செவ்வாய், 23 ஜூன், 2015

இனி கார்டு பயன்படுத்துபவர்கள் வரிப் பலன்களை பெறலாம்

நமது நாட்டில் தான் பணப் பரிவர்த்தனைகளுக்கு எலெக்ட்ரானிக் மீடியம் அவ்வளவாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.


டெபிட் போன்ற கார்டுகளை பயன்படுத்தினால் வங்கிகளுக்கு 5% அதிகம் செலுத்த வேண்டும் என்று கூறி அந்த தொகையை நம்மிடம் பெற்று விடுகின்றனர். ஆனால் வங்கிகளுக்கு 1% தான் கட்டணம் செலுத்துகின்றனர் என்பதே உண்மை.



வியாபாரிகள் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும் என்பதற்காகவே கார்டுகளை தவிர்த்து வருகின்றனர். இப்படி சிறுக சிறுக பெருகும் பணம் ஒரு கட்டத்தில் பெரிய அளவில் கருப்பு பணமாக மாறி விடுகிறது.

இது போக, ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு அரசிற்கு கணிசமாக செலவு ஆகிறது.  எலெக்ட்ரானிக் மீடியம் இல்லாததால் போலி ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் புழங்கி வருகின்றன. அதனை கண்காணிப்பதும் கடினமான செயலாக உள்ளது.

இந்த நிலையில் அரசு எலெக்ட்ரானிக் கார்டுகளை ஊக்குவிக்க சில சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

முதலில் நுகர்வோர்களுக்கு, கார்டுகளில் செலவிடும் தொகைக்கு சில வருமான வரி பலன்கள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. எவ்வளவு பலன்கள் இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை. கொரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் இருந்து நல்ல பலன்களை கொடுத்து வருகிறது.

மறுமுனையில். வியாபாரிகள் அதிக அளவு எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகளை நடத்தினால் 50% அளவு வரிப் பலன்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகளுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 1% என்பதிலிருந்து கணிசமாக குறைக்கப்பட உள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேல் நடக்கும் பரிவர்த்தனைகள் கட்டாயமாக எலெக்ட்ரானிக் முறையிலே நடக்க வேண்டும் என்றும் விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது.

நமது நாட்டில் புதிய வரிகள் விதிக்க தேவையே இல்லை.வர வேண்டிய வரிகளை ஒழுங்காக வசூலித்தாலே அரசுக்கு தேவையான வருமானம் கிடைத்து விடும்.

அந்த வகையில் இந்த விதிமுறைகள் சாத்தியமான ஒன்றே. அதிக அளவில் பலன்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

ஒரே கல்லில் பல மாங்காய்களை பெறும் திட்டம்..வரவேற்போம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. கட்டுமான பொருள் வாங்கும் கடைகளில் பில்லே தருவதில்லை. கேட்டால் VAT வரி கட்டனும் என்பார்..... உடனே பில் வேண்டாம்...... என்று கூறி பில் வாங்காமலே பணம் கொடுத்துவிட்டு் வந்துவிடுவார்கள்.... இப்படி இருக்க இதை செயல்படுத்துவது அவ்வளவு இலேசு பட்ட காரியமில்லை என நினைக்கிறேன்........

    பதிலளிநீக்கு