வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பங்குச்சந்தை சரிவுகளில் மீடியாக்கள் ஏற்படுத்தும் பதற்றங்கள்

இன்றைய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் தான் லாபத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பங்குகளை விற்றதாக தெரிகிறது.


இவ்வளவு நாள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான் விற்று வந்தனர். அவர்களுக்கு தற்போது நம்மை விட நல்ல சந்தைகள் கிடைத்துள்ளன. நியாயமான காரணமும் கூட.



ஆனால் பொறுமையாக இருந்த நமது முதலீட்டாளர்கள் தற்போது பதற்றமடைய துவங்கியுள்ளனர். அதனால் தான் கிடைத்த லாபம் போதும் என்று விற்க துணிந்து விட்டனர்.

இந்த பதற்றத்திற்கு நமது மீடியாவை முதலில் காரணமாக சொல்லலாம்.

ஆறு மாதங்கள் முன்பு வரை 35,000க்கு உடனே போகும் என்று சொல்லி வந்தவர்கள் இன்று 22,000க்கு செல்லும் என்று சொல்லத் துவங்கி விட்டனர்.

எமக்கு வரும் மின் அஞ்சல்களில் ஸ்க்ரீன் ஷாட்டோடு சில செய்திகளை நண்பர்கள் காண்பிப்பதில் இருந்து இந்த பதற்றம் நன்றாகவே தெரிகிறது.

முதலில் இதுவரை 35,000க்கும் போகவில்லை. 22,000க்கு போகுமா என்றும் தெரியவில்லை.

ஆனால் இந்தியாவில் சந்தையை மேலே தூக்கி செல்லும் காரணிகள் இல்லையே தவிர, மற்ற நாடுகளைப் போல் பொருளாதாரம் மோசமாக சென்று விடவில்லை.

அப்படியே 22,000க்கு சென்றாலும் நமது சந்தை உடனே மீண்டும் இதே புள்ளிகளுக்கு மேலே எழுந்து விடும் என்பதே எமது நம்பிக்கை.

2008ம் வருடம் என்று நினைக்கிறேன். 19,000 புள்ளிகளுக்கு அருகில் சந்தை வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

அமெரிக்க வங்கிகள் இழுத்து மூடல், சத்யம் ஊழல், ஐடி  நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கல் என்ற தொடர் சிக்கல்களால் ஒரு சில வாரங்களில் இந்திய சந்தை 61% சரிந்து 8,000 புள்ளிகளுக்கு சென்றது. ஆனால் சரிந்த கால இடைவெளி கூட எடுக்காமல் மீண்டும் சந்தை 16,000 புள்ளிக்கு அருகில் வந்து நின்றது.

தற்போது அந்த அளவு பொருளாதார வீழ்ச்சி உலக அளவிலும் இல்லை. முன்பை விட இந்திய அடிப்படைகள் நன்றாக உள்ளன.

அதனால் சரியும் என்று சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். அப்படியே சரிந்தால் வாங்கி சராசரி செய்து கொள்ளலாம். ஆனால் நாம் செய்த முதலீடுகள் மீது நீண்ட கால நோக்கில் நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியமானது.

நாம் வாங்கும் பங்கு சந்தை சரிவுகளால் கீழே செல்கிறதா? அல்லது நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாக சரிகிறதா? என்று பார்க்கவும்.

பங்குச்சந்தை சரிவுகளால் சரிகிறது என்றால் வாங்கி சராசரி செய்து கொள்ளலாம். ஆனால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் குறை இருந்து சரிந்தால் சரியான நேரத்தில் அந்த பங்கினை விற்று வெளியேறலாம்.

மீடியாக்களில் செய்திகளை நம்பலாம். ஆனால் அனுமானங்களாக சொல்லும் போது நாம் அதனை நன்கு ஆராய வேண்டும்.

அவர்கள் சொல்லும் அத்தனையும் நிதர்சனமாகி விடாது. அது எமது தளத்தையும் சேர்த்து தான்.

மனித மனம் குரங்கு போன்று அதிகம் தாவும் என்று சொல்வார்கள். அதிலும் பண விசயத்தில் அதிகமாக தாவும்.

கடந்த வாரம் ஒரு நண்பர் எமது பங்குச்சந்தை முதலீடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் லாபத்தை இந்த சரிவிற்கு முன்னர் விற்று இருந்தால் நல்ல லாபம் பார்த்து இருக்கலாமே என்றார்.

அதற்கு சொன்ன பதில் இது தான்..

முதலில் சரிவு எப்பொழுது வரும் என்று எனக்கு தெரியாது, எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான் விற்று லாபம் பார்த்து இருக்க முடியும்.

அப்படியே விற்று லாபம் பார்த்து இருந்தாலும் பங்குச்சந்தையில் வைத்து இருப்பவன் பணமாக வைத்து இருக்க மாட்டான்.

மீண்டும் வேறு பங்குகளில் முதலீடு செய்து இருப்பேன். அந்த பங்குகளை முன்பு போல் ஆராய்ந்து இருக்க மாட்டேன். அவசரத்தில் முதலீடு செய்து இருப்பேன். அதனால் நஷ்டம் முன்பிருந்த பங்குகளில் வைத்திருந்த நஷ்டத்தை விட அதிகமாக சென்றிருக்கவும் வாய்ப்பு உண்டு என்றோம்.



சில சமயங்களில் தெரியாத பேய்களை விட தெரிந்த பிசாசுகளை சமாளிப்பது எளிது.. பொண்ணு பார்க்க போகும் போது அம்மா சொன்ன பழமொழி இது. ஆனால் பங்குச்சந்தைகளில் தான் அதிகம் பயன்படுகிறது.

குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எமது பதில் பொருந்தி போகாமல் இருக்கலாம்.

ஆனால் நீண்ட கால முதலீட்டில் வைத்து இருப்பவர்கள் பங்குகளை விற்பதற்கு காரணம் என்பது நிறுவனத்துடன் தான் ஒன்றிப் போக வேண்டும். சென்செக்ஸ் புள்ளிகளில் அல்ல..

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக