத்தார். நமது ஊரில் காந்தியை போல் மாவோவை தேச தந்தையாகவே கருதுகிறார்கள். நமது மாவோயிஸ்டுகள் இவரது கொள்கையை தான் பின்பற்றுகிறார்கள்.

எங்கும் அரசு தலையீடு இருப்பதால் லஞ்சம் அதிகமாகவே உள்ளது என்று கருதுகிறார்கள். இது போக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் என்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனால் நான்கு நாட்கள் ஒரு வழக்கமான வாழ்கையில் இருந்து விலகி இருந்ததை உணர முடிந்தது.

பீஜிங் நகரில் கட்டமைப்பு வசதிகள் நல்ல வளர்ந்துள்ளது. நல்ல மெட்ரோ ரயில் இணைப்பு, அகலமான சாலைகள், மேம்பாலங்கள், பெரிய கட்டிடங்கள், தூய்மையான நகரம் என்று நன்றாக உள்ளன.

கண்டபடி, கருத்து சுதந்திரங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இன்டர்நெட் முதல் பல விடயங்களில் அரசின் தலையீடு மிக அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போலிஸ் உள்ளது. ஒவ்வொரு மெட்ரோ நிலையங்களில் சோதனைகள் நடைபெறுகின்றன.



Freedom, Multi-Party Election போன்ற வார்த்தைகளை இன்டர்நெட்டில் தேடினால் பிடித்து கொண்டு சென்று விடுவார்களாம். அதனால் வளர்ச்சி என்பது சுதந்திரத்தை பறித்து தான் வாங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சுத்தமாக பிடிக்காது போல.

20 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து 10 சதவீத வளர்ச்சியை சீனா கொடுத்துள்ளது. ஆனாலும் இன்னும் இன்னும் அதிக அளவில் பிச்சை எடுப்பவர்களை பார்க்க முடிகிறது. சுற்றுலா பயணிகளிடம் முடிந்த வரை காசு வசூல் செய்கிறார்கள். குற்ற விகிதம் அதிகமாகவே இருப்பதாக சொல்கிறார்கள்.

இதனால் வளர்ச்சி எல்லா நிலைகளிலும் சென்றடைந்துள்ளதா என்ற சந்தேகமும் வருகிறது.

வாழ்க்கை தரத்தில் இந்தியாவில் நடப்பவைகள் அங்கும் நடக்கின்றன. தென் இந்தியா, சீனா என்ற இரண்டை ஒப்பிட சொன்னால் தென் இந்தியா தான் வாழ ஏற்ற இடமாக கருதலாம்.

உற்பத்தி துறைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விவசாயமும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் செலவுகள் குறைவு தான்.

தற்போது சீனாவில் ரியல் எஸ்டேட் மந்தமாக இருப்பதை பத்திரிகைகளில் பார்க்க முடிந்தது. அங்கு பொருளாதார தேக்கம் ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள். நமது பங்குச்சந்தை உயர்விற்கு இதுவும் ஒரு காரணம் தான்.

சாப்பாடு ஸ்டைலில் இந்தியாவுடன் ஒற்றுமைகள் உள்ளன. கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் அதிக எண்ணெய், அதிக காரம் என்று இருக்கிறது. சிக்கன், முட்டை சாப்பிடுபவர்களுக்கு பெரிய அளவில் உணவு பிரச்சினை இல்லை.

மொத்தத்தில் ஒரு புதிய கலாசார உணர்வை பெறுவதற்காக சீனா செல்லலாம். ஆங்கிலம் அவர்களுக்கு சுத்தமாக வராது. அதனால் இன்டர்நெட் மூலம் திட்டமிட்டு எங்கும் செல்வது நல்லது. சுற்றுலா நிறுவனங்கள் மூலம் வருவது அதிக பாதுகாப்பானது.

ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.

தொடர்புடைய கட்டுரைகள்:
தெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக